Wednesday, September 26, 2012

உலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய் -- துபாய் மெட்ரோ (Dubai Metro)


அனைவருக்கும் வணக்கம்,

இதற்கு முந்தைய பதிவில் துபாய் ஃபவுண்டெய்ன் பற்றிப் பார்த்தோம்... 

வாருங்கள், துபாய் மெட்ரோ பற்றிப் பார்க்கலாம்.... 
எனக்குத் தெரிந்த தகவல்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

துபாய் மெட்ரோ -- Dubai Metro.




அமீரகத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்ட ஒரு ரயில் போக்குவரத்து இந்த துபாய் மெட்ரோ. 1997 ஆம் ஆண்டு முதல் 2000 வரை மேற்கொண்ட  ஆய்வுகளின் முடிவில், எதிர்காலத்தில் துபாய்க்கு சாலை போக்குவரத்து மட்டும் போதுமானது அல்ல, துபாயின் போக்குவரத்தை எளிதாக்க துபாய் மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.


(ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த துபாய் மெட்ரோ மாதிரி படம். நான் எடுத்த படம்)


09.09.09 - Red Line

அதன் பின்னர் படிப்படியாக,  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 09 ஆம் தேதி இரவு சரியாக 09.09.09 மணிக்கு, துபாய் மெட்ரோ தொடங்கி வைக்கப்பட்டது.  நான்கு வழித்தடங்களாக, அதாவது Red Line, Green Line, Purple Line and Blue line, மெட்ரோ ரயில் போக்குவரத்து செயல்பட வேண்டும் என திட்டம் வகுக்கப்பட்டு, முதலில் ரெட் லைன் மட்டும் தொடங்கப்பட்டது.  

ராஷீதியா எனும்  இடத்தில் இருந்து ஜெபல் அலி எனும் இடம் வரை பயணிக்கலாம்.  
பயண நேரம் 70 நிமிடங்கள் ஆகும்.
பயண தூரம் தோராயமாக 52.1 கி.மீ.
மொத்தமாக 29 நிலையங்கள் (ஸ்டேஷன்கள்) உள்ளன. இவற்றில் தரைக்கு மேல் 25 நிலையங்களும், தரைக்கடியில் 4 நிலையங்களும் உள்ளன.
துபாய் விமான நிலையத்தின் இரண்டு நிலையங்களை இந்த துபாய் மெட்ரோ - ரெட் லைன் இணைக்கிறது.
இரண்டு பெரிய கார் நிறுத்தங்கள் உள்ளன. கார் நிறுத்துவதற்கு கட்டணமில்லை.



09.09.2011 - Green Line

இரண்டாவது வழித்தடமான க்ரீன் லைன் 09 ஆம் தேதி செப்டம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

அல் குஸைஸ் என்னும் இடத்திலிருந்து கீரிக் ஸ்டேசன் என்னும் இடம் வரை பயணிக்கலாம்.
பயண நேரம் 36 நிமிடங்கள்
பயண தூரம் தோராயமாக 23 கி.மீ.
கீரீன் லைனில் மொத்தமாக 18 நிலையங்கள் உள்ளன. இவற்றில் 12 நிலையங்களை தரைக்கு மேலும், 6 நிலையங்களை தரைக்கு கீழும் அமைத்துள்ளார்கள்.  இரண்டு மெட்ரோ (ரெட் லைன் மற்றும் க்ரீன் லைன்) தனித்தனி வழித்தடங்கள் இருந்தாலும்,  Union நிலையம் மற்றும் Khalid bin al Waleed  நிலையங்களை இணைக்கின்றன. ஆகவே இந்த க்ரீன் லைனில்  மொத்தம் 6 அண்டர்கிரவுண்ட் நிலையங்களாக கணக்கில் கொள்ளலாம்.
ஒரு பெரிய கார் நிறுத்தம் உள்ளது. கார் நிறுத்துவதற்கு கட்டணமில்லை.


சரி, விவரம் எல்லாம் சொல்லியாச்சு, 
பல நாடுகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்து இருக்கின்றதே!!!
துபாய் மெட்ரோவிற்கு மட்டும் என்ன சிறப்பு!?!?
திவின் தலைப்பைத் தொடுகிற மாதிரி ஒரு விவரமும் சொல்லலையேனு பார்க்கிறீங்களா!?



(மெட்ரோ பாதையை காட்டும் படம். என் நண்பர் திரு. நௌஃபல் எடுத்த படம்)


இதோ வாரேன்....

துபாய் மெட்ரோ ரயிலின் சிறப்பு என்னவென்றால், இது உலகிலேயே அதிக தூரம் பயணிக்கூடிய ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலாகும்.  முழுக்க முழுக்க தானியங்கியான துபாய் மெட்ரோ ரயில் மொத்தமாக 75 கி.மீ தூரம் பயணிக்கிறது. 

Union Station:

துபாய் மெட்ரோவில் உள்ள யூனியன் நிலையம்தான் உலகத்திலேயே பெரிய தரைக்கு கீழ் கட்டப்பட்ட நிலையம் ஆகும். இதன் பரப்பளவு 25000 சதுர மீட்டர்கள்.




(தரைக்கு கீழே மெட்ரோ பாதையை என் நண்பர் திரு. நௌஃபல் எடுத்த படம்.)


மேலும் சில தகவல்கள்:

21 ஆம் நூற்றாண்டின் உலகத்தரமான மெட்ரோ ரயில் போக்குவரத்து.

துபாய் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, பெரிய இயந்திரங்கள் மூலம், தரையிலிருந்து தோராயமாக 29 மீட்டர் ஆழத்தில்(அதிகபட்சமாக), 9.3 மீட்டர் விட்டமுள்ள சுரங்கப்பாதை(Tunnel) அமைத்து, அதில் வழித்தடங்களை அமைத்திருக்கிறார்கள். 

மணிக்கு 90 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது.

ரயிலுக்குள் வைஃபை வசதி உண்டு.

ரயில் நிலையங்களில் சிறிய கடைகள், பண பரிவர்த்தனை செய்ய எக்சேஞ்சுகள், ஏடிஎம் கள் உள்ளன.

ரயில் நிலையத்தில் இருந்து நகரத்திற்குள் செல்ல சிறப்பு பேருந்துகள் உண்டு.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அனைத்து விதமான மக்களுக்கும் போக்குவரத்திற்கு எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.


அனைவருக்கும் நன்றி.


Sunday, September 23, 2012

எங்க வீட்டுக்குப் பின்னாடி ஓர் அழகான இடம்.

எங்க வீட்டுக்குப் பின்னாடி ஓர் அழகான இடம். 

பெரிய ஏரி மாதிரி தெரியுது...


சாயங்கால நேரம்னு நினைக்கிறேன்... 

நீல வானம்...

நிறைய மேகங்கள்...

இளங்காத்து... 

போட்டிருக்கும் சட்டை காத்துல நல்லா ஆடுது...

மனசுக்கு நல்லாயிருக்கு....






அந்த ஏரியை ஒட்டி, அங்கங்கே மீன் வளர்ப்பதற்கு ஏற்றது போல் பாத்தி பாத்தியா குளம் மாதிரி வெட்டி வச்சிருக்காங்க....

ஒவ்வொரு சதுரமான நீர்ப்பரப்பிலும் நிறைய வகை வகையான மீன்கள்... பெரிசு பெரிசா மீன்கள்...

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... 

பார்க்கப் பார்க்க அப்பிடியே என்னமோ செய்யுது... 

ஆகா போட்டோ எடுத்த நல்லாயிருக்குமே..

என் பக்கத்துல எனக்குத் தெரிஞ்ச பையன் நிக்கிறான்... 

”தம்பி வீட்டுல போய் என் கேமராவ எடுத்துட்டு வாயேன்...”

சரிண்ணேண்ட்டு ஓடிட்டான் நம்மாளு....

(அடடா கேமரா பேட்டரில சார்ஜ் ரொம்ப கம்மியா இருந்துச்சே... சரி பரவாயில்ல தீரும் வரை எடுப்போம்ல...)

அப்பத்தான் அது நடந்துச்சு... 

