Monday, January 28, 2013

மொத மரியாதை...




சின்ன வயசுல எதோ ஒரு திருவிழாவில் நடந்த நிகழ்ச்சி இது:

மதுரையில் ஒரு தெரு:

அந்தத் திருவிழாவை முன்னிட்டு எங்கள் தெருவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்... விழா அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி.... இன்னார் குழுவினரின் ஆடல்பாடல் நிகழ்ச்சி... அனைவரும் வாரீர்...  என தெருவெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன... ஒவ்வொரு வயது ஒத்த நண்பர்களும் பல திட்டங்கள் போட்டிருந்தனர்... நாங்க என் நண்பர்களும் போட்ட திட்டம், முதல் வரிசைல இடம்பிடிச்சு உக்காந்திரணுங்கிறதுதான்... முழுசா நிகழ்ச்சி பார்ப்பதும், பாட்டுக்கெல்லாம் ஆடுவதுமே எங்கள் நோக்கம்...

திருவிழா அன்று, அப்போதைய தெரு இளைஞர்கள் ஒரே மாதிரி சட்டை வாங்கிப் போட்டுக்கொண்டு தெருவில் வலம் வந்து கொண்டிருந்தனர்... கிராமங்கள் போல விழாக்கள் நடத்த பொது இடம் இல்லாததால், தெருவின் நடுவிலேயே மேடைகள் அமைக்கப்பட வேண்டும்... மதிய நேரம் வந்ததும், தெருவின் நுழைவு வாயில் மறிக்கப்பட்டு, தெருவுக்கு நடுவே பெரிய மேடை அமைக்கும் பணி நடைபெற்றது... மேடையின் இருபக்கமும் இரண்டு சக்கர வண்டிகள் போகும் அளவுக்கு மட்டும் இடம் விட்டிருந்தார்கள்... மேடையின் பின்னால் ஒரு சிறிய அறை அமைத்தார்கள்... இது நடனக்குழுவினர் தங்கள் உடைகளை மாற்றிக் கொள்வதற்கும், ஒப்பனை செய்வதற்கும்....

நாங்கள், கடையில் நொறுக்குத் தீனிகளை வாங்கித் தின்று கொண்டு மேடை அமைக்கும் பணியை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்... விழாக் குழுவைச் சேர்ந்தவர், பணியாளர்களை விரைவு படுத்திக் கொண்டிருந்தார்... கொஞ்சம் கொஞ்சமாக மேடை முழு வடிவம் அடையத் தொடங்கியது...மேடை அமைத்துக் கொண்டிருக்கும் போதே, சவுண்ட் சர்வீஸ் அண்ணன் அவருடையைப் பணியைத் தொடங்கிவிட்டார்... குழாய் ரேடியோக்களை நான்கு மூலையிலும் கட்டி பாடல்களை அலறவிட்டுக் கொண்டிருந்தார்... பாடல்களுக்கு ஏற்ப மேடைக்கு முன்னால் சிறுவர்கள் ஆட்டமும் தொடங்கியது.... விரைந்து செயல்பட்ட பணியாளர்கள் மேடையை முழுமையாக முடித்திருந்தார்கள்... ட்யூப்லைட், ஸ்பீக்கர், குழாய் ரேடியோ, சீரியல் பல்பு வடிவமைப்புகள் என அனைத்தையையும் சவுண்ட் சர்வீஸ் அண்ணன் முடித்திருந்தார்...


இரவாகிவிட்டது....

விழாக்குழுவினரில் ஒருவர் மட்டும் மேடையில் மைக்கைப் பிடித்து பேசிக் கொண்டிருந்தார்... பேசிக்கொண்டிருந்தார் என்பதை விட உத்தரவுகளை இட்டுக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம்... 

யேய் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆர்கெஸ்ட்ரா பார்ட்டிக வந்திருவாய்ங்கப்பா... எல்லாரும் சீக்கிரம் சாப்பிட்டு ஓடியாந்திருங்க.... ஏய் இந்த சின்னப்பயகள கெளப்பி விடுங்கப்பா... இங்கனையே நிண்டுகிட்டு ஆடிக்கிட்டு இருக்காய்ங்க.... டேய் போய் சாப்பிட்டு வாங்கடா.... ஓடுங்கடா.... 

அவர் சொல்லியும் நாங்க கேட்கல.... அங்கனையேதான் நின்று கொண்டிருந்தோம்.... அவுகவுக அப்பா அம்மா அப்பத்தா வந்து மண்டைல தட்டி கூட்டிட்டுப் போனாங்க...வேகவேகமா சாப்பிட்டுட்டு மேடைக்கு முன்னாடி போய் நின்னோம்.... 

அப்பவும் அவர் மேடைல நின்று அறிவிப்புகள் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.... இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்துருவாய்ங்கப்பா என்று ரொம்ப நேரமா சொல்லிக்கொண்டு இருந்தார்.... சவுண்ட் சர்வீஸ் பாடல்களைப் போட்டு அலற விட்டுக் கொண்டிருந்தார்... நாங்க ஆடி ஆடி அசந்து போனோம்... 

அப்ப தூரத்துல ஒரு மகிந்த்ரா டூரிஸ்ட் வேன் வந்தது.... ஹேய்னு கத்திக்கிட்டு அந்த வேன் நோக்கி ஓடினோம்.... மேடை அருகே வந்து நின்றதும், ஆர்கெஸ்ட்ரா ஆளுங்க  ஒவ்வொருத்தரா இறங்கி வந்தாங்க... நிறைய இசைக்கருவிகள் கொண்டு வந்திருந்தாங்க.... வந்த வேகத்தில் அவர்கள் பணியில் இறங்கினார்கள்... மேடையில் அவரவர் இடங்களைத் தேர்ந்தெடுத்து இசைக்கருவிகளைப் பொருத்த தொடங்கினார்கள்... இடையே டெஸ்ட்டிங் டெஸ்டிங் என மைக்கில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்... ட்ரம்ஸ், கீ போர்டு போன்ற கருவிகளை அப்பப்ப சோதனைக்காக வாசித்து ஒலி எழுப்பினார்கள்...

ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடங்கப்போகிறது என்பதே மனதுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.... கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சேரத் தொடங்கியது.... முன்னாள் போடப்பட்டிருந்த இருக்கைகளில் நெருக்கிப் பிடித்து உக்காந்திருந்தோம்... 

விழாக்குழு தலைவர், மைக்கைப் பிடித்து, பல ”அவர்களே” சொல்லி, அனைவருக்கும் வணக்கம் சொல்லி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.... 

பின்பு ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்த ஒருவர் மைக் பிடித்து பேச தொடங்கினார்... அவர் பேச்சே எங்களுக்கு ரொம்ப வித்தியாசமாக இருந்தது... ரொம்ப ஏற்ற இறக்கமாகப் பேசினார்... அவர் பேசும் போது எதிரொலி அதிகமாகக் கேட்டது.... 

சூப்பர்ஸ்டார் பாட்டப் போடு சூப்பர்ஸ்டார் பாட்டப் போடுனு பின்னாடி இருந்து பெரும் சத்தம்... ஆர்கெஸ்ட்ரானா முதலில் சூப்பர்ஸ்டார் பாட்டுப் பாடுவது என்பது அப்போது ஒரு நியதியாக இருந்தது போலும்.... இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்...

கண்டிப்பா முதலில் சூப்பர்ஸ்டார் பாட்டுத்தான் என்று உறுதியளித்து, பின்பு ஒருவர் எஸ்பிபி குரலில் , சூப்பர்ஸ்டார் பாட்டு ஒன்றைப் பாடினார்.... விசில் தூள் பறந்தது.... பாட்டுச் சத்தத்தையும் தாண்டி விசில்கள் பறந்தன... முன்வரிசையில் இருந்த நாங்கள் எழுந்து ஆடத் தொடங்கியாச்சு..... பாட்டு முடிந்ததும் பலத்த கைதட்டல்கள்.... சிகரெட் அட்டையில் வாழ்த்து எழுதி, 5 ரூபாய்  பணமும் அன்பளிப்பாக சிலர் அளித்திருந்தனர்... 

அதை ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்தவர் மேடையில் நன்றியுடன் தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில்,  சத்தமாக கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டிக் கொண்டே ஒருவர் மேடையின் பின்புறம் இருந்து ஓடி வந்து மேடையில் ஏறினார்... 

வேற யாரும் இல்ல அவர், அவருதான் எங்க தெரு ரவுடி....  அவரால் நேராக நிற்க முடியவில்லை... நல்ல சாராய போதையில் இருந்த அவர், ஆடிக்கிட்டே மைக்கிட்ட வந்து, ”டேய்................................................... எனக்கு மொத மரியாதை கொடுக்காம என்னாடா ஆர்கெஸ்ட்ரா நடத்துறீங்க.... என்று கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தார்...
விழக்குழுவினர் பயந்து பயந்து பேசிக்கிட்டு இருந்தாங்க.... மைக்க அமத்திட்டாங்க.... ஆனா எங்க தெரு ரௌடி பொசுக்குனு கையில் இருந்த கத்திய எடுத்து காற்றில் சுத்திக் காட்டிட்டு கோபமா  பேசிக் கொண்டு இருந்தார்.... 

மேடையில் இதெல்லாம் நடப்பதைப் பார்த்து ரொம்ப பயந்து போயிருந்தோம்... ஆர்கெஸ்ட்ரா குழுவினார் உறைந்து போய் நின்றிருந்தார்கள்... அவசர அவசரமாக, அங்கிருந்த ஒரு ரோஜா மாலையை எடுத்து அந்த ரௌடிக்கு போட்டுவிட்டனர் விழாக்குழுவினர்... அப்புறம் சரி போப்போ போப்பானு அவரைக் கெஞ்சி அனுப்பி வைத்தார்கள்.... ரௌடியும் கீழே இறங்கினார்.... அப்பாட பிரச்சனை முடிஞ்சிருச்சுனு மகிழ்ச்சியா இருந்தோம்.... ஆனா நிகழ்ச்சியே முடியப் போகுதுனு அப்ப எங்களுக்குத் தெரியலை...

கீழே இறங்குன ரவுடி, மேடையில் ட்ரம்ஸ் வாசிப்பவரின் (நல்லா குண்டா இருந்தார்) நாற்காலியோடு அவரை இழுத்து தரையில் போட, சண்டை தொடங்கிவிட்டது.... விழாக்குழுவினர் ரௌடியோடு போராடி அவரை அனுப்பி வைத்தார்கள்...  

அவங்க அனுப்பி வைச்சுட்டு வரதுக்குள்ள ஆர்கெஸ்ட்ரா பெட்டியைக் கட்டத் தொடங்கிட்டாங்க....  விழாக்குழுவினர் ரொம்ப நேரம் பேசிப் பார்த்தார்கள்.... ம்ஹும்ம் ஒன்னும் முடியல.... ட்ரம்ஸ் வாசிக்கிறவர் கீழே விழுந்து தெறிச்சுப் போய் கெடக்குறார், எங்களால் வாசிக்க முடியாது பாதுகாப்பில்லைனு சொல்லிட்டு எல்லா இசைக்கருவிகளையும் உறையில் போட்டுக் கிளம்பிட்டாங்க...

எங்க தெரு பெருசுகளெல்லாம் அந்த ரவுடியைத் திட்டித் தீர்த்தார்கள்...  
இளைஞர்களெல்லாம் ஆற்றாமையில் நொந்து போய் நின்றார்கள்.. 
நாங்க முன் வரிசைல இடம்பிடிச்சும் ஒரு பாட்டுக்கு மேல நிகழ்ச்சி நடக்கலையேனு ரொம்ப நொந்து போய் அவரவர் வீட்டுக் கிளம்பினோம்... 
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

இப்பவும் அது மாதிரி சிலரை காண நேரிடுகிறது.... 

8 comments:

Yaathoramani.blogspot.com said...

நிகழ்வை படித்து முடித்ததும் அதிர்ச்சியாய் இருந்தது
நீங்கள் சர்வ சாதாரணமாக முடித்த விதமும்..

Balaji said...

மிக்க நன்றி ஐயா....
இயல்பாய் முடிக்கணும் என்றே அப்படி முடித்தேன்...

கோகுல் said...

ஆக, ரெக்கார்ட் டான்ஸ் பாக்க முடியலை, சோ சேட் ;(

Balaji said...

ஹா ஹா ஹா.... அப்ப ரெக்கார்ட் டான்ஸ்னா என்னானு தெரியாத வயசுங்க...

aathmaa said...

அப்ப என்ன அப்ப, இப்பவும் எங பாஸுக்கு தெரியாதாக்கும்...

Balaji said...

ஹா ஹா ஹா....

ஆமாங்க ஐயா....

Unknown said...

நல்லதொரு பதிவு.

அன்புடன்
அமர்க்களம் கருத்துக்களம்
தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்
www.amarkkalam.net

Balaji said...

அமர்க்களம் கருத்துக்களம் said...
நல்லதொரு பதிவு.

மிக்க நன்றி...