Monday, December 30, 2019

”வாழ்க்கையை வாழப்போறேன்”

பாய்ஜான் ஊருக்குப் போறேன் ...
ஏன் பாய்ஜான் என்னாச்சு...
என்னத்த சொல்ல, வந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆச்சு பாய்ஜான்... 900 சம்பளத்துக்கு வந்தேன்... இப்பத்தான் 2000 கிட்ட சம்பளம் வந்திருக்கு... வந்த நாள் முதல் என் உழைப்பிற்கு தேவையான உடல்நிலையைத் தக்க வைக்க உணவுக்காக மட்டும் பணம் செலவளித்திருக்கிறேன். வேறு எந்தச் செலவும் செய்யததில்லை, இங்கே எங்கெங்கு என்னென்ன இடங்கள் இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது.இப்படி இறுக்கிப் பிடிச்சு சேர்த்த காசெல்லாம் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தேன்.
நான் இங்கு வந்த மூன்றாண்டுகளில் மனைவிக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது, அனுப்பிய பணமெல்லாம் அவளின் வைத்தியத்திற்கே செலவு செய்தாகிவிட்டது. இரண்டு பிள்ளைகளும் ஹைஸ்கூலில் படிக்குமளவுக்குப் பெரியவர்களாகிவிட்டார்கள். பெரியவர்களானால் அம்மா அப்பா பேச்சைக் கேட்க கூடாது என எதும் எழுதிவைத்து விட்டானா எனத் தெரியவில்லை. அம்மாவின் பேச்சைப் பிள்ளைகள் கேட்பதுமில்லை, அவளால் அவர்களைக் கட்டுப்படுத்தவும் இயலவில்லை.
எனக்கும் அவர்களுடன் நாள்தோறும் பேசவோ கேட்கவோ வசதியில்லை. அதான் முடிவா ஊருக்குப் போயிராலாம்னு முடிவுபண்ணிட்டேன் பாய்ஜான். மனைவியின் உடல்நிலை ஒருவேளை நான் அருகிலிருந்தாலே சரியாகிடுமோ என்னமோ தெரியல. ஆனாலும் நான் அவளை கூடவே இருந்து பாத்துக்கணும்னு நினைக்கிறேன், என் இறுதி வரை அல்லது அவள் இறுதி வரை. அவள் எனக்கு ஒரு குடும்பத்தைத் தந்தவள் பாய்ஜான்.
ஆனால் என் பிள்ளைகளுக்குத்தான் நான் எதோ வெளியாள் மாதிரி ஆகிட்டேன் இப்போ. அவர்களும் வளர்ந்து நிமிர்ந்து விட்டார்கள் என் பேச்சைக் கேட்பார்களா எனத் தெரியவில்லை. நான் ஊரில் இருந்தால், அப்பானு ஒருத்தன் இருக்கானேனு அவர்களுக்குக் கொஞ்சம் நினைப்பாவது இருக்கும்.
எப்ப ஊருக்குப் போகிற நேரம் வரும்னு வந்திறங்கிய நாள் முதல் நாள்தோறும் நினைச்சிக்கிட்டு இருந்தேன். என்னமோ எனக்கு இப்பத்தான் அந்த நேரத்தை வழங்கியிருக்கிறான் இறைவன். போய் இனி சம்பாரிக்க முடியுமானு தெரியல, ஆனா வாழ்க்கையை வாழப்போறேன் பாய்ஜான். என்று சொல்லி முடிக்கும் போது கண்கள் கலங்கிவிட்டது
இறைவன் நாடினால் எல்லாம் சரியாகிடும் பாய்ஜான் , பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள், மனைவிக்கு எல்லாம் சரியாகிவிடும் பாய்ஜான் என சொல்லிவிட்டு நகரும் போது என் கண்ணும் கலங்கிப்போச்சு. ”வாழ்க்கையை வாழப்போறேன்” எனும் கனத்த சொல் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

Sunday, November 17, 2019

வீராப்பு - ”பரிவை” சே. குமார்


பொழுது பளபளனு விடிவதோடு கதை தொடங்குதுஒரு தகவல தெரிஞ்ச பிறகு உங்களுக்குத் தெரியும்னு நினைச்சு சொல்லாம இருந்துட்டேன் என்று இப்போதைய மனிதர்களைப் போல கிராமத்தானால் இருந்து விட முடியாதுதான் கேள்விப் பட்டத உடனடியாக உரியவனிடம் முதலில் கொண்டு போய்ச் சேக்காம நிம்மதியா இருக்க முடியாதுஅப்படி தான் கேள்விப்பட்ட சேதியோடு சாமிநாதன் வீட்டு வாசலில் நிற்கிறார் சேதுக்கரசுசொல்லும் சேதி என்னன்னா செல்வம் என்பவரின் மகன் குடும்பத்தோடு வந்திருக்கான்யார் இந்த செல்வம் அவர் மகன், அவன் வந்ததுக்கு இவர் ஏன் பதறுகிறார் என அறியும் ஆர்வத்துடன் கதையைப் படிக்கத் தூண்டுகிறார் தம்பி குமார்
அவுக பங்காளிகளுக்குள்ள நடைமுறை வழக்கத்தை மீறி ஒரு பெண்ணைக் கட்டுகிறார் செல்வத்தின் மகன்… பையன் வீட்டுலயும் பொண்ணு வீட்டுலயும் அறிவுரைங்கிற பேர்ல தங்களுடைய வறட்டு கவுரவத்தை வீராப்பாக காட்டிவிட்டு வருகிறார் சாமிநாதன்… அதெல்லாம் கண்டுக்காம அவுக ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்கிறாக…
மனுசன் சில தலைமுறைகளுக்கு முன்னால ஏற்படுத்திய எதோ ஒரு பழக்கத்தை என்னா ஏதுனு எதுவும் தெரிஞ்சுக்காம அப்படியே இன்னமும் புடிச்சுக்கிட்டு தொங்கிறதும், அதுதான் நடைமுறைங்கிறதும்,  அதை மீறுபவர்கள் மீது கடுமையான எதிர்ப்பைக் காட்டுவதும் தொடர்வதை அதன் விளைவுகளையும் மிக எளிமையான எங்கள் மண்ணின் மொழி வழக்கில் கதையாக எழுதியிருக்கிறார் தம்பி…
செல்வத்தை செலுவம் என்று எழுதியதுமே எங்கள் மண்ணின் வழக்கு வந்து விடுகிறது...  தொடர்ந்து சொல்லி வரும் காட்சிகள், டீ டம்ளர்ல ஈ மொய்க்கிறது, எருக்கூட்டுவதற்கு கட்ட விளக்குமாறு, வேண்டாம்னு சொல்லியும் ஏன் காபி போட்ட, சரி கொண்டானு வாங்கிக் குடிக்கிற கோபத்துக்குள்ள பாசம் என இந்த வீராப்பு என்னும் சிறுகதையில் மண்ணின் மக்களின் அணுகுமுறை, கிராமத்தின் வாழ்வியல்  ஆகியனவற்றை தேவையான அளவு திருத்தமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்…
கடைசியாக சாமிநாதன் குடும்பத்தில் நடந்த ஒரு தற்கொலைச் சாவை நினைவு படுத்தும் செல்வம், சாமிநாதன்களின் வீராப்பு என்னும் வறட்டுக் கவுரவத்தின் மேல் சாணியடித்திருக்கிறார்…
நல்ல கதை, இன்னும் நிறைய எழுதுங்க… உங்கள் படைப்புகள் நூலாக வரவேண்டும்… வரும்… வாழ்த்துகள் எங்கள் மண்ணின் எழுத்தாளனே…
பி.கு. வீராப்பு – ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகாளவிய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதையாகும்.
கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்...

