Thursday, January 31, 2013

பர்மீஸ் தமிழர்...

பர்மீஸ் தமிழர்

குடும்பத்துடன், காய்கறி மற்றும் வீட்டுக்கான பொருட்கள் வாங்க ஒரு சூப்பர்மார்க்கெட் சென்றிருந்தோம்...

பணம் செலுத்துமிடத்தில் பெரும்பாலும் பிலிப்பினோக்களும், அரபி பேசுபவர்களும், இந்தியர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள்.... நான் பார்த்த மட்டும், இந்தப் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும், நல்ல சிவப்பாக இருப்பார்கள்...

அன்றுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்... என் போல கருப்பாக ஆனால் வடிவாக இருந்தார்... என்னவோ அவருடைய வரிசையில் நின்று பணம் கட்ட வேண்டும் என்று தோன்றியது.... ஹாய் என்று ஆங்கிலத்தில் பேசினேன் அவர் எங்களிடம் தமிழில்  பேசினார்...

எனக்கு எப்பவும் தமிழ்க்குரல் கேட்கும் போது மனம் ஒரு வித இனம்புரியா மகிழ்ச்சியடையும்.... அதுவும் முன்பின் தெரியாத ஒருவர் பேசும் போது, நம் முகம் இயல்பா மலர்ந்து போகும்... எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது....  ஆனால் அவர் பேசும் பேச்சு வழக்கு வித்தியாசமாக இருந்தது... எந்த ஊர்த் தமிழ் என்று என்னால் கணிக்க இயலவில்லை.... இதுவரை இந்த மாதிரி பேச்சு வழக்கைக் கேட்டதில்லை....

ஆ வணக்கம், நீங்க தமிழா... என்று கேட்டு பேச்சைத் தொடர்ந்தேன்...

ஆமாம் சார்... 

உங்க பேச்சு வித்தியாசமா இருக்கே....

நாங்க பர்மீஸ் தமிழர்கள் சார்...

ஓ அப்படியா.... நலமா? 

நல்லா இருக்கேன் சார்...

எங்கள் பொருட்களை விலை போட்டபடி வேகமாகவே பேசிக்கொண்டிருந்தோம்....

பர்மால நிறைய தமிழர்கள் இருக்காங்களா....

இருக்காங்க சார்...

இங்க எப்ப வந்தீங்க....

ஒன் யியர் இருக்கும் சார்...

இவ்வாறு பேச்சுத் தொடர்ந்தது....

பின்பு அவரின் குடும்ப நிலையையும், இங்கு (துபாய்) வந்து சேர்வதற்குள், பர்மாவில் பட்ட துன்பங்களையும், ஏஜெண்டுக்கு கட்டிய பணத்தையும், கூடப்பிறந்த அண்ணன் எங்கிருக்கிறார் என்றே தெரியாத நிலையையும், தன் குடும்பத்தைக் காக்க வேண்டிய கடமைமையும் சிரித்துக்கொண்டே வேகமாகவும் சுருக்கமாகவும் சொல்லி முடித்தார்....

மகிழ்ந்து மலர்ந்திருந்த என் முகம், அவர் கதை கேட்டு சுருங்கிப் போனது...

கவலைப்படாதீங்க, சிவனருளால் எல்லாம் சரியாகும், வேண்டிக்கிறேன் என்று நான் சொன்னதும், அவர் முகம் முன்பை விட இன்னும் மலர்ந்து, தேங்க்ஸ் சார் என்று சொன்னார்....

எங்கள் பொருட்களை, ட்ராலியில் வைத்து தள்ளிக் கொண்டு கிளம்ப எத்தனித்த போது, மீண்டும் எங்களைப் பார்த்து, 

சார்,

சொல்லுங்க....

ரொம்ப நன்றி சார்.... 

மகிழ்ச்சி என்று பதில் சொல்லிவிட்டு கிளம்பினேன்...

No comments: