Thursday, January 31, 2013

சுலைமான் தாத்தா...


அனைவருக்கும் வணக்கம்,

நாள்தோறும் எத்தனையோ நிகழ்வுகள் நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது... சிலவற்றை கண்டுகொள்ளாமல் செல்கின்றோம்... சில நிகழ்வுகள் நம்மைக் கொஞ்சம் நின்று பார்க்க வைக்கின்றன.... 

என் பயணங்களில் நான் சந்திக்கும் நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
.....................................

சுலைமான் தாத்தாவுடன் என் பயணங்கள்: 

பாலாஜீஈஈஈஈஈ - 

அவரின் குரல் தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்து எனக்குக் கேட்டது.... 
சுலைமான் தாத்தா கூப்பிடுகிறார்...

அவரோடு வழக்கம் போல கிடைத்த இடைவேளையில் பேசிக்கொண்டிருந்தேன்... 
நல்லா இருக்கியா.... அல்லா உனக்கு மகிழ்ச்சியை அளிப்பான்.... 
என சொல்லி பேச்சைத் தொடர்கிறார்...

அவர் தம் தோட்டத்தில், பயிரிட்டிருக்கும் பல காய்கறிச் செடிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்...  

இங்க பார் தக்காளி போட்டிருக்கேன்... 

பூசணி பூ வச்சிருக்கு.... 

இந்தச் செடி வாடியிருக்கு...

முருங்கைக் கீரை பறிச்சிக்கிறேனு சொன்னியே, ஏன் இன்னும் பறிக்கலை... பறிச்சிக்கோ...

காகிதப்பூ வண்ணத்தைப் பார்...எவ்ளோ அழகா இருக்கு...

நீயும் இந்த இடத்தில் ஒரு செடி நடு, நான் வளர்த்து விடுகிறேன்..

இப்படியாக பேசிக் கொண்ட்டே, ஒவ்வொரு செடியாக கூட்டிப் போய் காட்டுகிறார்... 

செடி கொடிகளை நான் நேசித்து வளர்ப்பதால், என்னை அல்லா நன்றாக பார்த்துக் கொள்கிறான் என்கிறார்...

சில நாட்களில் வேலை நிமித்தமாக அவரைச் சந்திக்க இயலாமல் போனதுண்டு.... 

இரண்டு நாட்களாக எங்கே போனாய்... நேற்று உன்னைப் பார்க்கவில்லையே என்று கேட்பார்...

வேலை , வெளில போய்ட்டேன் என்று சொல்வேன்...

சரி சரி வேலையைப் பார் என்பார்....

பூக்களைப் பார்க்கும் போதும் என்னிடம் காட்டும் போதும் அவர் மனமும் , முகமும் பூக்கத் தவறுவதில்லை... 

பாலாஜி ஃபோட்டோ நிக்கால் என்கிறார்... 

பூக்களோடு அவரை ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன்... 

அந்தப் படத்தைப் பார்த்ததும் மேலும் அவருக்கு மகிழ்ச்சி...

இன்றைக்கு எந்தெந்த வேலை செய்யவேண்டும் என்பதைக் கூறிவிடுகிறார்... 

அந்த மரத்தின் கிளைகள் தாழ்ந்து இந்தச் செடியை அமுக்குகின்றன... 

அதை வெட்டிச் சரிசெய்ய வேண்டும்... 

நேற்று வேலை செய்யும் போது கையை அறுத்துக் கொண்டேன்... 

என் காயத்தைப் பார்... புண் பாதிக் காய்ந்திருக்கிறது... சீக்கிரம் சரியாகிடும்....

சிரித்துக்கொண்டே சொல்கிறார்...

நேற்றுதான் இந்த இடத்தை தூய்மைப் படுத்தினேன்... 

இங்க பார் மறுபடி குப்பையைப் போட்டிருக்கிறார்கள்... 

மரம், செடிகளின் மேலே மாடியிலிருந்து இவர்கள், ப்ளாஸ்டிக் பையில் சுருட்டி வீசுகின்ற குப்பை அருவருப்பாய் இருக்கிறது என்கிறார்... 

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பைப் பற்றி பேசிக் கவலைப்படுகிறார்... 

மனிதர்களிடம் மனிதாபிமானம் இல்லை என்று வருந்துகிறார்...

அவர் என்னுடன் பேசும் போது நான் குறுக்கே பேசுவதில்லை...

சிரித்துக் கொண்டே அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்...

அவர் பேசிக் கொண்டே இருக்கிறார்... 

நான் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் பேசிக் கொண்டே இருக்கிறார்... 

சில நேரங்களில் ஏற்கனவே சொன்னதையும் மறுபடி சொல்கிறார்... 

புதிதாய் கேட்பது போலவே கேட்டுக்கொண்டிருக்கிறேன்... 

கொஞ்ச நேரம் சென்றதும், நேரத்தை உணர்ந்து, சல், தேரா காம் கரோ என என்னை அனுப்பி விடுகிறார்.

சுலைமான் தாத்தா என்னிடம் எதோ உணர்த்த முற்படுகிறார் அவரை அறியாமலே... 

எனக்குப் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது...

எது எப்படியோ, அவரோடு செலவிடும் சில நிமிட நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்... அவரும் மகிழ்ச்சியாக உணர்வார் என நம்புகிறேன்...

இவரைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்... 


சுலைமான் தாத்தாவின் தோட்டம்




1 comment:

அ.மு. நெருடா said...

அற்புதமான மனிதர். சில உள்ளங்களுக்கு தேவை காசு பணம் அல்ல... சில நிமிட உரையாடல் மட்டுமே