Monday, December 17, 2012

பாலைவனப் பயணம் - Desert Safari



அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே,

ஒவ்வொரு ஊரிலும் பார்க்கவேண்டிய இடங்கள் எத்தனை எத்தனையோ இருக்கும். பெரும்பாலும் உள்ளூர்க்காரர்கள் பார்த்திராத அல்லது கண்டு கொள்ளாத இடங்களை வெளியூரிலிருந்து சுற்றுலா வருபவர் கண்டு ரசித்துச் செல்வார்கள். மதுரையிலேயே பிறந்து வளர்ந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலை முழுமையாகச் சுற்றிப்பார்த்தவர்கள் கொஞ்சம் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள்... ஆனால் அதே மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிப்பார்க்க இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், உலகெங்கும் இருந்தும் பலர் நாள்தோறும் வந்து செல்கிறார்கள்.

ஒருமுறை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த அண்ணபூரணி கோயிலைப் பற்றி உள்ளூர்க்காரர் ஒருவர் சொன்ன தகவல் என்னை ஆச்சரியப்படுத்தியது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து பிடி மண் எடுத்தே அண்ணபூரணி கோயிலைக் கட்டினார்கள் என்று அவர் கூறினார். எந்தளவுக்கு அந்தத் தகவலில் உண்மை என்று எனக்குத் தெரியவில்லை, இருப்பினும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி அவர் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது எனக்குப் பெருமையாகவும், உள்ளூர மகிழ்ச்சியாகவும் இருந்தது... நானும் மதுரைக்காரன்ல... :-)


டெசர்ட் சஃபாரி என்று சொல்லிவிட்டு மதுரையிலேயே நிற்கிறேன் என்று பார்க்கிறீர்களா?!
சரி வாருங்கள் டெசர்ட் சஃபாரிக்கு கூட்டிச் செல்கிறேன்.

அமீரகத்தில் வசிப்பவர்களும் , சுற்றுலா வருபவர்களும் கண்டிப்பாக ஒரு முறையாவது பயணித்து ரசிக்கவேண்டிய ஒன்று பாலைவனப் பயணம் எனும் டெசர்ட் சஃபாரி (Desert Safari).

நாம் பயணத்தில் காணப்போகும் பட்டியல்:

> பாலைவனப் பயணம்
> ஒட்டகப் பயணம்
> சிற்றுண்டி
> ஹூக்கா
> மெகந்தி
> கந்தூரா டான்ஸ்
> இரவு உணவு
> பெல்லி டான்ஸ்

பாலைவனம்:

உள்ளூர் அரபி நண்பர் என்னிடம் சொன்னது, பாலைவனமும் கடலும் ஒன்று... உள்ளே நெடுந்தொலைவு சென்று விட்டால் எல்லாத்திசையும் மணல்தான்... திக்குத்தெரியாமல் சிக்கிக் கொள்வோம்.... சரியான முன் அனுபவத்தோடு பயணம் செய்தால் மட்டுமே, எளிதாக திரும்பி வர முடியும்... 

உண்மைதான்... எங்கு பார்த்தாலும் மணல் மணல் மணல்... 




டெசர்ட் சஃபாரி:

இந்தப் பயணம் செய்வதற்கென்று நிறைய சுற்றுலா நிறுவனங்கள் இங்கு இருக்கின்றன. அவர்களிடம் பணம் கட்டி பதிவு செய்து விட்டால் நம்மை அழைத்துக்கொண்டு செல்வார்கள். ஒரு ஆளுக்கு 150 திர்ஹாம்ஸ்லிலிருந்து 300 திர்ஹாம்ஸ் வரை Desert Safari Packager tour கிடைக்கிறது. பாலைவன மணலில் ஓட்டுவதற்கு 4X4 வண்டிகள் பயன்படுத்துகிறார்கள், பெரும்பாலும் டொயோட்டா லேண்ட்க்ருசர்.  

பாலைவனத்தில் அணிவகுத்துச் செல்லும் கார்கள்:



சரி வாங்க உள்ளே போகலாம்:

பாலைவனத்திற்குள் நுழையும் முன்பு கார் டயரின் காற்றின் அளவை பாதியாக குறைத்துக் கொள்கிறார்கள். முழுமையாக காற்று இருந்தால் மணலுக்குள் சக்கரம் பதிந்து விடும், ஆகவே காற்றின் அளவை பாதியாக குறைத்துக் கொண்டு பாலைவனத்திற்குள் பயணம் தொடங்குகிறோம். 

இந்த ஓட்டுனர்கள் நல்ல பயிற்சி எடுத்திருக்கிறார்கள். மேடும் பள்ளமுமாக இருக்கும் பாலைவனத்தில் கார் பாய்ந்து செல்கிறது. காரை செங்குத்தாக மணல் மேட்டில் நிறுத்துவதும், செங்குத்தாக நின்று கொண்டிருக்கும் காரை அதே வேகத்தில் பின்னால் செலுத்துவது, ஒரு பக்கமாக காரை சாய்த்து நிறுத்துவதும் என பல வித்தைகளைக் காட்டினார் ஓட்டுனர். எனக்கு ஏசி காருக்குள் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்து விட்டது. மகிழ்ச்சியான பயம் கலந்த பயணமாக இருந்தது.

ஒரு மணல் மேட்டில் ஒரு ஐந்து நிமிடம் ஓய்வெடுத்து விட்டு, சுற்றுலா நிறுவனத்தார்கள் பாலைவனத்திற்குள் அமைத்திருக்கும் கேம்ப் எனும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.



செல்லும் வழியில் சில ஆமீரக இளைஞர்கள் தங்கள் சொந்த வண்டியில் பாலைவனத்தில் பாய்ந்து செல்கிறார்கள். இந்த வண்டிகள் பாலைவனத்திற்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்டவைகள்.



பயணத்தை முடித்து மாலை மங்கும் நேரத்தில், கேம்ப் எனும் இடத்திற்கு சென்று சேர்ந்தோம். சுற்றுலா தொகுப்பின் ஒன்றான ஒட்டகப்பயணம் அங்கே செல்லலாம். ஒட்டகத்தில் ஏறி பாலைவன காற்றை அனுபவித்து ஒரு சுற்று சுற்றி விட்டு வரலாம்.... பாலைவனத்திற்குள், காரில் பாய்ந்து பறந்து பயணம் செய்து விட்டு வந்த பிறகு இந்த ஒட்டகப்பயணம் மனதுக்கு இதமாக இருந்தது.



ஒட்டகப்பயணம் முடித்த பிறகு, கேம்பிற்குள் சென்றால் அங்கு அழகான மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் இருக்கைகள் போடப்பட்டு விளக்குகள் வைக்கப்பட்டிருக்கின்றன. 

ஷீஷா பார், மெஹந்தி ஏரியா, பரிசுப்பொருட்கள் விற்கும் கடை, உணவு பரிமாறும் இடம் என அனைத்தும் அந்த கேம்பிற்குள் உள்ளன.
ஷீஷா பாரில் சென்று ஷீஷா பயன்படுத்தலாம்... மெஹந்தி ஏரியாவில் பெண்களுக்கு கைகளில் அழகாக மருதாணி போட்டு விடுகிறார்கள்....

பின்பு சிக்கன் ஷவர்மா மற்றும் ஃபலாஃபல் சிற்றுண்டி உண்டு விட்டு கந்தூரா நடனம் பார்க்கலாம். மேடையில் கந்தூரா நடனமாடுபவர் வந்ததும் கைதட்டல்கள் பறக்கின்றன. ஒரே இடத்தில் நின்று கொண்டு சுமார் பத்து நிமிடம் சுற்றுவது நமக்கு இயலாத செயல்.  

இந்த காணொளியைப் பாருங்கள். ஒரு இடத்தில் நின்று கொண்டு சுற்றிக் கொண்டேயிருக்கிறார். இவரது உடை இவர் சுற்ற சுற்ற வட்டமாக மாறி பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது. அவருடைய நடனத்தைப் பார்த்த பிறகு நமக்கு கொஞ்சம் நேரம் தலைசுற்றுவது உறுதி.

நடனமாடியவர்:


நடனத்தில் ஒரு காட்சி:



கந்தூரா நடனம் முடிந்த பிறகு, இரவு உணவு புஃபே முறையில் வழங்கப்படுகின்றது. நிறைய கபாப் வகை உணவுகள், அரபிக் ரொட்டிகள், நூடுல்ஸ், ஹமூஸ், பார்பிக்யூ என வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு மேடைக்கருகே வந்து அமர்ந்து கொள்ள வேண்டியதுதான். 

இரவு உணவுக்குப் பின் பெல்லி டான்ஸ் நடைபெறுகிறது. ஒரு அழகான பெண் வந்து பெல்லி டான்ஸ் ஆடுகிறார்.  நம்மூரில் கரகாட்டம் ஆடும் போது, தலையில் கரகத்தை வைத்து ஆடுவது போல, இவர் ஒரு வாளை இடுப்பிலும் பின்பு  தலையிலும் வைத்து கீழே விழாமல் ஆடுகிறார். 




பெல்லி நடனம் முடிந்தபிறகு, காரில் ஏறி இரவு நேர பாலைவனப்பயணம் மீண்டும் தொடர்கிறது. இருட்டில் பாலைவனத்தில் பாய்ந்து செல்லும் கார் கொஞ்சம் நம்மை பயமுறுத்துகிறது. ஒரு வழியாக ஒரு வித்தியாசமான பயணம் செய்து விட்டு, வீடு வந்து சேர்ந்தேன்.


படங்கள் அனைத்தும் நான் எடுத்தது.

நன்றி: வீடியோ இணையத்தில் கிடைத்தது.

அனைவருக்கும் நன்றி.






No comments: