Thursday, March 21, 2013

வாழ்த்துகளை மட்டுமாவது சொல்லி வைப்போம்...


பாலச்சந்திரனின் பார்வை, நெஞ்சில் பாய்ந்த ஐந்து குண்டுகள், அந்த ஒரே படம் எத்தனையோ இதயங்களைத் துளைத்துச் சென்று விட்டது... 


மாணவர்களிடம் பற்றி எரிகிறது உணர்வுத் தீ...

எதெல்லாம் தமிழ்நாட்டில் நடக்காது என்றிருந்தோமோ அதெல்லாம் நடக்கத் தொடங்கிவிட்டது... கட்சி சார்ந்த இனமாக பிரிந்து, மெல்லவும் இயலாமல் முழுங்கவும் இயலாமல் நொந்திருந்த தமிழின குடும்பங்கள் அனைத்தையும் ஒரே பார்வையில் பார்க்க வைத்திருக்கிறது மாணவர் போராட்டம்... எல்லாருக்கும் இப்பொழுது இனப்படுகொலை  பற்றித் தெரியவருகிறது...

இத்தனை நாட்கள் , தமிழர்கள், ஈழம், இனப்படுகொலை என இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறதென்றே அறியாதிருந்த மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, எங்கள் கூட வேலை செய்யும் நண்பர்களிடமும் இந்த மாணவர் போராட்டம், இத்தனை நாட்களாக நடந்த நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. ”ஓ சேட்...” என்று பாலச்சந்திரன் படம் பார்த்தவர்கள் வருந்துகிறார்கள்... மாணவர்களின் போராட்டத்தை வரவேற்று பேசுகிறார்கள்...

இந்த உணர்வு மிகுந்த மாணவர் போராட்டத்தில், பொது மக்களும் குறிப்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் பலரும் பங்கேற்கத் தொடங்கிவிட்டனர்... எல்லாத் துறையைச் சார்ந்தவர்களும் இயன்றளவு பங்கேற்க தொடங்கிவிட்டனர்... 

நம்பிக்கை வருகிறது நல்லது நடக்குமென... 

இந்தப் போராட்டத்திற்கு நாமென்ன செய்திருக்கிறோம் என்று எண்ணிப்பார்த்தால் ஒன்றுமில்லை...

எத்தனையோ e-போராளிகளைக் கண்டு வருகிறோம் இணைய உலகின் பழக்கம் வந்த பிறகு... பெரும்பாலும் ஸ்டேடஸ் பகிர்வதிலும், அரசியல்வாதிகளைத் திட்டுவதிலும், சினிமாக்காரர்களைத் திட்டுவதிலும், பழகியவர்களையும் இழிவாகப் பேசுவதிலும்தான் தங்களின் தமிழுணர்வைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்... இவர்களைப் பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்பீர்கள்...

இவர்களின் தமிழுணர்வு கணினியை ஷட் டவுன் செய்தவுடன் அடங்கிவிடும் மறுநாள் மறுபடியும் கணினியைத் திறக்கும் வரை.... 

சரி, தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்தப் போராட்டத்தில் நான் கலந்து கொண்டிருப்பேனா என்றால் அதுவும் ஐயப்பாட்டிற்கு உரியதுதான்... இந்தப் போராட்டங்களுக்கு வாழ்த்துச் சொல்லும் பலரும் தம் குடும்பத்தில் உள்ள மாணவர்களை போராட்டக் களத்துக்கு அனுப்புவார்களா என்றால் அதுவும் ஐயப்பாட்டிற்கு உரியதுதான்....பல சூழ்நிலைக் காரணங்களைச் சொல்லி என்னால் இயலவில்லை என்று தப்பித்துக் கொண்டிருக்கலாம்... சுயநலமும், பயமும், நமக்கு ஏன்பா இதெல்லாம் என்ற எண்ணமுமே சூழ்நிலைக் காரணங்களின் உட்பொருளாக இருக்கும்....  

இப்படியாக இந்தப் போராட்டங்களைப் பற்றிய செய்திகளையும், சில தகவல்களையும் இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, 
ஐடி துறையினரின் மனிதச் சங்கிலி போராட்டத்தில், எனக்குப் பழக்கமான தம்பி திரு.வினோத்தின் களப்பணியைப் கண்டதும், சற்றே மனம்  கூசி விட்டது.... சே... நம்மால் இயலவில்லையே என்று.... என்னுடைய இயலமை ஆற்றாமை எல்லாம் சேர்ந்து கொஞ்சம் அவமானமாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது....

குழுமங்களிலும் , சமூக வலைத்தளங்களிலும் சில e-போராளிகளை கண்டு நொந்திருந்த வேளையில், தம்பி வினோத்தின் உணர்வு மிகுந்த களப்பணி பெரும் மரியாதையும், உணர்வையும் ஏற்படுத்தி விட்டது... நான் செய்ய அஞ்சும் அல்லது என்னால் செய்ய இயலாததை களத்தில் நின்று செய்யும் தம்பி வினோத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்...




நம்மால் இயலாததை பிறர் செய்யும் போது, வாழ்த்துகளை மட்டுமாவது சொல்லி வைப்போம்...

நன்றி....

பெருமையாக இருக்கின்றது தம்பி...

Thursday, March 7, 2013

இப்படிக்கு, தோட்டக்காரன்...


ஓடி விளையாடும் குழந்தைகள்
கண்காணிக்கும் பணிப்பெண்கள்...

கால்நீட்டி அமர்ந்து
கதை பேசும் பெற்றோர்கள்...

சக்கரநாற்காலியில் சாய்ந்தமர்ந்து 
வானம் பார்த்திருக்கும் முதியவர்...

குப்பை பொறுக்குபவர்கள்
வேலை செய்து களைத்தவர்கள்...

உடல் இளைக்க நடப்பவர்கள்
உடல் இறுக்க ஓடுபவர்கள்...

காதுள் இசை கேட்டு 
கண் மூடி கரைந்திருப்பவர்கள்...

மண்ணுள் புதைந்த 
உணவைக் கிளறி உண்ணும் 
சின்னஞ்சிறு பறவைகள்...

மரக்கிளைகளில் கதைபேசி
மகிழ்ந்திருக்கும் பெரும்பறவைகள்...

சிதறிக் கிடந்த ரொட்டிகளை
உண்டு ஓய்ந்திருக்கும் பூனைகள்...

காலுறை மாட்டப்பட்ட
செல்ல நாய்கள்...

வண்டுகள்
எறும்புகள்
இன்னும் எத்தனையோ உயிர்கள்...

மஞ்சள்
சிவப்பு
ஊதா
வெள்ளையாய் 
வண்ண வண்ண பூக்களோடு
கனியும்,நிழலும் தரும் 
மரங்கள், செடிகள்...

என,

தோட்டத்தில் சில நேரம் 
தங்கிச் செல்வோரையும்
நின்று வாழ்வோரையும்

மேகத்திரை நீக்கி 
வானம் நீ, கீழ் பார்க்க ...

என் தாவரங்களோடு பேசிக்கொண்டே
தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறேன்...

இப்படிக்கு,

தோட்டக்காரன்.