Thursday, December 27, 2012

சுலைமான் தாத்தாவின் தோட்டம்





செவ்வக வடிவில் அமைந்திருக்கும் ஐந்து மாடி குடியிருப்புப்பகுதி, அதன் நடுவில் உள்ள இடத்தில் ஒரு பெரிய பூங்கா... குடியிருப்பின் கீழ்த்தளம் முழுவதும் வணிக நிறுவனங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அதில் ஒரு பகுதியில் எங்கள் புதிய அலுவலகம் அமைந்துள்ளது... 

இந்த அலுவலகத்திற்கு சென்ற நாள் முதலே அவரைக் கவனித்து வந்திருக்கிறேன்... வயதான பெரியவர்...  பெயர்: சுலைமான்.

புன்னகையுடன், சலாம் அலைக்கும் பாய் ஜான் - வாஅலைக்கும் சலாம் என்று மட்டும் சொல்லிக் கொண்டு நாள்தோறும் தொடர்ந்தது எங்கள் நட்பு. 

என்னவோ ஓர் ஈர்ப்பால் அவரோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசத் தொடங்கினேன்... எந்நேரமும் மரம் செடி கொடிகளோடுதான் இருப்பார்... ஓய்வாக அவர் இருந்து நான் பார்த்த நிகழ்வுகள் மிகவும் குறைவே... ஏன் இல்லையென்று கூடச் சொல்லலாம்... நான் அவரோடு பேசிய பொழுதுகளில் தன் வேலையை விட்டுவிட்டு அவர் என்னோடு பேசியதில்லை... சலாம் சொல்லும்போதும், நலமா இருக்கிறீர்களா எனக் கேட்கும் போது மட்டுமே நிமிர்ந்து நம் முகத்தைப் பார்ப்பார்.
 




பின்பு, நீண்ட குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுதல், களை வெட்டுதல், கூடுதலாக வளர்ந்திருக்கும் செடிகளை அழகாக ஒழுங்கு படுத்துதல் என தன் பணியைச் செய்து கொண்டேதான் பேசுவார்...  அவருக்கு யாருடனாவது பேசுவது மிகவும் பிடிக்கும், இருப்பினும் யாரையும் தேடிப் போய் பேசுவதில்லை, தான் வேலை செய்து கொண்டிருக்கும் போது யாராவது வந்து பேசினால் அவர்களோடு பேசுவார். அவ்வளவுதான்...

அவரோடு பேசிக்கொண்டிருந்ததில், சில வியப்பான நிகழ்வுகள் எனக்குண்டு... அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.... பகிர்வதில் பெருமிதமும் கொள்கிறேன்...

எத்தனை ஆண்டுகளாக வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சரியாகத் தெரியவில்லை, அமீரகத்திற்கு வேலைக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும், எனக்கு மகன் பிறந்தான் அவன் பெரியவனானதும் திருமணம் செய்து வைத்தேன், இப்பொது அவனுக்கு மகன் இருக்கிறான் என்று கூறி தனது பேரனின் படத்தை போட்டோ ஆல்பத்திலிருந்து எடுத்துக் காட்டினார்...  நாம் அந்த ஆல்பத்தை பார்க்கும் போது அவர் கண்ணில் ஒரு பெருமையும் மகிழ்ச்சியும் தெரிந்தது.



இனி அவர் சொன்னதை அவர் சொல்வது போலவே கேட்போம்...

நான்: எத்தனை ஆண்டுகளாக இந்த வேலை பார்க்கிறீர்கள்

அவர்: இங்கு வந்ததிலிருந்தே இந்த வேலைதான் பார்க்கிறேன்

நான்: நீங்க இங்க வந்த பொழுது, இந்த இடம் எப்படி இருந்தது?

அவர்: வெறும் மண்ணுதான் இருந்தது... இதைப் பூங்காவாக மாற்றுவதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலை.

நான்: நீங்கதான் ஒவ்வொன்னா உருவாக்குனீங்களா?

அவர்: ஆமாம், முதலில் இந்த மண்ணில் செடி வளர்க்க ரொம்ப கடினமா இருந்தது... கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு செடியா நட்டேன்... தண்ணீர் விட்டாலும் பட்டுப் போகும்.... நாள்தோறும் தவறாமல் தண்ணீர் விடுவேன்... கருகிய இலைகளை அகற்றி விடுவேன்.... எப்பவும் செடிகளைப் பச்சையா பார்க்கிறது எனக்குப் பிடிக்கும்...

நான்: இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்லுங்க...

அவர்: ஆமாம்... எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை, இந்த மரம் செடி கொடிகளும் மனிதன் மாதிரித்தானே, அவைகளை ரொம்பவும் நேசிக்கிறேன்... எந்தச் செடி நல்லா  வளருது, எது காய்ந்து போயிருக்கு, எது பிழைக்கும் எது செத்துப் போகும் என எல்லாம் எனக்கு அத்துப்படி... என் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களை நேரத்தை இந்த இயற்கையோடு செலவளித்து விட்டேன்... வேற எதுவும் எனக்குத் தெரியாது....

நான்: இங்க இருக்கிறவங்களுக்கு உங்களைப் பற்றி தெரியுமா?

அவர்: ம்ம்ம் எல்லாருக்கும் தெரியும், பார்க்கும் போது சிலர் சலாம் சொல்லுவாங்க... புதிதாய் குடி வருபவர்கள் போகப் போகத் தெரிஞ்சுக்குவாங்க... சிலர் மட்டும் என்னிடம் பேசுவார்கள். பலர் புன் சிரிப்புடன் என்னைக் கடந்து செல்வார்கள்...

நான்: அவர்கள் இந்தப் பூங்காவை எப்படி பாத்துக்கிறாங்க....

அவர்: கோடைகாலத்தில் யாரும் இங்கு அதிகம் நடமாட மாட்டாங்க... வெயிலில் யாரும் இங்க நிற்க கூட முடியாது.... நான் மட்டும் தவறாமல் தண்ணீர் பாய்ச்சிருவேன்... குளிர்காலத்தில் நிறைய பேர் குழந்தைகளுடன் வந்து விளையாடுவார்கள்... இருக்கைகளில் அமர்ந்து பேசுவார்கள்.... அப்போது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.  

ஆனால், சிலர் பூக்களை வெடுக்கென பிடுங்குவது , இலைகளை கிள்ளி எறிவதும் எனக்குப் பிடிக்காது... அதுவும் மனிதன் மாதிரித்தானே, ஏன் அதன் உறுப்பை சேதப்படுத்தணும்...பார்த்து ரசிக்கத்தான் பூக்கள், அதைப் பிடுங்கி கையில் வைத்து கசக்கி எறிபவர்களை காணும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்... ஆனால் நான் ஒன்றும் சொல்வதில்லை....




இப்படியாக அவருடன் பேசிக் கொண்டிருந்த போது நான் அறிந்த தகவல்கள் இவை. இன்னும் நிறைய பேசியிருக்கிறேன் அவருடன்.... மரம் செடி கொடிகளை எப்படி பராமரிப்பது, எப்படி அழகு படுத்துவது என பல தகவல்களைப் பேசுவார்...அவருக்கு செடி கொடிகளோடு படம் எடுத்துக் கொள்ள ரொம்ப பிடிக்கும்... நான் அந்த வழியாக செல்லும் போதெல்லாம் அவரைப் படமெடுக்கச் சொல்லுவார். மொபைல் கேமராவில் படமெடுத்து அவரிடம் காட்டுவேன், அவருக்கு அது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்....

வெறும் மண்ணாக இருந்த இடத்தில், என்னென்ன வளர்த்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள விருப்பமா?

அரச மரம், வேப்ப மரம், ஈச்ச மரம், நிறைய பூச்செடிகள், பூசணிக்காய், முருங்கை மரம், ஆவாரம் பூ, செவ்வந்திப் பூக்கள்,இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத மரங்கள், பூச்செடிகள் என அழகான பூங்காவை உருவாக்கிப் பராமரித்து வருகிறார்.



எத்தனையோ பேர் மரம் நடுகிறேன் என பேருக்கு போட்டோ மட்டும் எடுத்து விட்டு, பின்பு கண்டுகொள்ளாமல் செல்லும் இவ்வுலகில் சுலைமான் தாத்தாவை மரியாதையோடு பிரமிப்பாய்ப் பார்க்கிறேன்... என்னதான் சம்பளத்திற்கு வேலை பார்த்தாலும், அவரின் ஈடுபாடும், இயற்கையின் மேல் கொண்ட காதலும், வேலையையும்  தாண்டி அவர் செய்யும் பெரும் சேவையாகவே எனக்குப்படுகிறது...

அரிய மனிதர்களை எங்கோ செய்தித்தாளில் படித்திருப்போம், ஆனால் நம்மைச் சுற்றியே சில அரிய மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சுலைமான் தாத்தா மூலம் நான் அறிந்து கொண்டேன். 

இந்தப் பதிவில் இருக்கும் பூக்கள் செடிகள் படங்கள் எல்லாம் அவர் உருவாக்கிய தோட்டத்தில் எடுத்தவைகள்தான்...


மேலும் சில படங்களைக் காண இங்கு செல்லுங்கள்:

நன்றி.



Monday, December 17, 2012

பாலைவனப் பயணம் - Desert Safari



அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே,

ஒவ்வொரு ஊரிலும் பார்க்கவேண்டிய இடங்கள் எத்தனை எத்தனையோ இருக்கும். பெரும்பாலும் உள்ளூர்க்காரர்கள் பார்த்திராத அல்லது கண்டு கொள்ளாத இடங்களை வெளியூரிலிருந்து சுற்றுலா வருபவர் கண்டு ரசித்துச் செல்வார்கள். மதுரையிலேயே பிறந்து வளர்ந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலை முழுமையாகச் சுற்றிப்பார்த்தவர்கள் கொஞ்சம் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள்... ஆனால் அதே மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிப்பார்க்க இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், உலகெங்கும் இருந்தும் பலர் நாள்தோறும் வந்து செல்கிறார்கள்.

ஒருமுறை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த அண்ணபூரணி கோயிலைப் பற்றி உள்ளூர்க்காரர் ஒருவர் சொன்ன தகவல் என்னை ஆச்சரியப்படுத்தியது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து பிடி மண் எடுத்தே அண்ணபூரணி கோயிலைக் கட்டினார்கள் என்று அவர் கூறினார். எந்தளவுக்கு அந்தத் தகவலில் உண்மை என்று எனக்குத் தெரியவில்லை, இருப்பினும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி அவர் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது எனக்குப் பெருமையாகவும், உள்ளூர மகிழ்ச்சியாகவும் இருந்தது... நானும் மதுரைக்காரன்ல... :-)


டெசர்ட் சஃபாரி என்று சொல்லிவிட்டு மதுரையிலேயே நிற்கிறேன் என்று பார்க்கிறீர்களா?!
சரி வாருங்கள் டெசர்ட் சஃபாரிக்கு கூட்டிச் செல்கிறேன்.

அமீரகத்தில் வசிப்பவர்களும் , சுற்றுலா வருபவர்களும் கண்டிப்பாக ஒரு முறையாவது பயணித்து ரசிக்கவேண்டிய ஒன்று பாலைவனப் பயணம் எனும் டெசர்ட் சஃபாரி (Desert Safari).

நாம் பயணத்தில் காணப்போகும் பட்டியல்:

> பாலைவனப் பயணம்
> ஒட்டகப் பயணம்
> சிற்றுண்டி
> ஹூக்கா
> மெகந்தி
> கந்தூரா டான்ஸ்
> இரவு உணவு
> பெல்லி டான்ஸ்

பாலைவனம்:

உள்ளூர் அரபி நண்பர் என்னிடம் சொன்னது, பாலைவனமும் கடலும் ஒன்று... உள்ளே நெடுந்தொலைவு சென்று விட்டால் எல்லாத்திசையும் மணல்தான்... திக்குத்தெரியாமல் சிக்கிக் கொள்வோம்.... சரியான முன் அனுபவத்தோடு பயணம் செய்தால் மட்டுமே, எளிதாக திரும்பி வர முடியும்... 

உண்மைதான்... எங்கு பார்த்தாலும் மணல் மணல் மணல்... 




டெசர்ட் சஃபாரி:

இந்தப் பயணம் செய்வதற்கென்று நிறைய சுற்றுலா நிறுவனங்கள் இங்கு இருக்கின்றன. அவர்களிடம் பணம் கட்டி பதிவு செய்து விட்டால் நம்மை அழைத்துக்கொண்டு செல்வார்கள். ஒரு ஆளுக்கு 150 திர்ஹாம்ஸ்லிலிருந்து 300 திர்ஹாம்ஸ் வரை Desert Safari Packager tour கிடைக்கிறது. பாலைவன மணலில் ஓட்டுவதற்கு 4X4 வண்டிகள் பயன்படுத்துகிறார்கள், பெரும்பாலும் டொயோட்டா லேண்ட்க்ருசர்.  

பாலைவனத்தில் அணிவகுத்துச் செல்லும் கார்கள்:



சரி வாங்க உள்ளே போகலாம்:

பாலைவனத்திற்குள் நுழையும் முன்பு கார் டயரின் காற்றின் அளவை பாதியாக குறைத்துக் கொள்கிறார்கள். முழுமையாக காற்று இருந்தால் மணலுக்குள் சக்கரம் பதிந்து விடும், ஆகவே காற்றின் அளவை பாதியாக குறைத்துக் கொண்டு பாலைவனத்திற்குள் பயணம் தொடங்குகிறோம். 

இந்த ஓட்டுனர்கள் நல்ல பயிற்சி எடுத்திருக்கிறார்கள். மேடும் பள்ளமுமாக இருக்கும் பாலைவனத்தில் கார் பாய்ந்து செல்கிறது. காரை செங்குத்தாக மணல் மேட்டில் நிறுத்துவதும், செங்குத்தாக நின்று கொண்டிருக்கும் காரை அதே வேகத்தில் பின்னால் செலுத்துவது, ஒரு பக்கமாக காரை சாய்த்து நிறுத்துவதும் என பல வித்தைகளைக் காட்டினார் ஓட்டுனர். எனக்கு ஏசி காருக்குள் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்து விட்டது. மகிழ்ச்சியான பயம் கலந்த பயணமாக இருந்தது.

ஒரு மணல் மேட்டில் ஒரு ஐந்து நிமிடம் ஓய்வெடுத்து விட்டு, சுற்றுலா நிறுவனத்தார்கள் பாலைவனத்திற்குள் அமைத்திருக்கும் கேம்ப் எனும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.



செல்லும் வழியில் சில ஆமீரக இளைஞர்கள் தங்கள் சொந்த வண்டியில் பாலைவனத்தில் பாய்ந்து செல்கிறார்கள். இந்த வண்டிகள் பாலைவனத்திற்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்டவைகள்.



பயணத்தை முடித்து மாலை மங்கும் நேரத்தில், கேம்ப் எனும் இடத்திற்கு சென்று சேர்ந்தோம். சுற்றுலா தொகுப்பின் ஒன்றான ஒட்டகப்பயணம் அங்கே செல்லலாம். ஒட்டகத்தில் ஏறி பாலைவன காற்றை அனுபவித்து ஒரு சுற்று சுற்றி விட்டு வரலாம்.... பாலைவனத்திற்குள், காரில் பாய்ந்து பறந்து பயணம் செய்து விட்டு வந்த பிறகு இந்த ஒட்டகப்பயணம் மனதுக்கு இதமாக இருந்தது.



ஒட்டகப்பயணம் முடித்த பிறகு, கேம்பிற்குள் சென்றால் அங்கு அழகான மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் இருக்கைகள் போடப்பட்டு விளக்குகள் வைக்கப்பட்டிருக்கின்றன. 

ஷீஷா பார், மெஹந்தி ஏரியா, பரிசுப்பொருட்கள் விற்கும் கடை, உணவு பரிமாறும் இடம் என அனைத்தும் அந்த கேம்பிற்குள் உள்ளன.
ஷீஷா பாரில் சென்று ஷீஷா பயன்படுத்தலாம்... மெஹந்தி ஏரியாவில் பெண்களுக்கு கைகளில் அழகாக மருதாணி போட்டு விடுகிறார்கள்....

பின்பு சிக்கன் ஷவர்மா மற்றும் ஃபலாஃபல் சிற்றுண்டி உண்டு விட்டு கந்தூரா நடனம் பார்க்கலாம். மேடையில் கந்தூரா நடனமாடுபவர் வந்ததும் கைதட்டல்கள் பறக்கின்றன. ஒரே இடத்தில் நின்று கொண்டு சுமார் பத்து நிமிடம் சுற்றுவது நமக்கு இயலாத செயல்.  

இந்த காணொளியைப் பாருங்கள். ஒரு இடத்தில் நின்று கொண்டு சுற்றிக் கொண்டேயிருக்கிறார். இவரது உடை இவர் சுற்ற சுற்ற வட்டமாக மாறி பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது. அவருடைய நடனத்தைப் பார்த்த பிறகு நமக்கு கொஞ்சம் நேரம் தலைசுற்றுவது உறுதி.

நடனமாடியவர்:


நடனத்தில் ஒரு காட்சி:



கந்தூரா நடனம் முடிந்த பிறகு, இரவு உணவு புஃபே முறையில் வழங்கப்படுகின்றது. நிறைய கபாப் வகை உணவுகள், அரபிக் ரொட்டிகள், நூடுல்ஸ், ஹமூஸ், பார்பிக்யூ என வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு மேடைக்கருகே வந்து அமர்ந்து கொள்ள வேண்டியதுதான். 

இரவு உணவுக்குப் பின் பெல்லி டான்ஸ் நடைபெறுகிறது. ஒரு அழகான பெண் வந்து பெல்லி டான்ஸ் ஆடுகிறார்.  நம்மூரில் கரகாட்டம் ஆடும் போது, தலையில் கரகத்தை வைத்து ஆடுவது போல, இவர் ஒரு வாளை இடுப்பிலும் பின்பு  தலையிலும் வைத்து கீழே விழாமல் ஆடுகிறார். 




பெல்லி நடனம் முடிந்தபிறகு, காரில் ஏறி இரவு நேர பாலைவனப்பயணம் மீண்டும் தொடர்கிறது. இருட்டில் பாலைவனத்தில் பாய்ந்து செல்லும் கார் கொஞ்சம் நம்மை பயமுறுத்துகிறது. ஒரு வழியாக ஒரு வித்தியாசமான பயணம் செய்து விட்டு, வீடு வந்து சேர்ந்தேன்.


படங்கள் அனைத்தும் நான் எடுத்தது.

நன்றி: வீடியோ இணையத்தில் கிடைத்தது.

அனைவருக்கும் நன்றி.






Sunday, December 2, 2012

41வது UAE National Day

Spirit of the Union

வணக்கம் நண்பர்களே,

அமீரகம் வாழ் மக்கள் அனைவருக்கும் தேசிய நாள் வாழ்த்துகள்....

இன்று டிசம்பர் 2 ம் தேதி 41 வது UAE National Day கொண்டாடப்பட்டு வருகின்றது . ஏழு எமிரேட்களான அபுதாபி,துபாய், சார்ஜா, உம் அல் குவெய்ன், அஜ்மான், ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமா ஆகியன இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் உருவான நாள் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி.



மேலதிக விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/United_Arab_Emiratesஇந்த லிங்கில் பார்க்கலாம்...

தேசிய நாளை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை. தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை.  ஆமீரகத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் மற்றும் அனைத்து அலுவலகங்களிலும் தேசியக்கொடி பறக்க விட்டிருக்கிறார்கள்...



ஆமிரக குடிமக்களும், இங்க வேலைக்காக வந்து வசிப்பவர்களும் தேசிய நாளைக் கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், தங்கள் வாகனங்கள் உடைகள் என அனைத்திலும் தேசிய நாள் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார்கள்.



தனியா நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் பல இடங்களில் தேசிய நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து , கலாச்சார நிகழ்வாக கொண்டாடி வருகிறார்கள். அமீரகத்தில் எங்கு பார்த்தாலும் கடந்த ஒரு வாரமாக தேசியக்கொடியும், தேசியக் கொடியின் நிறத்தில் பெரும்பாலான பொருட்களையும் காண முடிந்தது... 




அமீரக அரசின் சார்பில் அமீரகம் முழுவது பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.... 

விரிவான விவரங்கள் இந்த லிங்கில் http://www.dubaicalendar.ae/en/event/events/uae-national-day-2012-1.html.





இதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக சிறப்பான ஒரு நிகழ்வு ஒன்று உள்ளது. அதாவது துபாய் ஆட்சியாளாரும், அமீரகத்தின் துணை அதிபரும் ஆன His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum அவர்கள், அமீரக மக்களுக்கு மரம் நடக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு பெயர் Union Tree. மேலதிக தகவல்களுக்கு http://gulfnews.com/news/gulf/uae/government/shaikh-mohammad-plants-union-tree-1.1104866 இங்கு சென்று பாருங்கள். 



Happy UAE National Day 2012.



(நன்றி: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து.)

Saturday, December 1, 2012

மழை -- மலை -- கடல் -- நீண்ண்ண்ண்ட பயணம்....

வணக்கம் நண்பர்களே,

UAE National Day முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை...

நேற்று ஊர் சுத்தலாம்னு முடிவெடுத்து குடும்பத்துடன் கிளம்புனோம்...

கிளம்பும் போதே நல்ல மழை... 

இடி மின்னல் மழை என இயற்கை பட்டையைக் கிளப்பியது...





துபாய் தெருவெங்கும் வெள்ளப்பெருக்கு...




செல்லும் வழியில் சில இடங்களில் கார்கள் தண்ணீருக்குள் மூழ்கி ஸ்டார்ட் செய்ய முடியாமல் கிடந்தன.... 

http://www.7daysindubai.com/pictures/PHOTOS-Rains-bring-road-chaos-UAE/pictures-17477539-detail/pictures.html இந்த லிங்கில் பாருங்க.... நான் செல்லும் வழியில் இந்தக் கார் மிதந்து கொண்டிருந்தது...



பெரிய சாலைகளில் இருக்கும் டிஜிட்டல் எச்சரிக்கைப் பலகைகளில் “Drive Slowly ,watch water ponds” என எச்சரிக்கை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன...


சரி எவ்ளோ தூரம் போக முடியோமோ போய் பார்த்துட்டு வருவோம் என்று காரோட்டிக் கொண்டிருந்தேன்...

ஒரு இடத்தில் சரியான போக்குவரத்து நெரிசலில் சிக்கி 5 கி.மீ தூரத்தை ஒன்னரை மணிநேரம் ஓட்டி கடந்து சென்றோம்...ம்ம்ம்ம் ... 

Rescue Team மற்றும் Police வந்து விரைந்து செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்து வழி ஏற்படுத்திக் கொடுக்கவும், பயணம் வேகம் பிடித்தது...

செல்லும் வழியில் வானம் நீலமாகி மழை நின்றிருந்தது....




வரிசையாக பல கார்கள் சென்று கொண்டிருக்க, இதற்கு முன்பு பல முறை பயணித்த பாதைதான்... இருந்தாலும் மழை பெய்திருந்ததால் தூய்மையாக பளிச்சுனு அழகாக தெரிந்தது சாலைகள்....



செல்லும் வழியில் உள்ள  சிறு சிறு குன்றுகளை ஒட்டி உள்ள மேடு பள்ளங்களிலெல்லாம் பலர் குடும்பம் குடும்பமாக கூடாரம் அமைத்து சாப்பிட்டுக் கொண்டும், குழந்தைகளோடு விளையாடிக் கொண்டும் இருந்தார்கள்.... Four wheel drive கார் உள்ளவர்கள்  குன்றுகளின் கொஞ்சம் மேலே ஏறி மட்டமாக இருக்கும் இடத்தில் அமர்ந்திருந்தார்கள்...




எங்களுக்கும் பசி எடுக்க, நாங்களும் ஓரிடத்தில் நிறுத்தி ப்ளாஸ்டிக் பாயை விரித்து , செய்து கொண்டு போயிருந்த உணவுகளை எடுத்து வைத்து சாப்பிடத் தொடங்கினோம்....  நாங்கள் இப்போது அமர்ந்திருக்கும் இடத்தில் , வெயில் காலத்தில் வந்தால், ஒரு நிமிடம் கூட நிற்க முடியாது.... அப்படியாகப் பட்ட மொட்டைப்பாறை... இன்றைக்கு மழை குளிரின் பொருட்டு அழகான இடமாக மாறியிருந்தது....

மேகங்கள் மெல்ல மலைகளின் மீது இறங்கவும், குளிர் கூடி, மழைத்தூறத் தொடங்க, விரைவாக உணவு உண்டு விட்டு, காரில் ஏறி பயணத்தை தொடங்கினோம்...



நெடுந்தூரப் பயணங்களுக்கென்றே இருக்கும் தனிப்பட்ட mp3 folderல் இருந்து இளையராஜாவின் இசை காரெங்கும் பரவிக் கிடக்க... எதோ ஒரு சொல்லத்தெரியாத மகிழ்ச்சியான உணர்வில் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது....

180 கி.மீ பயணம் செய்து, நாங்கள் செல்ல வேண்டிய கடற்கரைக்குச் சென்று அமர்ந்தோம்.... 

கருமேகங்கள் மேலும் சூழ, பெருஞ்சத்தத்துடன் மழை மீண்டும் வந்தது.... 



மா வேகம் மழை வேகம் என்பார்கள்....

ஓடி வந்து காருக்குள் ஏறும் முன் ஓரளவு நனைந்து விட்டோம்...

இரவாகி விட்டது.... 

மழையின் அளவு கூடவும், முன்னால் செல்லும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.... ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் வந்து போக.... தொடர்ந்து பயணம் செய்து கொண்டேயிருந்தோம்... ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு எந்த வண்டியும் வரவில்லையென்றாலும், சாலை கண்ணுக்குத் தெரியாமல் போக, மெதுவாக வண்டி ஓட்டிக் கொண்டே ஒரு வழியாக துபாய் வந்து சேர்ந்தேன்....

காலை 11.00 மணிக்கு தொடங்கிய பயணம் இரவு மீண்டும் துபாய் திரும்பி வர இரவு 10.30 ஆகிவிட்டது....


ரொம்ப மகிழ்ச்சியான ஆனால் கொஞ்சம் பயம் கலந்த பயணம்....





Wednesday, November 14, 2012

சைக்கிள்காரர் வீடு....







அப்பாவுக்கு வேலை மாற்றலாகி ஒரு கிராமத்திற்கு அருகில் இருக்கும் தொழிற்சாலையில், எஞ்சின் தயாரிப்பு பிரிவில் உற்பத்தி பொறியாளாராக பணி நியமனம் செய்திருந்தார்கள்... பிறந்ததிலிருந்து பனிரெண்டு ஆண்டுகள் வரை நகர வாழ்க்கை வாழ்ந்திருந்த எனக்கு ஒரு கிராமத்திற்குப் போகிறோம் என்ற எண்ணமே ஒரு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது... அப்பா முதலில் பயந்தார், மகன் அடம்பிடிப்பானோ, கிராம வாழ்க்கை பிடிக்குமா என்றெல்லாம்... ஆனா எனக்கோ கிராமம்னா எப்படி இருக்கும், புது இடம், பள்ளிக்கூடம் என்றெல்லாம் புதிய இடம் பற்றிய சிந்தனைதான்...

வேலைக்கு சேர வேண்டிய ஒரு வாரத்திற்கு முன் நானும் அப்பாவும் அந்தக் கிராமத்திற்குப் போனோம் தங்குவதற்கு வீடு தேடி... காலையில் பேருந்து ஓர் இடத்தில் எங்களை இறக்கி விட்டுச் சென்றது. பேருந்து இறக்கிவிட்ட இடத்திலிருந்த பெரிய ஆலமரத்தடியில் நின்று கொண்டிருந்த சிலர் அவர்களாகவே வந்து எங்களிடம் பேசினார்கள்...

நாங்கள் அணிந்திருந்த பேண்ட் சட்டையை அவர்கள் வெறித்துப் பார்ப்பது போல எனக்குத் தோன்றியது.... அப்பா எங்களைப் பற்றிய விவரம் சொல்லி வீடு வாடகைக்கு பார்க்க வந்திருக்கோம் என்று சொன்னதும் அவர்கள் பேச்சில் மரியாதை மேலும் கூடியது.... சார்வுக தான் எஞ்சின் பேட்டரிக்கு அதிகாரியா வந்திருக்காகனு அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். 

”சார் 2 மைல் நடந்து போகணும்... ஊருக்குள்ள போறதுக்கு பஸ்லாம் இல்லங்க சார்...”
.
”இந்தப் பாதையில நடந்து போயிட்டே இருங்க சார், சந்தைக்குப் போன வண்டிக இப்ப ஊருக்கு திரும்பி வந்துரும், அதுல ஏறிக்கலாம்” னு சொன்னாங்க....

2 மைல்னா எத்தனை தூரம்னு எனக்கு அப்ப தெரியல....அவர்கள் காட்டிய செம்மண் சாலையில் நடக்க ஆரம்பித்தோம்... மழைக்காலமாக இருந்ததால் ஆங்காங்கே செம்மண் சகதியாகவும் இருந்தது... பேண்ட்டை கொஞ்சம் மடக்கிவிட்டு கவனமாக நடந்தோம்...



ஆலமரத்தடியில் இருந்து ஒருத்தர் சத்தமாக கூப்பிட்டார்.... ”சார்........”

ரெண்டு பேரும் திரும்பி பார்த்தோம்...

”சைக்கிள்காரர் வீட்டுக்கு போகணும்னு கேளுங்க சார் , ஆருனாலும் வழி சொல்லுவாக”

அப்பா பதிலுக்கு சரினு சொல்லிட்டு என் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்....

சைக்கிள் காரர் வீடா? வீடு முழுவதும் சைக்கிள் வச்சிருப்பாரோ? இல்லனா சைக்கிள் கடை எதுவும் வச்சிருப்பாரோ !? நிறைய சைக்கிள் இருந்தா அப்பாவ எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரச் சொல்லணும்னு என மனதுக்குள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்க....

அப்பா பேசிக்கிட்டே வந்தார்.... தம்பி.... இருக்கப் போற இடம் பிடிக்குதோ பிடிக்கலையோ.... இனிமேல் இங்கதான் இருக்கணும்... அதுனால பிடிக்கும்னு நினைச்சுக்கிட்டே  ஊரப் பாத்துக்கிட்டு வான்னார்....

என்னமோ எனக்குப் பிடிச்சித்தான் இருந்தது... தானாக வந்து பேசிய மனிதர்கள்... எங்கள் பேண்ட் சட்டையைப் பார்த்த பார்வை... ஒவ்வொரு பேச்சிலும்  அவர்கள் சொன்ன ”சார்” ... செம்மண் சாலை என எதோ ஒன்று எனக்கு மகிழ்ச்சியைத் தநது கொண்டிருந்தது...

நடந்துக்கிட்டே இருந்தோம்....

கொஞ்சம் தூரம் நடந்த பிறகு மெல்ல எங்கள் காதுகளுக்கு மணியோசை கேட்டது.... அப்பா திரும்பி பார்க்காமலே சொன்னார்... மாட்டு வண்டிக வரப் போகுது.... திரும்பிப் பார்த்தேன்... வரிசையாக மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தன...



எங்கள் அருகில் வரவும் வண்டிகளை நிறுத்தி, சார்... ஏறிக்கங்கன்னார் வண்டி ஓட்டி வந்தவர்... 

ஆலமரத்தடியில் நின்றவர்கள் சொல்லி அனுப்பியிருப்பாங்க போல..

வண்டியில் அப்பா ஏறப்போனார்... இருங்க சார்னு சொல்லி தலைப்பாகை கட்டியிருந்த துண்டை எடுத்து வண்டியில் இருந்த தூசியைத் தட்டி விட்டு எறச்சொன்னார்...

அப்பா ஏறி அமர்ந்ததும், வண்டிச்சக்கரத்தில் உள்ள ஆரத்தில் கால் வைத்து என்னை ஏறி நானும் அமர்ந்தேன்...  

மழையில் நனைந்திருக்கும் போல மாட்டு வண்டி, பலகையெல்லாம் ஊறியிருந்தது.... மாடுகளின் கொம்புகளில் மணி அழகாக மாட்டப்பட்டிருந்தது... கழுத்திலும் ஒரு மணி தொங்கியது... செல்லும் வழியில் மக்கள் உழவுப் பணியில் ஈடுபட்டிருப்பதை பார்த்துக் கொண்டே சென்றேன்...



