Tuesday, October 1, 2013

பசி

ஒரு வேளை சாப்பிடலைனா என்னென்னவோ செய்யுது உடம்புக்குள்ள... கண்ணக்கட்டி காதடைத்து விடுகிறது... எல்லாமே மந்தமாகி விடுகிறது....

எங்கெங்கோ ஓடுகிறோம், என்னென்னவோ செய்கிறோம், கடுமையாக உழைத்து செல்வம் சேர்க்கிறோம்... வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வதற்கு படாத பாடுபட்டாலும், இத்தனை பாடும் ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் என்று முடிக்கிறோம்...

பணம் இருந்தும் வசதி இருந்தும் உண்ண நேரமில்லை என்றும், இந்த உணவு எனக்குப் பிடிக்கவில்லை என்றும் சில நேரங்களில் உண்ணாமல் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறோம்...

பட்டினி கிடப்பவனுக்குத்தான் தெரியும் பசியின் கொடுமை... அடுத்த வேளை உணவு கிடைத்து விடும் அல்லது நாளையாவது உண்ண உணவு கிடைத்து விடும் என்று நம்பிக்கையில் இருப்பவர்களை விடவும், கிடைக்குமா கிடைக்காதா என்று உறுதியே இல்லாமல் வாழ்க்கையில் உழன்று கொண்டிருப்பவர்களுக்குத்தான் பசியின் கொடுமை அதிகம்...

இவர்கள் ஒரு பக்கமென்றால், தனக்கு பசிக்குதா பசிக்கலையா என்று சுயநினைவின்றி சாலையோரங்களில் அழுக்கோடு அழுக்காய் பரவி படுத்துக்கிடப்பவர்கள் ஒரு வகை...

இவர்களுக்கும் பசி இருக்கும் என்பது நமக்கு தோன்றுவதில்லை...உச்சு கொட்டி பரிதாபத்தோடு கடந்துவிடுவோம்... இவர்களுக்கெல்லாம் உதவி செய்ய நம்மிடம் ஏது வசதி, எங்கே இருக்கிறது நேரம் என்று நாமெல்லாம் கடந்து போயிக்கொண்டிருக்கையில், நம்மோடு இதே சமூகத்தில் வாழும் சிலரின் அரும்பணிகள் மெய்சிலிர்க்க வைத்தன... 

நம்மோடு வாழும் அந்தச் சிலர் பற்றிய தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...

தூத்துக்குடி திரு. ராஜாராம் அவர்களைப் பற்றி நீங்களும் அறிந்திருப்பீர்கள்... அவர்கள் குடும்பத்தின் முழு ஆதரவு இன்றி அவர் செய்யும் அரும்பணி செயல்பாட்டுக்கு வந்திருக்காது... காலையில் எழுந்து சோற்றுப் பொட்டலங்களைக் கட்டிக்கொண்டு ஊரில் ஆதரவற்று இருக்கும் மனநோயாளிகள் ஏழைகளுக்கு வழங்கி வருகிறார்... அவர் பற்றிய செய்தித் தொகுப்பைக் காண இங்கே சொடுக்கவும்....  





மதுரை திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களைப் பற்றியும் முன்பே நீங்கள் அறிந்திருப்பீர்கள்...  சிஎன்என் - நாயகர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்...



சாலையோரத்தில் தன் நினைவின்றி பசிக்கொடுமையால் தன் மலத்தை எடுத்து தானே தின்ற ஒரு மனிதனைக் கண்டு மனம் நொந்து, இவர்களைப் போன்ற ஆதரவற்றவர்களுக்கு பசியாற்ற வேண்டும் என்று உயரிய நோக்கில், தனக்கு கிடைத்த நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையை உதறிவிட்டு, அட்சயா என்ற ட்ரஸ்ட் மூலம் ஒவ்வொரு நாளும் பல ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகிறார்... 





இவர்களைப் போன்று இன்னும் எத்தனையோ பேர் வெளியில் தெரியாமல் இருக்கலாம்... அமைதியாக தங்கள் அரும்பணியைச் செய்து கொண்டிருக்கலாம்...

நாமும் நம்மால் இயன்ற அளவு உதவுவோம்... வாய்ப்பு கிடைக்கும் போதோ அல்லது வாய்ப்பை ஏற்படுத்தியோ, நமக்குத் தெரிந்த / தெரியாத ஒருவரின் பசியையாவது போக்குவோம்...


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

கருத்துகள் அனைத்தும் உணர வேண்டியவை... பாராட்டுக்கள்...

Balaji said...

நன்றி நண்பரே...