Wednesday, October 30, 2019

குட்டிகோரா


பொதுத் தமிழுக்கு எப்போதுமே ஈர்க்கும் திறன் குறைவு வட்டார வழக்கை ஒப்பிடும் போது… வட்டார வழக்கில் பேசப்படும் போது எழுதப் படும் போது மட்டுமே உணர்வுகள் உள்ளபடியே கடத்தப் படுவதவாக நம்புகிறவன் நான். வட்டார வழக்குத் தமிழே தேன்… முக்கனிச் சுவை வட்டார வழக்குத் தமிழ்...

நாஞ்சில் வழக்கில் தம்பி தெரிசை சிவாவின் சிறுகதைத் தொகுப்பு - குட்டி கோரா…





ஒரு நூலை வட்டார வழக்கில் எழுதுவதம் மூலம்  என்னென்ன செய்து விட முடியும்? மண்ணை மண்ணின் நிறத்தை மணத்தை பரப்பை மக்களை உணவை நீரை கல்லை மலையை காற்றை செடியை பூவை மரத்தை என என்னென்ன முடியுமோ எல்லாவற்றையும் தன் எழுத்தின் வழி கொண்டு வந்து காட்டிவிட முடியும்…. பகிர்ந்து கொள்ள முடியும்… உணர்த்தி விட முடியும்…. நாஞ்சில் பகுதியில் இருக்கும் மக்களின் பேச்சு, அவர்களுக்குண்டான குணநலன்கள், விழாக்கள், சாமிகள், இன்னும் என்னென்னவோ எல்லாவற்றையும் குட்டிகோரா தொகுப்பின் மூலம் கடத்தியிருக்கிறார் தம்பி சிவா… சுடலை மாடனும், இசக்கியும், முண்டனும் நூலின் எல்லாப் பக்கங்களிலும் படுத்தும் நின்றும் நடந்தும் கொண்டிருக்கிறார்கள்… முறுவல் கெட்டி கரிசல் தோசை ரச வடை, சாமி கொண்டாடி, படைப்புச் சோறு, பலி உதிரம், ஆராதனைக் கொட்டு, வில்லுப் பாட்டு, அக்குப்பிரை, இளையராஜாவின் இசை வீச்சு, சாமியார்களின் பூஜை அட்டூழியங்கள், துரைப்பாட்டா நாட்டு வைத்தியங்கள், முதல் தலைமுறை பட்டதாரி மகன் அப்பாவின் வேலை பார்க்க வைக்கப் படும் போது ஏற்படும் சிக்கல்கள், அப்புறம் சுடலை சுடலை சுடலை சுடலை இசக்கி இசக்கி முண்டன் என கலந்து கட்டி ஆடியிருக்கார் தம்பி சிவா….

தோசை… படிக்கத் தொடங்கியங்கியதுமே அவர் சொல்லி வரும் அத்தனை வகை தோசைகளும் ரச வடையும் நாக்குல எச்சி ஊற வைக்கும்… எளிமையான மொழி நடை கதை ஓட்டம் அழுத்தமான கருத்துகளுடன் கூடிய முதல் கதை… ரசிச்சுப் படிச்சேன்… கோயிலும் வேண்டாம் மசூதியும் வேண்டாம் ஒரு பல்கலைக்கழகத்த கட்டுங்கப்பா என்பது நல்ல தீர்வாக என் மனசுக்கும் பட்டது....

ஆதிமூல பெருமாள் எனும் அண்டியைப் பற்றியும் அவன் உருவத்தைப் பற்றியும் சிவா எழுதியிருப்பதைப் படித்தாலே சிவாவின் நக்கலும் நையாண்டியும் நன்றாகத் தெரியும். அதிலும் குறிப்பாக அண்டியின் வேட்டியின் நிறம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது செம… ரொம்ப ரசித்த காட்சிகள் பச்சை மட்டைய கொண்டு போய் போட்டுட்டு யோய் பெருசு இன்னும் நீ சாகாலையானு கேக்குறது… பேப்பர் போடுற வேலைக்குப் போயிட்டு வாத்தியார் வீட்டு வாசல்ல கத்தி அந்தப் பெரிய மனுசன்மானத்த வாங்குறது யப்பா நல்லா சிரிச்சேன் சிவா…

அணுகுண்டு
ஒன்னுமேயில்லாமா எவனாவாது எதையாவது கெளப்பிவிட்டுட்டுப் போனதுக்கு நாம இம்புட்டு நாளு சேத்து வச்ச அம்புட்டும் போய், படாதபாடு படவேண்டியிருக்கவேண்டிய நிலையவும், மத ரீதியான ஆபத்து நிலையையும் ரொம்ப எளிமையா இதுல காட்டிட்டுப் போயிட்டார்… மேக்கொண்டு இதுல பேசுறதுக்கு ஒன்னுமில்லை… ஆனா ஒரு பொரணிய யாரெல்லாம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் பேசுறாய்ங்கனு இந்தக் கதெ தொடங்கும் போது சொல்லி வாராரு பாருங்க அது செமயா இருக்கும்…. வேலை வெட்டி இல்லாம பொரணி பேசுறதுக்குனே கன பேரு இப்படித் திரியிறான், இப்ப வாட்ஸாப் க்ருப்லாம் ஆரம்பிச்சித் திரியிறான்...

கும்பாட்டக்காரி
பச்சை பச்சையா பேசுனாலும் அதுல இருக்குற உண்மை நாகரீகமான பூசி மொழுகிற பேச்சுக்கு எப்பவுமே இருக்கிறதில்லை… அந்த வேலை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்தான் அதுக்கப்புறம் வேற வேலை பாத்தே ஆக வேண்டியிய கட்டாயம் அல்லது உசுர முடிச்சுக்கணும்… அது அவுகளுக்கும் தெரிஞ்சதுதான்…வேற வழியுமில்லை… ”வாழ்க்கை ரொம்ப கஷ்டமாகும் போது இந்த மாதிரி பாட்டைக் கடைசி ஒரு வாட்டி கேக்கணும்… அந்தால…பால்டாலை அடிச்சுச் சாகணும்னு” என்று வள்ளியம்மை என்னும் பாட்டுக் கிறுக்கி சொல்வதன் மூலம், இளையராஜாவே இவர்களின் காயங்களுக்கு களிம்பு என்று சொல்வதாகக் கருதுகிறேன்… இதற்கு எழுத்தாளர் சிவாவின் எண்ணவோட்டம் என்னவென்று அறியவும் ஆவல்….

சடலச்சாந்தி
இது ஒரு சிறப்பான சம்பவம்… அவன் இவன் ஜிஎம் குமார்தான் ஜமீனாக என் கண் முன்னாடி இருந்தார்… சிவாவின் எழுத்தின் வலிமை காட்சிகளைக் கண்முன்னே விரித்துக் காட்டுவது… படித்துக் கொண்டிருக்கும் போது அப்படியே உங்களை அந்தக் காட்டுக்குள்ளும் அந்த பூஜையறைக்குள்ளும் இழுத்துச் சென்றுவிடுவார்… சாம்பிராணி மணமும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…. ஆண்டைகளின் ஆணவம், விசுவாசத்தால் மாண்டு போதல், ஆணவக் கொலைகள் என வரிசையாக நடந்து முடிகிறது…

வெத்தலப்பெட்டி…
இந்தத் துரைப்பாட்டா இல்லாத ஊரே இல்லைங்கலாம்… அப்படி எல்லா ஊர்லயும் இப்படி ஒரு ஆளு இருப்பார்…. எவன் பேச்சையும் மதிக்கிறதில்ல… அவரு கண்ணுக்குத் தெரியாம ஊருக்குள்ள எதுவும் வரவோ போகவோ முடியாது… இவுக பெரும்பாலும் பெட்டிக்கடைத் தொழிலதிபதிர்களோ இல்லைனா மந்தைல வெட்டியா படுத்திருப்பவராகவோ இருப்பார்…. செம கேரக்டர்… இப்பக் கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமா மாறியிறியிருந்தாலும் பழைய போக்குவரத்தெல்லாம் ஞாபகம் வச்சு பேசுற பழைய கூட்டாளியான ஒரு நண்பன் இன்னும் இந்த துரைப்பாட்டாக்களுக்கு நட்பாக இருப்பது ஒரு சொகம்தான்… நிறைய பேர் அப்படிப் பாத்தும் இருக்கேன்... அந்த ரெண்டு பேரும் சேர்ந்து பேச ஆரம்பிச்சா பல பேரு கதை நாறிப் போகும்... அம்புட்டு ரகசியம் அவுக வச்சிருப்பாக... ரொம்ப ரசிச்ச கதை…

மலையாளப்பேய்கள்… அந்த பைக் பின்னாடியே உக்காந்து வந்தேன்யா… கிராந்தி பூ வாசம்லாம் வந்துச்சு…. இன்னும் அஞ்சாறு கதை உங்க வழக்குல படிச்சுட்டா உங்கூரு பேச்சும் வந்துரும் போல…. அந்த பல்லல்லால்ல உச்சரிக்க ரொம்ப குழறுதுப்பா…. J

பேண்ட்
நெஞ்சத் தொட்ட கதைப்பா… கடைசில கிளிசேவா அப்பன கொன்றுவீங்களோனு பயந்துட்டேன்… நல்லவேளையே நல்லபடியா முடிச்சீங்க… நாஞ்சில் வழக்குல அவுக போடுற காரசாரமான சண்டைக் காட்சிகள் வசனங்களெல்லாம் எனக்கு படிக்கும் போது செம சிரிப்பாத்தான் இருந்துச்சு…. கடைசில என்னால உனக்கேண்ட்டா அவமானம் மகனேனு, தொடையே கிளிஞ்சாலும் பேண்ட் போட்டுத் திரிஞ்ச அப்பா பாகுபலி சிலை மாதிரி உயர்ந்துட்டார்…. நெஞ்சு கனத்துப்  போச்சுப்பா…

ஆசான்…
செம… ஆசான்… வகுப்பெடுப்பதும் அந்த மாணவர்களிடம் அள்ளி விடுவதும்… யப்பப்பா செம.. அதுலயும் கத்தில சுண்ணாம்பு எடுத்து கொடுப்பேனு அடிச்சு விட்டது செம நகைச்சுவை…. என்னுடைய ஒரு ஆசிரியரை ஞாபகப் படுத்தியது…. இராத்திரி தண்ணியப் போட்டுட்டு நடந்து வர்ற காட்சியை, படுத்துக்கிட்டு வாசிச்சிக்கிட்டிருந்தவன் சிரிச்சுக்கிட்டு எந்திரிச்சு உக்காந்து வாசிக்க ஆரம்பிச்சிட்டேன்… சுடுகாட்டுல கனகா டீச்சரக் கண்டு வந்தவரு, பேய எத்துறேனு அரைப்போதைல கல்லுக்கால எத்தப் போறாருனு நினைச்சேன் அதே மாதிரி கல்லுக்கால எத்தி கட்டுப் போட்டுக் கெடப்பாரு… செம சிரிப்பு ஆசான்… பொண்டாட்டிய வேற திட்டுவாரு பாருங்க அது இன்னும் செம…

முடியன்… 
மொத்தக் கதைத் தொகுப்புல ரொம்ப ரசிச்ச கதைப்பா இந்த முடியன்… யம்மாடி… என்னா செலம்பல் பண்ணிட்டான் இந்த முடியன்… யே யாத்தே… அதும் சுடலையும் முடியன் பேசுற பேச்சு வார்த்தை ஆத்தாடி ஆத்தா… வேற யாரும் இப்படி பேசிக்கிற முடியாது… சுடலை ரொம்ப வெகுண்டு பேசுனா எப்படி இருக்குமோ அப்படியே எழுத்தில வடிச்சிருக்காப்ள தம்பி…. பாத்து பத்த வைங்கடா சூடத்த இருக்க ஒரு வேட்டியும் பத்திக்கப் போகுதுங்கிறதா இருக்கட்டும், எம்புட்டு நேரமா நிக்கிறேன் எனக்கு கால் வலிக்காதாங்கிறதா இருக்கட்டும், யோவ் பலி வேண்டாம்னு சொல்லுயானு முடியன் நடத்துற பேச்சு வார்த்தையா இருக்கட்டும், சரினு பலியத் தடுக்க ரெண்டு பேரும் போடுற திட்டமா இருக்கட்டும், கடைசில திருப்பதி சாமியா பிறக்கணும்டாயப்பானு புலம்புறாதா இருக்கட்டும்,  யம்மாடி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சுப் போச்சு… 

என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்கு இதான் இலக்கியம். இதோடு எனக்கான இலக்கியத் தேடல் முடிஞ்சு போச்சு…. சுடலையாக சிவாவும் முடியானாக நானும் டப்பிங் கொடுத்தால் எப்படி  இருக்கும் என்று கற்பனை செய்து கூடப் பார்த்தேன் செம  நகைச்சுவை….

இன்னும் இருக்கும் குட்டிகோரா, உலக்கருவி, நருவல் போன்ற மூன்று கதைகளும் சிறப்பாகவே உள்ளன…. நல்லா கருத்தாவும் அழகாவும், முற்போக்குச் சிந்தனை உள்ளனவாகவும் எழுதியிருக்கார் தம்பி…  அது எனக்கு எப்படிப் பட்டது என்றால், மற்ற நமக்கு அறிமுகமில்லாத ஆனாலும் பெரிய எழுத்தாளர்களின் இலக்கியத் தரமான கதை போல இந்த மூன்று சிறுகதைகளை, தம்பி சிவா எழுதியுள்ளதாகப் பட்டது…
வாழ்த்துகள் தம்பி சிவா…

Thursday, October 24, 2019

ஒரு பாட்டில் உயரம் தொட இது சினிமா அல்ல. வாழ்க்கை.


இழுத்துச் செல்வதற்கோ, ஓடிப்போவதற்கோ முன்பாக, ஒருநொடி சுயநலமின்றி சிந்தியுங்கள். உங்கள் பெற்றோரையும், உங்களுக்கு அடுத்து இருக்கும் உங்கள் உடன்பிறப்புகளையும், உங்கள் துணையுடன் நீங்கள் வாழப்போகும் எதிர்காலத்தையும்.
ஒரு பாட்டில் உயரம் தொட இது சினிமா அல்ல. வாழ்க்கை.
ஓடிப்போன பின் நீங்கள் நல்ல வாழ்வு வாழ்ந்தாக வேண்டும். அதையேதான் பெற்றோரும் மனதார வேண்டுவார்கள். ஆனாலும் அவர்களின் நொறுங்கிய மனதை தேற்ற, ஆற்ற நீங்கள் இன்னொரு பிறவி எடுத்தாலும் இயலாது.

சாதி மதம் பொருளாதாரம் என எந்த வகையிலும் மற்றவர்களை விட மேம்பட வேண்டுமெனில் தன்னுடைய அறிவாலும், உழைப்பாலும், நடத்தையாலும் மேலோங்க நினைக்கவேண்டும். அதைவிடுத்து, நெடுநாளாக ஒருவரை குறிவைத்துத் திட்டமிட்டு, அன்பு காதல் என அதற்கு சாயம் பூசி, அந்த ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து அதன் மூலம் ஆதாயம் அடைவது மேன்மையாகாது. இழிவு.

காதல் சாயம் பூசி உங்கள் இளமை பயன்படுத்தப் பட்டபின், சூழ்ச்சியால்தான் உங்களை இழுத்துச் சென்றிருக்கிறார்கள் என்று நீங்கள் தூக்கி எறியப்பட்ட / கைவிடப்பட்ட அன்று, நீங்கள் உண்மையைப் புரிந்து கொள்ளும் போது உங்களைத் தாங்க பெற்றோர்கள் மட்டும்தான் இருப்பார்கள்.
ஓடிப்போகும் போது உறுதுணையாக இருந்த நண்பர்கள், நீங்கள் குப்பையாக வீழ்ந்து கிடக்கும் போது, உங்களைத் தாங்குவதாக எந்த சினிமாவிலும் இதுவரை நான் கண்டதில்லை.
கிராமம் நகரம் எல்லாம் ஒன்றுதான் என்று சொல்லிவிட முடியாது. கிராமத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கிராமத்தில் உள்ளவர்களின் முகங்களை ஒவ்வொரு நாளும் காண்கிறார்கள். அவர்களுடன் பேச வேண்டியும் இருக்கும். குடும்பத்திற்கு அவமானம் எனில் மற்றவர்கள் முகத்தில் விழிக்க இயலாமல் அஞ்சிக் கூனிக் குறுக வேண்டியிருக்கும்.
நகரங்களில் அப்படி இருக்க வேண்டியதுமில்லை. வாய்ப்புமில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் முகங்கள் கூட பலருக்கு பல நாட்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முன்பெல்லாம் பாலுணர்வைத் தூண்டும் காரணிகள் இலை மறை காயாக இருந்த மட்டில் நன்றாக இருந்தது. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் கையடக்க கருவிகள் மூலம் எல்லாம் எல்லாருக்கும் வயது வேறுபாடின்றி வெளிப்படையாகக் காணக்கிடைக்கிறது. அதைக் கட்டுப்படுத்தவும் இயலாது.
இருவரின் எல்லாமும் நொடிப்பொழுதில் டிஜிட்டலாகப் பதிவு செய்யப்பட்டு பொதுவில் பகிரப்படுகிறது. ஆதலால் எதிலும் எப்போதும் கவனமாக இருத்தலே நம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு. எல்லாவற்றிற்கும் மீறி விதி என்ற ஒன்று இருப்பதாக நம்பிக்கொள்ள வேண்டியதுதான். அதுதான் ஆறுதலும் ஆகும்.
குழந்தைகளை காதலின் பேரில் இழந்து, காணாமல் தவித்து புகார் செய்ய வரும் பெற்றோரை கொஞ்சம் மரியாதையுடன் கனிவோடும் காவல்துறையினர் நடத்தவேண்டும். உங்களுக்கு ஒரு நாளில் வரும் ஆயிரம் புகார்களில் இதுவும் ஒன்றுதான். ஆனால் பெற்றோர்கள், பிறந்ததிலிருந்து தன் குழந்தையை இத்தனை நாள் வளர்த்த நினைவுகளோடும், ஏமாற்றப்பட்ட வலியோடும், தன் குழந்தையின் எதிர்காலம் என்னாகுமோ என்ற பெருங்கவலையோடும் உங்களைச் சந்திக்க வருகிறார்கள். அவர்கள் வேதனையை ஒரு பெற்றோராக நீங்கள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

Wednesday, October 16, 2019

மணல் பூத்த காடு

மணல் பூத்த காடு

ஒரு நாவலைப் படிக்கும் போது பார்வையாளனாக தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது ஒரு வகை… அந்த நாவலுடன் சக பயணியாக பயணிப்பது இன்னொரு வகை… கதையின் நாயகன் அனிஸூடன் பயணித்துக் கொண்டேதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன்…
முதன்முதலாக ஃபேஸ்புக்கில் இரண்டு பதிவுகள் ஒரு முன்னோட்டமாக பதிவிடப்பட்டன…. பெரும்பாலும் ரீட் மோர் என்று குறிப்போடு வரும் நீண்ட பதிவுகளைப் படிப்பதி்ல்லை… தெரிந்தவர்கள் வேண்டியவர்கள் என்றால் விருப்பக்குறியோ இதயக்குறியோ இட்டுவிட்டு கடந்து செல்வது வழக்கம்… ஆனால் இந்த முன்னோட்டப் பதிவுகள் தானாகவே விரும்பி ரீட் மோர் சுட்டியை அழுத்திப் படிக்க வைத்தன…. என்னடா அதுக்குள்ள முடிஞ்சிருச்சு என்பது போல இருந்தன அந்தப் பதிவுகள்…
பின்பு ஒரு நன்னாளில் என் கையில் ”மணல் பூத்த காடு” கொடுத்தார் முஹம்மது யூசுஃப் அண்ணன்…


ஒருவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள அவனுடன் பயணம் செய்தால் போதும் என்பது நபிகள் நாயகத்தின் பொன்மொழி… இதுவே இந்த நாவலின் முன்னுரையின் முதல் வரியும் ஆகும்…. ஆகவே குறைந்த காலத்தில் நிறையப் பயணங்கள் செய்திருந்த எனக்கு, அந்த வரிகள் அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்ட ஆவலைத் தந்தன….
எடுத்தவுடன் அரேபியாவின் பாலைவனப் பகுதியின் பால்வெளிச்சத்திற்கு, நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களை, உக்கார்ந்த இடத்திலிருந்து அப்படியே தூக்கிக் கொண்டு போய் அங்கே விட்டு விடுகிறார்… அங்கிருந்து நீங்களும் பயணம் செய்து கொண்டேயிருப்பீர்கள்… அங்கே ஒட்டகம் மேய்க்கும் ஹனீஃப்க்கும் அவர் மகனுக்கும் நடக்கும் உரையாடலும் அந்தக் காட்சி அமைப்பு அவர் அழைத்துச் செல்லும் இடங்கள் எல்லாம் உங்களை நெகிழ வைக்கும்…
அனீஸ் அவன்தான் கதையின் நாயகன். உங்களை அரேபியா முழுவதும் சுற்றிக் காட்டப் போகிறவன். சர்வீஸ் துறையில் இருந்து ஊர் ஊராய் நேரங்காலமில்லாமல் அலைந்து திரிந்தவர்கள் திரிபவர்கள் எல்லாரும்தான் இந்த அனீஸ்… அந்த அனுபவங்கள் உள்ளவர்கள் அனீஸ் பயணத்தில் தாங்களும் இரண்டறக் கலந்து விடுவார்கள்…
கடனோடு இருப்பது கொடுமை. வேலையில்லாமல் இருப்பது இன்னும் கொடுமை… கல்யாணம் ஆகி கடனும் கூடி வேலையுமில்லாமல் இருப்பது அதனினும் கொடுமை. அப்படி ஒரு சூழல் வரும் போது என்ன வேலை கிடைச்சாலும் செய்ய மனம் ஆயத்தமாகிவிடும். பலர் இந்தச் சூழலைக் கடந்து வந்திருக்கக் கூடும். அப்படியான சூழல்களில் ஒன்றில் சிக்கிய அனீஸ் அரேபியாவிற்கு வேலைக்குச் செல்கிறான். அவனுடைய பயணங்கள், அங்குள்ள மனிதர்கள், அவனோடு பயணித்த மனிதர்கள், இன்பம் துன்பம் என எல்லாவற்றையும் அனீஸின் வழியாக முஹம்மது யூசுப் அண்ணன் சொல்லும் கதைதான் ”மணல் பூத்த காடு”
சௌதி அரேபியாவில் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லாரும் இந்த நாவலைப் படிக்கும் புதுப்புது இடங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அந்த இடங்களைப் பற்றிய வரலாற்றுப் பின்னனியையும் அறிந்து கொள்வார்கள்.... அவ்வளவு தகவல்களை இந்த நூலில் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.... அங்குள்ள மரம் செடி கல் மலை இடம் என எதையும் விட்டு வைக்கவில்லை... அதன் பெயர், வரலாறு, சிறப்பு பெருமை என எல்லாத் தகவல்களையும் போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போகிறார்... மருத்துவத்துறை சார்ந்த பல எந்திரங்கள் அதன் பெயர்கள் அது வேலை செய்யும் முறை என விரிவான தகவல்கள் என போதுமான அளவுக்கு தந்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் குடும்பத்தினரை விட்டு, நண்பர்கள் மட்டும் சூழ வாழும் வெளிநாட்டு வாழ்க்கை முறை, விடுமுறை நாள் கொண்டாட்டங்கள் என இங்குள்ள வாழ்வியலைப் அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். நண்பர்களுக்கிடையேயான பேச்சுகள் என எல்லாம் படிக்கும் நமக்கும் பல நினைவுகளுக்கு இழுத்துச் செல்லும்... இடைஇடையே மனைவிக்கும் அனுப்பும் கடிதங்களும் அதில் கொட்டி வைத்திருக்கும் உணர்வுகளும் இங்கு குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்திருக்கும் எல்லாருக்குமான எழுத்து வடிவமாகப் பார்க்கிறேன் நான்.
ஆன்மீகம் சார்ந்து பல கருத்துகளையும் தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார், அது பலருக்கு பலவிதமான கேள்விகளை எழுப்பக் கூடும்... ஜெபல் அல் நூர் என்னும் மலையைப் பற்றியும் அங்கு நடந்த வரலாற்று நிகழ்வுகளையும் படிக்கும் போது கண்டிப்பாக நெகிழ்ந்து போவீர்கள்... மனசு இலகுவாகும் என்பதில் எனக்கு ஐயமில்லை... இன்னும் நிறைய இருக்கு, நீங்களே மணல் பூத்த காடு வாங்கிப் படிக்கும் போது அதன் எல்லாப் பரிமாணங்களையும் உணர்வீர்கள்...
என்னைக் கவர்ந்ததென்னவென்றால், இந்த அனீஸ் போலவே நானும் பல இடங்கள் சுற்றித் திரிந்தவன் என்பதால் என்னால் எளிதாக இந்த அனீஸோடு இணைந்து அவன் போகும் வழியெல்லாம் பயணிக்க முடிந்தது... சில இடங்களில் இவர் நம்ம கதையை ஊர் ஆள் பேர் மாத்தி வெளியிட்டு விட்டாரோ என சிந்திக்க வைத்தது... கிட்டத்தட்ட முன்னூறு பேர் போரில் மடிந்த பத்ரு என்ற இடத்தில் அனீஸ் நின்று வரலாற்று நினைவுகளில் மூழ்கிக் கொண்டிருந்த போது, பல ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக குருஷேத்திரம் போர் நடந்த இடத்தில் நான் நின்றிருந்த நினைவு வந்து போனது.... ஊர் ஊராக சுத்துகிற எல்லாருக்கும் இம்மாதிரியான இணை கற்பனைகளோ அல்லது அனுபவங்களோ ஏற்பட்டிருக்கும்... குறிப்பாக மொழி தெரியாத ஊரில் சுத்தியவர்களுக்கு... கிட்டத்தட்ட நாவலில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்வுகளில் என்னையும் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு இழுத்துச் சென்றதே இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்கான காரணமாகும்..


உடல்நலம் இருக்கும் வரை ஆண் அஞ்சுவதில்லை, எல்லாத் திமிரும் இருக்கும்... ஆனால் உடல்நலம் குன்றும் போது குழந்தையாகிப் போவான், எங்கிருந்தாலும் தனக்கு எத்தனை வயதானலும் தன் அம்மாவைத்தான் தேடுவான்... அதும் மொழிதெரியாத ஒரு ஊரில் தனியா இருக்கும் போது உடல்நலம் குன்றிப் போனால் அவன் பாடு என்னாகும்; மணல் பூத்த காடு படித்துப் பாருங்கள்...
அனீஸின் கூடவே ஒரு கரும்பன் பூனை சுத்துகிறான்; யாருமில்லை என்ற நீண்ட வாக்கியத்தை கமா போல தோன்றி உடைத்ததால் அந்தக் கரும்பன் அனீஸுக்கு உறவாகிப் போகிறான்... அவன் யாரென்று புரிந்து கொண்டால், வளைகுடாக்களில் பொருளுக்கு அலைந்திடும் மனிதர்கள் வாழ்க்கை புரிந்துவிடும்.
நாடு, மனிதர்கள், மொழி, ஆன்மீகம், பழக்கவழக்கங்கள் என பலவற்றின் மீது நாம் கொண்டுள்ள முன்முடிவுகளை மாற்றிக் காட்டியிருக்கிறது மணல் பூத்த காடு.
படித்துப் பாருங்கள்; மணல் பூத்த காட்டின் ஈரமும் வெம்மையும் வாசமும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்....

Sunday, July 21, 2019

யாப்பு - காப்பியக்கோ திரு. ஜின்னா ஷர்ஃபுதீன் - அமீரக எழுத்தாளர் வாசிப்பாளர் குழுமம்

அனைவருக்கும் வணக்கம்...
சிறுவயதில் தமிழ், இலக்கணம் படித்திருந்தாலும் எதுவும் இப்போது நினைவில் இல்லை… பேசுகிறோம் எழுதுகிறோம் ஆனால் அதுவெல்லாம் சரியா என்று தெரியாது... நமக்குத் தெரிந்ததெல்லாம் வஞ்சப்புகழ்ச்சி அணி, சில செய்யுள்கள், திருக்குறள் போன்றவை. பத்தாவது படிக்கும் போது ”குனித்த புருவமும்” மனப்பாடச் செய்யுள்; அதே காலகட்டத்தில் தளபதி படத்தில் இசைஞானியின் இசையில் ராக்கமா கையத்தட்டு பாடலில் “குனித்த புருவமும்” வருவதால் அந்தச் செய்யுள் மனப்பாடம் செய்ய எளிதாக இருந்தது. அதுவே பத்தாவது பொதுத்தேர்வில் கேள்வியாகவும் வந்ததால் அப்படியே அடி மாறாமல் எழுதி முழு மதிப்பெண்ணும் பெற்றோம்.
ஆகவே நெடுநாட்களாகவே இந்த யாப்பு அணி தொடை இலக்கணம் வெண்பா தளை அது இது என என்னென்னவோ சொல்கிறார்களே அதெல்லாம் என்னவென்று அறிந்துகொள்ள ஆசை. எங்கள் அமீரக எழுத்தாளர் வாசிப்பாளர் குழுமத்தில் எழுத்து வாசிப்பு சார்ந்து பலர் இயங்கி வருகிறார்கள்… என்னைப் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருமே சிறந்த படைப்பாளிகள்… தலைக்கு நாலைந்து நூல்களுக்கு மேல் ஏற்கனவே எழுதி வெளியிட்டுள்ளார்கள்… இன்னும் சிலர் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்கள், விரைவில் நூல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறலாம்… நான் நன்றியுரையும் ஆத்தலாம்…
கடந்த ரமதான் காலத்தில் ஒரு இஃப்தார் மாலையில் அண்ணன் ஆசிஃப் மீரான் அவர்களின் சத்திரத்தில் கூடிய போது, சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய ஐயா, காப்பியக்கோ திரு. Ahamed Jinnahsherifudeen அவர்கள் வந்திருந்தார்கள்… நோன்பு திறந்ததிற்கு பின்பு வழக்கம் போல நண்பர்கள் அரட்டை அடிக்க, ஐயாவும் எங்களோடு கலந்து கொண்டார்கள்…
ஐயாவின் பேச்சைக் கேட்க ஆவலாக காத்திருந்த எங்களுக்கு ஐயாவைப் பற்றிய அறிமுகம் தருவதற்காக தம்பி முஹையத்தின் பாஷா அவர்கள் மைக்கைப் பிடித்தார்கள், அன்றுதான் மைக்கிற்கு புது பேட்டரிலாம் போட்டு வச்சிருந்தேன்… மைக் பேட்டரி தீரும் வரை அறிமுக உரையே ஆத்திக்கொண்டிருந்தார் தம்பி… சரி மறுநாள் ஸஹர் சாப்பாட்டுக்குத்தான் ஐயாவைப் பேச விடுவார் போல என்று எல்லாரும் பதறியிருந்த போது ஒரு வழியாக ஐயாவிடம் மைக்கைக் கொடுத்து பேச அனுமதித்தார்… நல்லவேளை முஹையத்தின் பாஷாவே யாப்பிலக்கணமும் எடுத்து விடுவாரோ என்று அஞ்சியிருந்தோம்… இவ்வளவு பெரிய அறிமுக உரைக்குப் பிறகு ஐயா புதிதாக என்ன பேசப் போகிறார், இப்படிக்கு, ஜின்னாஹ் ஷர்புதீன் என்று சொல்லி முடிக்கப் போகிறார் என்றுதான் நினைத்திருந்தோம்… ஆனாலும் பெரிய மனுசன் பெரிய மனுசந்தான்… நமது மொழி, அதன் சிறப்பு, வெண்பா, இலக்கணம் நாட்டு நடப்பு என இயல்பாக எங்கள் அலைவரிசைக்கு இறங்கி வந்து பேசினார்கள்… அனைவரும் அவரின் பேச்சில் மகிழ்ந்திருந்த போது எங்களுக்கும் யாப்பிலக்கணம் கற்றுக் கொள்ள ஆவல் பிறந்தது… ஐயா தாமே முன் வந்து நான் அறிந்ததை உங்களுக்குக் கடத்த விரும்புகிறேன்…. உங்களுக்கு யாப்பிலக்கணம் வெண்பா எழுதுவதெல்லாம் சொல்லித் தருகிறேன, அமீரக விசா காலம் குறைவாக இருக்கிறது, ஆகவே அதற்கான ஏற்பாடுகளைச் செய் மகளே என்று ஜெஸிலாவிடம் என்று அன்புக் கட்டளையிட்டார்.
வெளியூர் ஆட்டக்காரரே அப்படி இறங்கி வந்துவிட்டதும், உள்ளூர் ஆட்டக்காரரும், பிரபல கரும்புனல் நாவல், மற்றும் பல படைப்புகள் படைத்த அண்ணன் சுரேஷ் அவர்கள், எங்களுக்கு சந்திப்பிழைகளைப் பற்றிச் சொல்லித் தருவதாகச் சொன்னார். ஆஹா என்னடா இது திடுதிப்புனு கூட்டம் களைகட்டுதே, ஏற்பாடுகளை உடனடியாகக் கவனிச்சாகனுமே என்று பரபரப்பாக எதுவும் செய்யாமல் வழக்கம் போல மந்தமாகவே இருந்தோம்… நண்பர்கள் சிலர் ஊருக்குப் போயிருந்ததால், அவர்கள் எல்லாரும் உள்ளூரில் இருக்கும் போது இலக்கண வகுப்பு ஜெசிலா அவர்களின் அலுவலகத்தில் நடத்துவதாக முடிவு செய்தோம்.
அதன்படி 21ம் தேதி ஜுன் மாதம் சந்திப்பிழை பற்றிய வகுப்பை அண்ணன் பெனாத்தல் சுரேஷ் நடத்தினார்… இலவசக் கொத்தனார் மற்றும் சில நண்பர்களுடன் அவர்கள் சேர்ந்து பல்லாண்டுகளுக்கு முன்பு கடும் உழைப்பு உழைத்து செய்த பவர்பாயிண்ட் ப்ரசண்ட்டேசன் துணை கொண்டு சந்திப்பிழை பாடங்களை எங்களுக்குத் ”தொட்டால் தமிழ் மலரும்” என்ற பெயரில் நடத்தினார்… உண்மையிலேயே என்னைப் போன்றோர்க்கு இது புதிய பாடமாகத்தான் இருந்தது… இம்புட்டு நாளா என்னத்த எழுதிக்கிட்டிருந்தோம்னு கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது… அவ்வளவு எழுத்துப்பிழைகளைச் சுட்டிக்காட்டினார்… ஒற்று வைப்பதால் எப்படிப் பொருள் மாறுபடும் என்று பல பயிற்சிகளும் விளக்கப் படங்களும் காட்டி வியக்க வைத்தார்… உண்மையிலேயே இந்த நேரத்தில் இது சார்ந்து இயங்கிய திரு. சுரேஷ், இலவசக்கொத்தனார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் சொல்லிக் கொள்கிறேன்… இதில் சிறப்பென்னவென்றால் , இந்த முதல் வகுப்பில் 11 காப்பியங்களை எழுதிய, காப்பியக்கோ அவர்களும், எங்களோடு ஒரு மாணவராக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்… அவர்களின் எளிமையான இயல்பான இயைந்து பழகும் தன்மைக்கு இதுவே ஒரு சான்று… இந்த வகுப்பு முடிந்ததும் அடுத்த வாரம் வெள்ளி முதல் யாப்பிலக்கணம் வகுப்பு தொடங்கும் என அறிவிக்கப் பட்டது….
யாப்பிலக்கணம்: காப்பியக்கோ திரு. ஜின்னாஹ் ஷர்ஃபுதீன்

மரபு முறையில் செய்யுள் இயற்றுவதற்குரிய விதிகளையும் விதிவிலக்குகளையும் கூறுவது யாப்பிலக்கணம் ஆகும். யாத்தல் என்றால் கட்டுதல் என்று பொருள் படும்… என்று கூறி யாப்பிலக்கணத்தைத் தொடங்கினார்… அடுத்து செய்யுளின் உறுப்புகளான எழுத்து அசை சீர் தளை அடி தொடை என விறுவிறுவெனவும் விருப்பமாகவும் வகுப்பு தொடர்ந்தது… எழுத்தினால் ஆனது அசை; அசைகளினால் ஆனது சீர்; சீர்களால் ஆனது அடி; அடிகளினால் ஆனது பா; சீரும் சீரும் சேரும் இணைப்பு தளை; எதுகை மோனை போன்ற அழகியல் அமைப்புகள் தொடை என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போனார்… அடுத்தாக எழுத்துகள் சார்பெழுத்துகள் அசைச்சீர்கள் என பாடம் தொடர்ந்தது…
தேமா புளிமா கருவிளம் கூவிளம் வரும்போது சின்ன வயசு பள்ளிக்கூட ஞாபகங்கள் மீண்டும் வந்தது… சொல்லிற்கு எப்படி அலகிடுவது அசை பிரிப்பது, இயற்சீர்களை நினைவில் வைத்துக்கொள்ளும் வாய்ப்பாடுகள் என்ன என்று தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார்…
நேர் நேர் – தேமா
நிரை நேர் – புளிமா
நிரை நிரை – கருவிளம்
நேர் நிரை – கூவிளம்
மாணவர்களின் பெயர்களை எழுதிப் போட்டு அவற்றை அசை பிரித்து எப்படி எழுதலாம் என்று சொல்லிக் கொடுக்கவும் இன்னும் விறுவிறுப்பாக இருந்தது… மறுநாள் ஃபோன் பேசும்போதெல்லாம் ஹல்லோ புளிமாங்கயா? நான் தேமாங்காய் பேசுறேங்ன்கிற அளவுக்கு தேறியிருந்தார்கள்….
வகுப்பில் ஐயா பாடம் நடத்த, இங்கிட்டு உள்ளூர் ஆட்டக்காரர் சுரேஷ் அண்ணன், நண்பர் பொய்யாமொழியோடு பின்னாடி பெருங்குரலோடு தனியாக வகுப்பெடுக்க, சட்டாம்பிள்ளையாக மாறிய ஆசிப் அண்ணன் அடிக்கடி முறைத்துப் பார்த்து அவர்களைக் கண்டிக்க, இடைஇடையில் ஷேக் பழைய பாடல்கள் எதையோ பாட, ஆசிப்பண்ணன் தலையில் அடித்துக்கொள்ள, “என்னைய கூட்டி வந்து என்னடா செய்ய இருக்கீங்க” என ஆசிரியர் ஐயா ஒருமாதிரி எங்களைப் பார்க்க, எப்படியோ எனக்கு மறுபடி கல்லூரிக்குப் போன மாதிரி ஒரு உணர்வு… மகிழ்ச்சி
அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று வெள்ளிக்கிழமைகள் என மொத்தம் நான்கு வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வந்து ஐயா எங்களுக்கு யாப்பிலக்கணப் பாடம் நடத்தி, எங்கள் குழுமத்தின் படைப்பாளிகளை, தமிழறிவு உள்ள பலரை பிழையின்றி வெண்பா எழுதவைத்தும், எள் முனை அளவு கூட தமிழறிவு இல்லாத என்னைப் போன்றோருக்கு தமிழின் தொன்மையையும், அழகையும், இலக்கண அறிமுகத்தையும் தந்து, தங்கள் நோக்கத்தில் வெற்றியும் பெற்றார்கள்…
இறுதி வகுப்பில் கம்பராமாயாண சொற்பொழிவாற்றினார். அப்போது ஐயா அவர்கள், தமிழின் பால் கொண்ட காதலும், மொழி ஆளுமையும் எங்களை வியக்க வைத்தன… கம்பனின் சொல்லாடலும், ஐயாவின் பார்வையும் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருந்தன…
வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்
இந்தப் பாடலையும், விளக்கத்தையும் ஐயாவின் குரலில் கேட்க வேண்டும்… இங்கே எழுதுமளவுக்கு எனக்கு அறிவில்லை…
உறங்குகின்ற கும்பகன்ன உங்கள்மாய வாழ்வெல்லாம்
இறங்குகின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்
இந்தப் பாடலை ராகத்தோடு பாடிக்காட்டிய விதம் அனைவரையும் கவர்ந்தது... அதே வேளையில் இப்போது பாடல்களைப் பிழையாக எழுதுவோர், பதிப்பிப்போர் மீது அவர் கொண்ட சினத்தைப் பார்க்கும் போது அவர் ஒரு குழந்தையாகவே தெரிந்தார்....
இந்த வகுப்பில் தமிழ் இலக்கணம் என்பதற்கும் அப்பாற்பட்டு, நான் மிகவும் வியந்தது ஐயாவின் ஈடுபாடு சுறுசுறுப்பு நினைவாற்றால்… தன் வாப்பாவிடம் கற்ற தமிழை, செய்யுளை இன்னும் நினைவில் வைத்து சொல்லிக் கொடுக்கிறார்… தந்தையார் ஷர்ஃபுதீன் அவர்கள் பெற்ற இலங்கையின் முக்கியப் பட்டங்களில் ஒன்றான புலவர்மணி பட்டத்தையும், அதை புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களே வந்து தந்தது பற்றியும், அதற்கு நன்றியாக அவர்கள் தந்தையார் எழுதிய வெண்பாவையும் நினைவில் வைத்து இத்தனை ஆண்டுகள் சென்ற பின்னும் ஞாபகம் வைத்துப் பிழையில்லாமல் எழுதிக்காட்டி வியப்பில் ஆழ்த்தினார்…
குழுமத்தில் அனைவரும் வெவ்வேறு துறை சார்ந்த நண்பர்கள், வெவ்வேறு பணிச்சூழலில் இயங்குபவர்கள் இருப்பினும் தமிழின் மேல் உள்ள பற்றாலும் தேடலாலும் அனைவரும் மகிழ்வுடன் பங்குகொண்டு இந்த வகுப்புகள் சிறப்பாக நடைபெற உறுதுணை அளித்தார்கள்… வீட்டுப்பாடமெல்லாம் எழுதிக் கொண்டு வரும் அளவுக்கு மாணவர்களின் ஈடுபாடானது, “என்னமோனு நினைச்சேன் இவய்ங்க இந்தளவுக்கு ஈடுபாடாத் திரிவாய்ங்கனு நினைச்சுக் கூடப் பார்க்கலையே” என ஆசிரியரே மலைத்துப் போயிருப்பார் என்று நம்புகிறேன்.
என்னைப் பொறுத்த மட்டில் என் மகளோடு சக மாணவனாக நான் இந்த வகுப்பில் கலந்துகொண்டது பெருமகிழ்ச்சி. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு காப்பியக்கோவின் நூல் வெளியீட்டு விழாவில் ஓர் ஓரத்தில் அமர்ந்து கலந்துகொண்டேன் இன்று அவரிடமே பாடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கிடைத்ததும் பேறாகக் கருதுகிறேன்.


தமிழ் வகுப்பின் மூலமாக அகமது ஜாயது எனும் தமிழார்வமுள்ள ஒரு தம்பி மற்றும் ஸ்ரீரோகிணி எனும் தமிழ் ஆராய்ச்சி செய்யும் தங்கை மற்றும் தமிழில் பேசக்கூடிய தமிழ் ஆர் ஜே தங்கை அஞ்சனா ஆகியோரது அறிமுகமும் கிடைத்தது. தங்கள் அலுவலகத்திலேயே வகுப்பறை ஏற்பாடுகள் செய்த ஜெஸிலாவிற்கும், இந்த அருமையான நிகழ்வை வாய்க்கச் செய்த அமீரக எழுத்தாளர் வாசிப்பாளர் குழுமத்திற்கும், தமிழின் மேல் ஈடுபாட்டுடன், தேடலுடன் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி
தன் குடும்பத்தோடு செலவிட வேண்டிய பொன்னான நேரத்தை, தமிழுக்காக, எங்களுக்காக ஒதுக்கி பாடம் கற்றுக் கொடுத்த காப்பியக்கோ ஐயா திரு ஜின்னாஹ் ஷர்ஃபுதீன் அவர்களுக்கு எங்கள் அனைவர் சார்பாகவும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழுக்கும் அப்பாற்பட்டு உங்களிடம் வேறு பல நல்லவற்றையும் கற்றுக் கொண்டேன் ஐயா...