Monday, May 6, 2013

இப்ப அதுவே பழகிடுச்சு....

ஓராண்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நம்மூருக்கு விடுமுறைக்காக சென்று வந்தேன்...

எங்கூருல அதே மக்கள்தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் செயல்பாட்டில் பல மாற்றங்கள்... ரொம்ப திட்டமிட்டு செயல்படுகிறார்கள்... எல்லா பாராட்டும், நன்றியும் தமிழக மின்வாரியத்திற்கே சேரும்...



சித்தப்பா இப்ப கரண்டு போயிரும்.... சொன்ன மாதிரியே டான்னு கரண்டு போயிருது... 

மாப்ள இப்ப கரண்டு வந்துரும்டா... சொன்ன மாதிரியே டான்னு கரண்டு வந்திருது... 

அனைவருக்கும் தெரிந்திருக்கிறது கரண்டு எப்ப போகும் எப்ப வரும்னு... சில நேரங்களில் நேர மாறுதல்களும் செய்யப்படுகிறது... ஆகா நேரத்த மாத்திட்டாய்ங்களே... இன்னைக்கு 10 மணிக்கு போயிருச்சா, அப்ப 12 மணிக்குத்தாண்டா வரும்... என்று முடிவுசெய்து கொள்கிறார்கள்...

நேர மேலாண்மை, நேரந்தவறாமை என எல்லாத்தையும் தமிழக மின்வாரியத்திடம் கற்றுக் கொள்ள உலகின் பல பகுதிகளில் இருந்து ஆட்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை... அவ்ளோ செம்மையாக செயல்படுகிறார்கள்...

12 மணி நேரம் 14 மணி நேரம்னு மின்சாரம் இல்லாத நேரங்களே, ஒரு நாளில் மிகுந்து இருக்கின்றது....

தமிழக மக்கள் வாழ்க்கை முறையும், தொழில்களும் மின்சாரத்தின் இருப்பைப் பொறுத்து மாறியிருக்கின்றது...

எடுத்துக்காட்டாக... ஒரு ஜெராக்ஸ் எடுக்கப்போனால், அங்க ஒரு போர்டு வச்சிருக்காங்க... மின்சாரம் இருந்தால் 1 ரூபாய், மின்சாரம் இல்லாவிட்டால் 2 ரூபாய் என்று... ஆக, பல தொழில்கள் மின்சாரம் இருந்தால் ஒரு விலை இல்லாவிட்டால் ஒரு விலை என்றாகி விட்டாது...

மின்சாரம் இருக்கும் போது செய்ய வேண்டிய வேலை, இல்லாத போது செய்யவேண்டிய வேலை என மக்கள் அழகாக திட்டமிட்டு செயல்படுகிறார்கள்... வேற வழியில்லையே....  

இன்னைக்கு சட்னிலாம் கிடையாது... கரண்டு வர இரண்டு மணி நேரம் ஆகும்.. பொடிய தொட்டுச் சாப்பிட்டுப் போங்க...  என அன்றாடஉணவு முறையைக் கூட மின்சாரம் தீர்மானிக்கிறது...  துணி துவைக்கிறது, முகச்சவரம் செய்வது, உணவு சமைப்பது, குளிப்பது என எல்லாவற்றையும் மின்சாரம் இருக்கும் நேரமே இப்பொழுது தீர்மானிக்கின்றது...

இன்வெர்ட்டர் விற்பவர்களுக்கு இது ஒரு அறுவடை காலம் என்றே சொல்லலாம்... இப்பொழுதெல்லாம் வரதட்சணையாக இன்வெர்ட்டரும் கேட்கிறார்கள் என்று நகைச்சுவைகள் வந்தன... அது உண்மையாகவும் இருக்கலாம்....

கடும் வெயில், இருக்கும் ஒரு சில மரங்களிலும் கொஞ்சம் கூட அசையாது நிற்கும் இலைகள், வெப்பம்... தாங்க முடியாத வெப்பம்... குழந்தைகள் பெரியவர்கள் என்றில்லை அனைவரும் படும் துன்பம் சொல்லி மாளாது... 

பழைய ஆட்சி மாறியதற்கு பல காரணங்கள் சொன்னாலும், உண்மையான, முக்கியமான காரணம் மின்வெட்டு... அதனால் ஆட்சி மீது மக்களுக்கு உண்டான வெறுப்பு...

கடந்த ஆட்சியிலிருந்து இந்த ஆட்சியின் தொடக்ககாலம் வரை, பல போராட்டங்கள் மின்வெட்டிற்காக செய்த மக்கள் இப்பல்லாம் மின்வெட்டிற்காக பெரிதாக எதும் போராட்டம் நடத்துவதாகத் தெரியவில்லை....


இன்றியமையாத அடிப்படைத் தேவை  மின்சாரம் ஆனால் அது இன்றியே இப்பொழுது மக்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பழகிவிட்டார்கள்...


கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரம் இல்லாத நேரங்கள் மிகுந்து மிகுந்து, 
இப்ப அதுவே பழகிடுச்சு...



5 comments:

வெங்கட் நாகராஜ் said...

பழகப் பழக சரியாகிவிடும் என்று சும்மாவா சொன்னார்கள்....

கற்காலத்துக்குப் போய்க்கொண்டிருப்பது போல ஒரு உணர்வு....

Balaji said...

உண்மைதான்...

நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

துல்லியமாக வெட்டுவதில் கில்லாடிகள்... அதுவும் மறந்து போய் 9.05 am கட் செய்தால் 12.05 am தான் வரும்... நியாயம்...!

இரவு ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை ஒவ்வொரு மணி நேரமும் மின் வெட்டு... கடிகாரம் பார்க்கத் தேவையில்லை...

Balaji said...

ஆமாம் ஆமாம்... ரொம்ப துல்லியமா இருக்காங்க :-)

நன்றி...

Balaji said...

மிக்க நன்றி...