அப்பா வண்டிக்காரரிடம் பேசிக்கொண்டு வந்தார்.... சைக்கிள் காரர் வீட்டுக்குப் போகணும், வேலைக்கு வந்திருக்கேன், வீடு வாடகைக்கு பார்க்கணும்.... 

”ம்ம்ம் சொன்னாய்ங்க சார்... கம்மாக்கரைல இறக்கி விட்டுடுறேன் அங்கன விசாரிச்சுக்கிட்டு போங்க சார்” வண்டிக்காரர் சொன்னார்....

கொஞ்ச தூரப் பயணத்திற்குப் பின் ஓரிடத்தில் இறக்கி விட்டுட்டுப் போனார் வண்டிக்காரர்...

பெரிய ஏரி மாதிரி இருந்தது அந்தக் கண்மாய்...  ஒரு பத்து நிமிடம் அங்கே நின்றிருப்போம்... சட்டையில்லாமல் என் வயதையொத்த சிறுவன் வெள்ளாட்டு மந்தையை ஓட்டிக் கொண்டு வந்தான்.... கையில் ஒரு தொரட்டியும் ஒரு தூக்குவாளியும் வைத்திருந்தான்...

தம்பி சைக்கிள் காரர் வீட்டுக்கு எப்படிப்பா போறது.... எங்களை ஏற இறங்க பார்த்துட்டு, ஒரு திசையில் கையை நீட்டிச் சொன்னான்...

”இங்கிட்டு தெக்கால நடங்க சார்.... ஒரு மதகு வரும் அதைத்தாண்டிப் போங்க ஒரு ஒத்தையடிப் பாதை வரும்... அதுல போனீங்கனா ஊரு வரும்.... அங்கன ஆருட்டனாலும் கேளுங்க சார்.... ”

அவன் சொன்ன திசையில் நடக்கத் தொடங்கினோம்.... நான் திரும்பிப் பார்த்தேன்... அந்தச் சிறுவன் இன்னும் எங்களைப் பார்த்துக் கொண்டே அதே இடத்தில் நின்றிருந்தான்...

மதகைத் தாண்டி , ஒத்தையடி பாதையில் நடந்து ஒரு வழியாக ஊருக்குள் நுழைந்தோம்...

சிறிய கிராமம்... குடிசை வீடுகளும் ஓட்டு வீடுகளும் மாறி மாறி இருந்தன.... பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது... சில ஓட்டு வீட்டுத் திண்ணைகளில் சிவப்பும் வெள்ளையும் பட்டை பட்டையாக பெயிண்ட் அடித்திருந்தார்கள்.

அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர் எங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே எங்களோடு நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.... கொஞ்ச தூரம் போனதும் ஒருத்தர் வந்து பேசினார்...

”என்னாங்க சார் யாரைப் பார்க்கணும்...”

அப்பா எங்களைப் பற்றிய விவரம் சொல்லி, சைக்கிள்காரர் வீட்டுக்குப் போகணும்... என்று சொன்னார்...

ரொம்ப ஆவலா இருந்தேன்... சைக்கிள் காரர் வீட்டைப் பார்க்க.... சைக்கிள் நிறைய இருக்குமோ!? இன்னும் என் மனதில் அந்த எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது...

”அப்படியா... சரி சரி வாங்க சார்.... எங்க மாமா வீடுதான்... வாங்க வாங்க” ... சொல்லிட்டு எங்கள் முன்னாடி பெருமிதமாக நடந்து சென்றார்...

ஒரு பெரிய வீட்டுக்கு முன்னாடி கொண்டு போய் எங்கள நிறுத்தினார்... திண்ணைல உட்கார சொல்லிட்டு குரல் கொடுத்தார்... 

”மாமாய் உங்கள் பாக்க வந்திருக்காக... அசலூர்க்காரகளா இருக்காக....”

”தா வாரேன்... ஒக்காரச் சொல்லு” உள்ளேயிருந்து ஒரு கனத்த குரல் கேட்டது....

அந்த வீட்டின் அமைப்பே நல்லா இருந்தது... ஊருலயே இதான் பெரிய வீடா இருக்கும் போல.... வீட்டு முன்னாடி ஒரு கூட்டி வண்டியும், தூரத்தில் ஒரு பக்கம் மாட்டுக் கொட்டகையும் இருந்தன... இரண்டு பெரிய வேப்பமரங்கள் ஒரு வளைவு போல இருந்தன வீட்டிற்கு முன்னால்... ரொம்ப ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்...

வெள்ளை வேட்டியும், சல்லடை போல இருக்கும் பனியனும் அணிந்த ஒருத்தர் வீட்டுக்குள்ள இருந்து வந்தார்... 

”வாங்க ... வணக்கம்...”

அப்பா வணக்கம் சொன்னார்... நான் சைக்கிள்காரர பார்த்துக்கிட்டே இருந்தேன்....

”என்ன விசயமா வந்திருக்கீக சார்....”

அப்பா விவரம் சொல்ல தொடங்குமுன்னே... வீட்டுக்குள்ள திரும்பி “ஏ புள்ள ... மோர் கொண்டா” னு சொல்லிட்டு எங்கள பாத்து சொல்லுங்க சார்ன்னார்...

நான், சைக்கிள்கள் எங்காவது நிறுத்தி வச்சிருக்காரானு சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.... ம்ஹும் எங்கயும் காணாம்....

அப்பா வந்த விவரத்தைச் சொல்லி முடித்ததும்... 

அவர் முகம் கண்ணெல்லாம் கொஞ்சம் விரிந்தது.... அவருக்கும் கொஞ்சம் பெருமையாக இருந்திருக்கும் போல...

”ஓ அப்படியா சேதி... சரிங்க சார்... என் பழைய வீட்டுல தங்கிக்கங்க... இங்க காரை வீடு கட்டி வந்து பதினெட்டு வருசமாச்சு.... அங்க பழைய வீட்டுல பழைய தட்டு முட்டுச்சாமானா போட்டு வச்சிருக்கேன்... ஒரு வாரத்துல சுத்தம் பண்ணி மராமத்து செஞ்சுபுடுறேன்... பின்னாடியே கேணி இருக்கு.... எந்தப் பிரச்சனையும் இல்ல...  நீங்க தங்கிக்கலாம் சார்...

”வாடகை ?”

”ஹா ஹா.... அட விடுங்க சார்... வீட்டப் பாருங்க... பிடிச்சிருந்தா தங்கிக்கங்க... நீங்க குடுக்கிறத குடுங்க.... சும்மா கெடக்குற வீடுதானே....  மீண்டும் ஒரு சிரிப்பு சிரித்தார்...ஹா ஹா ஹா.....”

பேசிக்கொண்டிருக்கும் போதே , அவர் மனைவி , சிரித்த முகத்துடன் வந்து மோர் கொடுத்தாங்க...

குடிச்சிட்டு கிளம்புறோம்னோம்...

”சார் வீட்டப் போய் பாத்துட்டு வாங்க, சமைக்கச் சொல்றேன் சாப்பிட்டுப் போகலாம்...”

”இல்லங்க வீட்டப் பாத்துட்டு கெளம்புறோம்....”

”இல்ல சார்  வீட்டப் பார்த்துட்டு வாங்க, நீங்க இப்ப கெளம்புனாலும் டவுனுக்குப் போய்ச்சேர மதியம் மூனு மூன்ரை ஆயிரும்... சின்னப்பயல கூட்டியாந்திருக்கீக பசி தாங்குவானா.... சாப்பிட்டுப் போங்க சார்....”

அவர் பேச்சின் உண்மையும், அவரின் விருந்தோம்பலும் அப்பாவைச் சம்மதிக்க வைத்தது.... சரி வீட்டப் பார்த்துட்டு வாரோம்னார் அப்பா...

”ஏய் மாப்ள, களத்து வீட்ட காட்டிட்டு வாய்யா....  ”

அவர் மாப்ளயோடு போய் வீட்டப் பாத்துட்டு வந்தோம்... எங்களுக்குப் பிடிச்சுப் போச்சு...

பின்பு சைக்கிள் காரர் வீட்டுல சாப்பிட்டு , அவங்க ஏற்பாடு செய்திருந்த கூட்டு வண்டியில் பஸ் நிறுத்தத்திற்கு பயணமானோம்...



செல்லும் வழியில் வண்டி ஓட்டுறவரிடம் அப்பாவைக் கேட்கச் சொன்னேன்...

”சைக்கிள்காரர் வீடுனு சொல்றாங்களே... அங்க ஒரு சைக்கிள் கூட காணாமே, ஏன் அந்தப் பேரு வச்சிருக்காங்க..” அப்பா கேட்டார்....

”ஹா ஹா ஹா... அதா சார்.... எங்க ஐயாதான் ஊருலயே மொதமொதலா சைக்கிள் வாங்கியாந்து ஓட்டுனவக... எப்பயாவது டவுனுக்கு போகணும்னா வண்டிய வெளில எடுத்து ஓட்டுவாக.... மத்த நேரத்துலலாம் சுத்தமா தொடச்சு வீட்டுக்குள்ள வச்சிருப்பாக..... அதான் ஐயாவுக வீட்டுக்குப் பேரு சைக்கிள்காரர் வீடு.”

நாங்க பஸ்ஸ பிடித்து ஊர் வந்து சேர்ந்தோம்... அடுத்த வாரம் சைக்கிள்காரர் வீட்டுக்கு குடி போகணும்.


(நன்றி: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து....)





Sunday, November 4, 2012

குளோபல் வில்லேஜ் ஒரு பார்வை -- துபாய் Global Village

குளோபல் வில்லேஜ் 2012 -2013



அனைவருக்கும் வணக்கம்,

துபாயில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குளோபல் வில்லேஜ், 2012 அக்டோபர் 21 ம் தேதி தொடங்கி 2013 - மார்ச் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. 

குளோபல் வில்லேஜ் முதன்முதலாக கடந்த 1996 ஆம் ஆண்டு துபாயின் க்ரீக் என்னும் பகுதியில் சிறு சிறு கடைகளுடன் பல நாடுகள் கலந்து தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட ஆண்டில் ஏறத்தாழ 500,000 மக்கள் இந்த குளோபல் வில்லேஜை பார்வையிட வந்தனர்.

இரண்டாம் ஆண்டில் 18 நாடுகள் கலந்துகொள்ள 900,000 மக்கள் கலந்து கொள்ள பெரும் நிகழ்ச்சியாக நடந்தது...

இப்படி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த குளோபல் வில்லேஜ், பத்தாண்டுகள் கழித்த பின்பு, பங்குபெறும் நாடுகளின் எண்ணிக்கையும், உலகெங்கிலும் இருந்து வருகைதரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கூடியதால் 2005 ஆம் ஆண்டு முதல் துபாய் லேண்ட் (Dubai Land) என்னுமிடத்தில் குளோபல் வில்லேஜிற்காக நிரந்தரமாக ஒரு இடம் அமைக்கப்பட்டது...மிகப்பெரிய கார் நிறுத்திமிட வசதியும் செய்து கொடுத்திருக்கிறார்கள். துபாயிலிருந்து பேருந்து வசதியும் உள்ளது.


இது என்ன குளோபல் வில்லேஜ்... இதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் அதன் வரலாற்றைக் கூறுகிறேன் என்று பார்க்கிறீர்களா?

இதோ வருகிறேன்

குளோபல் வில்லேஜ்:  (Where the world comes together)

(21-அக்டோபர்-2012 முதல் 30-மார்ச்-2013 வரை)

உலகின் பலநாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி தங்கள் நாட்டு கலாச்சாரம், பொழுதுபோக்கு போன்றவற்றை வெளிப்படுத்தவும், சுற்றுலா இடமாகவும், தங்கள் நாட்டுக்கே உரித்தான சில சிறப்பான பொருட்களை வணிகம் செய்யவும் அமைந்துள்ள / அமைக்கப்பட்டுள்ள ஓர் இடம்தான் குளோபல் வில்லேஜ். 2010 ஆண்டு புள்ளி விபரத்தின் படி 28 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 4.5 மில்லியன் மக்கள் வந்து செல்கிறார்கள்.

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக காட்சி மாடங்கள் (Pavilion) அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தநாட்டிற்குரிய காட்சி மாடங்களில் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் கடை வைத்திருப்பார்கள். சிறப்பு என்னவென்றால் கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் நாட்டிற்குரிய பாரம்பரிய உடை அணிந்திருப்பார்கள்.... கடைகளின் உள் அமைப்பும் அவர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும்.

இந்தியா:



கார் நிறுத்துமிடத்திலிருந்து, குளோபல் வில்லேஜ் அரங்கிற்கு செல்ல சைக்கிள் ரிக்‌ஷா வசதியும் உள்ளது. நமது டெல்லியைச் சேர்ந்த ரிக்‌ஷாக்காரர் ஒருவர் இந்தப் படத்தில்.... 



இவர் படத்தை இவருக்கு அனுப்புமாறு என்னிடம் ஒரு விசிட்டிங் கார்டு குடுத்தார்.... அதில் அவர் இந்திய அலைபேசி எண் மட்டுமே உள்ளது... பின்பொரு நாள் அழைத்துப் பேசி இந்தப் படத்தை அவருக்கு அனுப்ப வேண்டும் :-)

இந்த ரிக்‌ஷாக்களில் அரபிகளும், வெள்ளைக்காரர்களும் விரும்பி பயணம் செய்கிறார்கள்... நம்ம ஆட்கள் ஏறுவது மிகவும் குறைவே :-)))

சரி வாங்க ரிக்‌ஷாவில் ஏறி குளோபல் வில்லேஜ் உள்ளே செல்லலாம்...

மிகப்பெரிய இடம்... ஆங்காங்க ஒவ்வொரு நாட்டின் காட்சி மாடங்கள்....ஒவ்வொரு நாடும் தங்களின் கலாச்சாரத்தை அனைவருக்கும் காட்டும் வகையில் தங்கள் இடங்களை அமைத்துள்ளன... 

எகிப்து:



வியட்நாம் & அஃப்கானிஸ்தான்



பலூன்கள், பொம்மைகள் விற்பவர்கள் ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்...



இது மட்டுமின்றி ஒரு தனி இடம் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே அனைவரும் விளையாடக்கூடிய வகையில் பல விளையாட்டுகள் நிறைந்திருக்கின்றன.



பலநாட்டு உணவகங்கள் உள்ளே அமைத்திருக்கிறார்கள். விதவிதமான உணவு வகைகளை உண்டு மகிழலாம்.

குளோபல் வில்லேஜின் உள்ளே ஆங்காங்கே பல மேடைகள் உள்ளன. அவற்றில் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். தங்கள் நாட்டு கலாச்சாரத்தை வெளிபடுத்தும் வகையில் கலைஞர்கள் நிகழ்சிக்களை நடத்திக் கொண்டிருப்பார்கள்....









பார்வையாளர்களைக் கவரும் விதமாக, கலைஞர்களின் அணிவகுப்பு அவ்வப்போது நடத்தப்படுகின்றது. உங்களோடு பகிர்ந்து கொள்ள அந்த காணொளியை பதிவு செய்திருக்கிறேன். கண்டு மகிழ இங்கே சென்று பாருங்கள்.



இது போல் நடக்கும் நிகழ்ச்சிகளில் பலூன் விற்பவர், பொம்மைக் கடைக்காரர்கள், ஓடியாடும் குழந்தைகள்,கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், மேடைப் பாடல்கள், தீ விளையாட்டு காட்டுபவர் என அனைவரையும் ஓரிடத்தில் கண்டு மகிழும் போது  என்னைப் போன்று இங்கிருப்பவர்களுக்கு, ஊரில் திருவிழாவிற்கு சென்று வரும் நினைவும் உணர்வும் வரும் என்பது உண்மை.

நன்றி.

Sunday, October 28, 2012

ஆஜீத் காலிக் -- பட்டம் வென்றான் எங்கள் இதயம் கொண்டான்... (Aajeedh Khalique)

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 - ஆஜீத் காலிக்


நாங்க எதிர்பார்த்துதான் இருந்தோம், இருப்பினும் உள்ளூர ஒரு பதட்டம்... என்ன நடக்கும்? எல்லாரும் வாக்களித்திருப்பார்களா? எங்கள் ஆஜித் வென்று விடுவானா? என ஒரு பதட்டம் கடந்த வாரம் முழுவதும் ஒரு பாதிப்பாய் இருந்தது... கடைசியா அந்த நாளூம் வந்தது, “”வந்தே மாதரம்” நீ முழங்கியதும்  உடலெல்லாம் உற்சாகம் கரை புரண்டோடியது... சந்தோச கண்ணீரே” என நீ பாடியதும், பார்த்தவர் அனைவருக்கும் சந்தோசக் கண்ணீர் வந்தது உண்மை.... பெரும் மகிழ்ச்சி... வழக்கம்போல பலர் எழுந்து நின்று வாழ்த்தினர்... 



விஜய் டிவி நேரடி ஒளிபரப்பு என நிகழ்ச்சி  தொடர்ந்து சென்று கொண்டிருந்தாலும், ஃபேஸ்புக்கில் ரசிகர்கள் உன் வெற்றியை அறிவித்த போது, என்னவென்று புரியாமல் சற்று குழம்பி போயிருந்தோம்... இறுதியாக நீ வென்ற செய்தி கேட்ட போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சிக்கு வருவார் என எதிர்பார்த்திருக்கவில்லை... அனைவருக்கும் பிடித்த ஏ ஆர் ரகுமானின் கையாலேயே நீ பட்டம் பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி... இசை உலகமே வியந்து பார்க்கும் ஏ ஆர் ரகுமான் உன்னை வியந்து பாராட்டியது உன் இசைக்கும், உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி.  இசைப்புயலின் வாயால் ”Born Superstar” பட்டம் பெற்றதும் உனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மகிழ்ச்சி.



கடுமையான போட்டிகளைத் தாண்டி, வென்றெடுத்தாய் பட்டத்தை... பட்டம் வெல்லத் தகுதியானவன் நீ... ஆனால் இத்தனை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து எங்கள் அனைவரையும் உன் இசையால் கட்டிப் போட நீ பட்ட பாடு உனக்கும் இறைவனுக்கும் மட்டும்தான் தெரியும். உன் கடின உழைப்பும் இறை அருளும் இன்றி இது ஏதும் நடந்தேறியிருக்காது....




ஆஜீத் காலீக்...
எங்கள் இதயம் கவர்ந்தவனே...

இனிதான் உனக்கு மேலும் கவனம் தேவை...
இன்னும் எத்தனையோ தூரம் நீ போக வேண்டியிருக்கிறது... 
இசை மட்டுமின்றி பல களம் நீ காண வேண்டும்... 
பல மேடைகள் உன்னை வரவேற்க காத்திருக்கும்... 
இதே உழைப்பும், கவனமும் இருந்தால்தான் அனைத்தும் உன் வசப்படும்.
புகழ் உன்னைச் சுற்றி வரும் இந்த வேளையில் 
இப்பொழுது போல் எப்பொழுதும் பணிவாய் தொடர்வாய்... 

சூப்பர் சிங்கர் மேடையில் வெற்றி கண்ட ப்ரகதி, யாழினி, சுகன்யா, கௌதம் மற்றும் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்....



இப்படி அருமையான கலைஞர்களை வெளிக்கொண்டு வரும் விஜய் டிவிக்கு நன்றி.


இனிய இசையே - எங்கள்...
இதயம் கவர்ந்தவனே...
பட்டத்திற்கு தகுதியானவனே...
பிறவிக் கலைஞனே...
இன்னும் நீ வெற்றி பெற
வாழ்த்துகள் ஆஜீத்...
இறைவனுக்கு நன்றி...

இப்படிக்கு,
உன் ரசிகன்.


(நன்றி: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து)