மேலே வித்தியாசமான ஒரு விமானம் பறக்குது, அதைத் தொடர்ந்து பின்னாடியே இன்னொரு விமானமும் பறந்து வருது.... பார்க்க வித்தியாசமா இருந்தாலும் என்னமோ மனசுக்குள்ள ஒரு பயம் இருக்கு அந்த பெரிய விமானங்களைப் பார்க்கும் போது.... விமானத்த கீழே ரொம்ப இறக்கி உள்ள இருக்கிற அவங்க என்னைப் பார்க்கிறாங்க... 





வீட்டுக்கு உள்ள போய் அந்தப் பக்கம் வீட்டின் முன்புறம் உள்ள சாலைக்குப் போனால், 
அங்கே சாலையின் இரு பக்கத்திலும் மக்கள் கூட்டமா நிக்கிறாங்க.... சாலையில் வகை வகையான வாகனங்கள் வேகமா போய்க்கிட்டு இருக்கு... 



அந்த வாகனங்களை ஓட்டுபவர்கள் முகம் நம்மூரு முகம் மாதிரி இல்ல அதுமட்டுமில்லாமல் அவங்க எல்லாம் ரொம்ப கோவமா இருக்கிற மாதிரி இருக்கு....



மாட்டு வண்டியெல்லாம் ஓரமா நின்னு வேடிக்கைப் பார்க்கிறாங்க...

அடடா வீட்டுக்குப் பின்னாடி ஏரிப்பக்கம் பார்த்தால் நிறைய பறவைகள், வகை வகையான பறவைகள் தீடீரென பறந்து வருகின்றன....



அடடா கேமரா எடுத்து வாடான்னு ஒருத்தனிடம் சொன்னமே... எங்க அவன காணாம்...

வேகமா ஓடிப் போய் ஏரிப்பக்கம் நின்னு பார்த்தால்... என் கேமரவா எடுத்துட்டு வந்தவன், 

சும்மா இருக்காம, என் கேமராவில் படம் எடுத்திக்கிட்டு இருக்கான்....




டேய் நிறுத்துடா...................







அலார்ம் அடிச்சிருச்சு...

இனிமே ஆங்கில சண்டைப்படமெல்லாம் பாத்துட்டு தூங்கக்கூடாதுடா சாமி.... :-))))


[நன்றி: கனவுக்கேற்ற படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து]




Saturday, September 22, 2012

உணவு வகைகள் -- மண்டி பிரியாணி (Mandi Biriyani)


அனைவருக்கும் வணக்கம்,

முந்தைய பதிவில் பார்பிக்யூ சிக்கன் & மட்டன் பற்றிப் பார்த்தோம்... வாருங்கள், இந்தப் பதிவில் பிரியாணி - மண்டி பிரியாணி பற்றிப் பார்ப்போம்...

அசைவ விரும்பிகளுக்கு பிரியாணினாலே ஒரு விதமான மகிழ்ச்சி தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்... 

இந்த பிரியாணிலதான் எத்தனை எத்தனை வகை...  கோழி பிரியாணி, ஆடு பிரியாணி, மீன் பிரியானி, காளான் பிரியாணி, இறால் பிரியாணி, தம் பிரியாணி இப்படி பல வகை பிரியாணிகள் நாம் கண்டிருக்கிறோம் உண்டிருக்கிறோம்... 

கோழி பிரியாணி:



ஆடு பிரியாணி:


நம்ம ஊருல ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு விதமான பிரியாணி புகழ்பெற்றிருக்கிறது. 

தலைப்பாக்கட்டு பிரியாணி (திண்டுக்கல்),ஆம்பூர் பிரியாணி,ஹைதராபாத் பிரியாணி,மலபார் பிரியாணி,பெங்கால் பிரியாணி, சிந்தி பிரியாணி என பல ஊர்களின் பெயர்களில் புகழ்பெற்ற பிரியாணிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.... நம்மில் பலர் உண்டும் ரசித்திருக்கிறோம்.... ஒவ்வொரு ஊர் பிரியாணியும் ஒரு தனித்துவமான சுவைதான்.... 

கடைல வாங்கிச் சாப்பிடுற பிரியாணிய விடுங்க....இஸ்லாமிய சகோதர்களின் வீட்டில் சமைக்கப்படுகிற பிரியாணியின் சுவையே தனி சுவைதான்....  ரமதான், பக்ரீத் பெருநாட்களில் இஸ்லாமிய நண்பர்கள், பெரிய தூக்குச் சட்டியில் பிரியாணியும் தால்சாவும் கொண்டு வந்து கொடுப்பாங்க... அந்த தால்சாவின் சுவை எந்த ஊருலயும் எந்த உணவகத்துலயும் கிடைக்காது....  


சரி வாங்க, நாம இப்ப பார்க்கப் போவது மண்டி பிரியாணி.... 



அமீரகத்தில் மிகவும் பிரபலமான உணவு வகையான இந்த மண்டி பிரியாணியின் பிறப்பிடம் யேமன்... இது யேமனின் பாரம்பரிய உணவு என்று நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பொதுவாக பாஸ்மதி அரிசியில் செய்யப்படும் பிரியாணியில், சேர்க்கப்படும் இறைச்சி சமைக்கப்படும் பக்குவம்தான் இந்த மண்டி பிரியாணியின் தனித்தன்மை. மேலும் இந்த மண்டி பிரியாணியைச் சாப்பிடும் முறையும் கொஞ்சம் வித்தியாசமானது... 

இளங்கறியாக (ஆடு & கோழி) தேர்ந்தெடுத்து இந்த மண்டி பிரியாணிக்கு பயன்படுத்துகிறார்கள். கோழியை குறுக்கு நெடுக்காக இரண்டு துண்டுகளாக வெட்டி விடுகிறாகள், ஆட்டிறைச்சியை ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்கிறார்கள். பின்பு இறைச்சியை தந்தூரி அடுப்பில்  இறைச்சியை வேக வைத்து விட்டு, புகை வெளியேறாத படி மூடி விடுகிறார்கள்... நன்கு வெந்த பிறகு அந்த இறைச்சியை எடுத்து பிரியாணியுடன் சேர்த்து பரிமாறுகிறார்கள்....




தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயம் இவற்றை பச்சையாக அரைத்து தயாரிக்கப்பட்ட சட்னியை மண்டி பிரியாணியுடன் தொட்டுக் கொள்வதற்கு தருகிறார்கள். மேலும், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், லெட்யூஸ், எலுமிச்சை ஆகியவற்றால் செய்யப்பட்ட சாலட்டும் கிடைக்கும்.


இங்கு மண்டி ரெஸ்ட்ராண்ட்கள் என்று இந்த மண்டி பிரியாணி உணவுகளுக்காகவே தனிப்பட்ட உணவகங்கள் இருக்கின்றன... இந்த உணவங்களில் பெரும்பாலும் நாற்காலி மேசைகள் இருப்பதில்லை... கார்பெட் தரையில் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் அமர்ந்து சாப்பிடலாம்... ஒரு நல்ல சுவையான உணவு....




பொதுவாக, இந்த மண்டி பிரியாணி பெரிய விருந்துகள், கல்யாண விருந்துகள், அலுவலகத்தில் விருந்துகளின் போது பரிமாறப்படுகிறது.... இதில் சிறப்பான ஒன்று ஒரு தட்டு அல்ல தாம்பாளத்தில்தான் மண்டி பிரியாணி பரிமாறப்படும்... மொத்தமா ஒரு தாம்பாளத்தில் ஐந்து பேர் அமர்ந்து சாப்பிடலாம்... சுற்றி உக்கார்ந்து கொண்டு அவரவர் முன்னால் உள்ள பிரியாணியை எடுத்துச் சாப்பிட வேண்டியதுதான்...




நன்றி: அனைத்துப் படங்களும் இணையத்திலிருந்து (கடைசிப் படத்தை தவிர:-)

அடுத்த பதிவில் சில சிறு உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்....

முந்தைய பதிவுகளைக் காண இங்கே சென்று பாருங்கள்...

அனைவருக்கும் நன்றி...

Wednesday, September 19, 2012

உலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய் -- துபாய் ஃபவுண்டெய்ன் (The Dubai Fountain)


அனைவருக்கும் வணக்கம்,

முந்தைய பதிவில் , துபாய் மால் மற்றும் அக்வாரியம் பற்றிப் பார்த்தோம்... 

வாருங்கள் துபாய் ஃபவுண்டெய்ன் எனப்படும் செயற்கை நீருற்றைப் பற்றிப் பார்க்கலாம்...

துபாய் ஃபவுண்டெய்ன் (The Dubai Fountain)

30 ஏக்கர் பரப்பளவில் உள்ள புர்ஜ் கலிஃபா லேக் என்னுமிடத்தில், (துபாய் மாலை ஒட்டியுள்ள  இடம்) துபாய் ஃபவுண்டெய்ன் (The Dubai Fountain) அமைக்கப்பட்டிருக்கிறது. லாஸ் வேகாஸ் நகரிலுள்ள Fountains of Bellagio  என்ற செயற்கை நீருற்றை கட்டிய, கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு கம்பெனி, இந்த துபாய் ஃபவுண்டெய்னை வடிவமைத்திருக்கிறார்கள்.



[எனது நண்பர் திரு. நௌஃபல் எடுத்த படம்]

துபாய் நீரூற்று 150 மீட்டர் உயரத்துக்கு(அதாவது 500 அடி) தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் திறனுள்ளது. அதாவது 50 மாடி கட்டிட உயரத்திற்கு இந்த நீரூற்று தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 275 மீட்டர் தூரத்திற்கு, வெவ்வேறு அளவில் ஐந்து வட்டங்களாகவும், இரண்டு வளைவுகளாகவும் இந்த நீருற்று வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் 124 மாடியில் இருந்து, இந்த நீரூற்றுக் காட்சிகளைப் பார்ப்பது மிகவும் அழகாக இருக்கும் என்று சென்று வந்த நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.


[எனது நண்பர் திரு. நௌஃபல் எடுத்த படம்]

இந்த துபாய் ஃபவுண்டெய்ன் பற்றிய சில சிறப்புகள்;

உலகிலேயே பெரிய நடனமாடும் செயற்கை நீரூற்று. (World’s largest dancing fountain)

சுமார் 6600க்கும் மேற்பட்ட WET சூப்பர் லைட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் (the most advanced incandescent large fountain lights available today)

25 கலர் ப்ரொஜக்டர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்

நீரூற்றின் மேல் நோக்கிச் செல்லும் ஒளிக்கற்றையை 20 மைல்களுக்கு அப்பால் இருந்தும் காணலாமாம்.

விண்வெளியில் இருந்து பார்த்தால், மத்திய கிழக்கு நாடுகளின் நிலப்பரப்பில் வெளிச்சமான பகுதியாக இது தெரியுமாம்.

அரபி மற்றும் ஆங்கிலப் பாடல்களின் இசைக்கேற்ப நடனமாடும்.

1.5 million lumens of projected light

500 அடி உயரத்திற்கு தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும்.

ஒரு நேரத்தில் 83000 லிட்டர் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும்.


இந்த வீடியோக்களைக் காணுங்கள், கண்டிப்பாக நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.




உலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய் தொடர்பான முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

அடுத்த பதிவில் துபாய் மெட்ரோ பற்றிப் பார்க்கலாம்... 

அனைவருக்கும் நன்றி.

Sunday, September 16, 2012

கூடங்குளமும் - சவுத் ஆளுங்களும்...



அனைவருக்கும் வணக்கம்,

முதலிலேயே சொல்லிடுறேன்.... கூடங்குளம் போராட்டம் பற்றி சரியா தப்பானு உக்காந்து விவாதிச்சு இருபக்கமிருந்து காப்பி பேஸ்ட் ஆயுதங்கள் எடுத்து தன் தரப்பை நியாயப் படுத்தப் போகிற இடுகை இல்லை இது. அதுக்கு நான் சரிப்பட்டும் வரமாட்டேன். ஆக, அந்த மாதிரி எதும் எதிர்பார்க்காதீர்கள்...

ஒரு போராட்டம் எப்படிலாம் பார்க்கப் படுகிறது என்பதைப் பற்றி ஒரு சின்னப் பார்வை...


கூடங்குளமும் சவுத் ஆளுங்களும்:

கூடங்குளத்தில் அணு மின் நிலையம் தொடங்கிய காலத்தில் இருந்தே போராட்டங்களும் தொடங்கப் பட்டது என்பது பலருக்கும் தெரியும். நம்மில் சிலருக்கு இது தெரிய வாய்ப்பில்லை. இந்த சமூக வலைத்தளங்கள் இருப்பதால், இன்று எல்லாரும் செய்தியாளர்களாகி அவரவருக்குத் தெரிந்ததை பொதுவில் வெளியிட்டு வருகிறார்கள். சிலர் ஊகத்துடன் சொன்னாலும், பலர் சான்றுகளோடு பேசுகிறார்கள். அவர்கள் தரப்பு சான்றுகளையும் பொதுவில் பகிர்ந்து கொள்ளும் போது நாமும் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் உடனடியாக ஒரு தகவலின் உண்மையையும் பொய்யையும், மாறுபட்ட கருத்துக்களையும் அறிந்து கொள்ள சமூக வலைத்தளங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.



சரி இந்த கூடங்குளம் பற்றி, பற்றி எரியும் தகவல்களைத்தான் நாள்தோறும் பலர் பேசுகிறார்களே, நீ என்ன புதுசா சொல்லப் போறேனு கேட்கிறீங்களா?! இதோ வாரேன் ....

பல மாநில, நாட்டு மக்களுடன் இணைந்து வேலை பார்க்கும் சூழலில் நான் இருக்கிறேன். சமீபத்தில் என் கூட வேலை பார்க்கும் நண்பர்களுடன் நடந்த உரையாடல்தான் நீங்க இனி பார்க்கப் போவது....

வட இந்திய நண்பர் ஒருவர் கேட்டார், ”Why you tamils are like this, You people are facing big power breakdown, showing your tamilnadu map as dark without any lights in Facebook, Our government gives you solution, koodan kulam power plant, why don't you accept that, why you all are so emotional, jumping into the sea and protesting ” ஏன் நீங்களெல்லாம் இப்படி இருக்கீங்க, உங்களுக்கு மின்சாரம் இல்லைனு, பேஸ்புக்ல தமிழ்நாட்டு  மேப்பை ஒரு லைட்டும் இல்லாம கருப்பா போடுறீங்க, நம்ம அரசு, உங்களுக்கு மின்சாரம் கிடைக்க வழி ஏற்படுத்தி குடுக்குது, அதை ஏன் ஏத்துக்க மாட்றீங்க... ஏன் ரொம்ப உணர்ச்சி வசப் படுறீங்க, கடலுக்குள்ள குதிச்சு போராடுறீங்க....



வட தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் சொன்னார் , ”These south peoples are always like this sir, Always they roam with sword and talk emotionally and they don't really understand the need of the power plant.” இந்த சவுத் ஆளுங்க அப்படித்தான் சார், எப்பவுமே அரிவாளோடு சுத்திக்கிட்டு இருப்பாங்க, உணர்ச்சிவசப்பட்டு பேசுவாங்க. அவங்களுக்கு பவர் ப்ளாண்ட்டின் தேவை பற்றி உண்மையிலேயே தெரியல.

[[இனி ஆங்கில உரையாடல் இல்லாமல் தமிழிலேயே சொல்றேன். மாத்தி மாத்தி ஏழுத கடினமா இருக்கு :-)]]

நான் சொன்னேன், எல்லாம் இந்த சினிமாவ சொல்லணும், அதுலதான் தென் தமிழகம்னு காட்டினாலே அரிவாளோட சுத்துற மாதிரித்தான் காட்டுறாய்ங்க, அதை நினைச்சுக்கிட்டு நீங்க எங்க பக்கம் இருக்கிறவய்ங்க எந்நேரமும் இப்படித்தான் சுத்துவாய்ங்கனு நீங்களா கற்பனை பண்ணா நாங்க என்ன செய்ய முடியும்.... 



[[எங்களை பேச விட்டுட்டு வட இந்திய நண்பர் பொறுமையா பார்த்துக்கொண்டிருந்தார்... இன்னும் சில பிற பகுதி நண்பர்களும் ஆவலாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.]]

என் நண்பர்: ஹலோ கம்முனு இருங்க, உங்களாளுங்க எதுக்கெடுத்தாலும் அரிவாள எடுத்து போட்ருவாங்களேமா, அதான் நியூஸ்ல படிக்கிறோமே

நான்: ஏங்க தென் தமிழகத்துல இருக்கிற எல்லாரும் காலைல கடைல டீக் குடிச்சிட்டு, வீட்டுக்கு வரதுக்குள்ள எவனையாவது வெட்டிட்டுத்தான் வர்ரோம்ங்கிற மாதிரி கற்பனை பண்ணி வச்சிருக்கீங்க, அப்படிலாம் இல்லங்க, உங்க எண்ணத்த மாத்திக்கங்க.... 

என் நண்பர்: சரி விடுங்க, இப்ப ஏன் கூடங்குளத்தை எதிர்க்கிறீங்க, அதுனால எவ்ளோ கரெண்ட் கிடைக்கும்.... நம்ம தமிழ்நாட்டுக்கு நல்லதுதானே....

நான்: தமிழ்நாட்டுக்கு நல்லதுதான், சரி, எவ்ளோ கரெண்ட் கிடைக்கும் தெரியுமா? எத்தனை மெகாவாட் கிடைக்கும் சொல்லுங்க!?

என் நண்பர்: அது எவ்ளோனு தெரியல! . ஆனா கரெண்ட் கிடைக்கும் ... 

(என் மனசாட்சி: எவ்ளோ கிடைக்கும், அதை யாருக்கு யாருக்கு பங்கு வைக்கணும்னு தெரியல... ஆனா பேச்சு மட்டும் நல்லா பேசுறாங்கப்பா...)

நான்: சரி உங்களுக்கு தெரியல விடுங்க,  ஆனா அந்தப் பகுதி மக்கள் வேணாங்கிறாங்க,  பயப்படுறாங்களே,

என் நண்பர்: எதுக்குப் பயப்படுறாங்க, அதான் பாதுகாப்பா இருக்குனு அரசாங்கம் சொல்லுதே

நான்: பாதுகாப்பா இருக்கோ இல்லையே, உள்ளூர்க்காரங்க வேணாங்கிறாங்களே... அது மட்டுமில்ல, ஜப்பான், அமெரிக்கா எல்லாம் அணு உலையை மூடுறாங்களே...

என் நண்பர்: அதெல்லாம் பேசாதீங்க, தமிழ்நாட்டுக்கு நல்லது, அப்ப அவங்க ஒத்துக்கத்தான் வேணும்.

நான்: அதெப்படிங்க நீங்க அடுத்தவன வலுக்கட்டாயமா ஒத்துக்கத்தான் வேணும்னு சொல்ல முடியும். உங்களுக்கு கரெண்ட் வேணுமின்னு கேளுங்க, அதை ஏன் கூடங்குளத்தில் இருந்து வேணும்னு கேட்குறீங்க

என் நண்பர்: அங்கதான அணு உலை இருக்கு, அதான் கேட்குறோம். எவ்ளோ செலவு பண்ணி அரசாங்கம் கட்டியிருக்கு, இப்ப அதை பயன்படுத்தலைனா பணம் வீணாகாதா?!

நான்: ஏங்க எம்புட்டோ ஊழல் நடந்திருக்கு, அதுல வீணாகாத பணமா இதுல வீணாகப் போகுது. இதை வேற பயன்பாட்டிற்கு பயன்படுத்திகலாம்னு சொல்றாங்களே...

என் நண்பர்: அதெல்லாம் சரியா வராது, கூடங்குளத்தை எதிர்கிறது முட்டாள்தனம். உங்க சவூத் ஆளுங்கள திருத்தவே முடியாது...

நான்: அவங்க உயிர் வாழும் உரிமையைக் கேட்குறாங்க, அதுல என்னங்க முட்டாள்தனம்?

என் நண்பர்: அப்படி என்னங்க பயம், பாதுகாப்பு இருக்குனு எல்லாரும் சொல்றாங்களே? 

நான்: நம்ம நாட்டுல ஒரு விச வாயு கசிஞ்சதுக்கே,  பல ஆண்டு காலமா இன்னும் குழந்தைகள் குறைபாடுகளோடு பிறக்குதாம், இந்த அணு உலையில் ஏதாவது ஆச்சுனா!?



என் நண்பர்: இப்படி எல்லாமே அது நடந்தா இது நடந்தா என்னாகும்னு நினைச்சுக்கிட்டு இருந்தா, எதுவும் நடக்காது... அவ்ளோ பயமா இருந்தா அவங்க வேறு இடத்துக்குப் போயிட வேண்டியதுதானே...

நான்: அதெப்படிங்க, என் வீட்டுக்கு வந்து என்னை வெளியேற சொல்லுவீங்க.... 

என் நண்பர்: பின்ன தமிழ்நாட்டுக்கு நல்லதுனா, அவங்க அணு மின் நிலையத்தை ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்.

நான்: சரிங்க ஒத்துக்கிறேன், உங்க வீட்டு பெட் ரூம்ல ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் வச்சிருவோம், அங்கிருந்து பக்கத்துல இருக்கிற ஒரு பத்து வீட்டுக்கு கரண்ட் குடுப்போம்... ஒத்துக்கிருவீங்களா?!? பத்துப் பேருக்கு நல்லது நடக்குதே ஒத்துக்கங்களேன்...

என் நண்பர்: இதாங்க, உங்கள உணர்ச்சிவசப்பட்ட மக்கள்னு சொல்றது... பேசிக்கிட்டு இருக்கும் போதே எங்க வீட்டு பெட்ரூம்ல ட்ரான்ஸ்ஃபார்மர் வக்கிறேனு சொல்றீங்க :-(((

(ஆளு கொஞ்சம் நொந்துட்டார் பாவம்....)

நான்: சரி விடுங்க... ஒரு விளக்கம் சொன்னா உணர்ச்சி வசப்படுறேனு சொல்றீங்க... ஒரே ஒரு ட்ரான்ஸ்ஃபார்மருக்கே ஒத்துக்கிற மாட்டுறீங்க... அவங்க ஊருக்கு நடுவுல ஒரு பெரிய அணு உலை வக்கிறாங்க... அதெப்படிங்க ஒத்துக்குவாங்க....

என் நண்பர்: சரி விடுங்க.... இந்த சவுத் பசங்க எப்பவுமே இப்படித்தான்...

(அவர் சொன்னதுதான் சரின்னுட்டு, கொஞ்சம் கோபமாகவே சொல்லிட்டு கிளம்பி போயிட்டார்....)

(நாங்க ரெண்டு பேரும் பேசுவதை, அனைவரும் ஒரு மாதிரி பார்த்துட்டு, போயிட்டாங்க. அவர்களின் பார்வைக்கு என்ன பொருள் என்று தெரியல :-)

இவ்வாறாக, ஒரு பயனும் இன்றி வெட்டிப் பேச்சு பேசிய கூட்டத்தைக் கலைத்து விட்டு அனைவரும் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டோம்.

இப்படியாக பல போராட்டங்கள்  குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்களுக்கு புரியாத புதிராகத் தெரிகிறது. தமிழ்நாட்டுல இருக்கிற அனைத்துப் பகுதி தமிழர்களுக்கும்!!? புரியும் போதுதான், தமிழ்நாடு தாண்டி டெல்லிக்குப் புரியும். ஆக, அனைவருக்கும் விளங்க வைக்க வேண்டிய கடமை போராட்டாக்காரர்களுக்கு உண்டு. 
கூடங்களும் அணு உலையால் கரெண்ட் கிடைத்தாலும், ஏதோ ஒரு அச்சம் இருக்கிறது என்பது உண்மை எனெனில் கண் முன்னே இதற்கு முன் நடந்த விபத்துகளின் சான்றுகளும் இன்னும் நம் வரலாற்றின் பக்கங்களில் நாம் காணக் கிடைக்கிறது. 

இதையெல்லாம் ஒதுக்கி தள்ளி விட்டு விட்டாலும், ஒன்றே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.நம்ம சுகத்திற்காக, அடுத்தவனை இழக்கச் சொல்வது நியாமில்லை.... சொந்த வீட்டுக்காரன் வேணாம், வராதீங்கனு சொல்லும் போது, வலுக்கட்டாயமாக அவன் வீட்டுக்குள்ள போய் கலவரம் பண்ணக் கூடாது...

இதற்கு முன்பு முல்லைப்பெரியாறு போராட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது இது போலவே சில தமிழக நண்பர்கள் மலையாளி நண்பர்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள், “அதான் புது அணை கட்டி, தண்ணி விடுறோம்னு சொல்றான்ல, ஏன்யா சவுத் ஆளுங்க பிரச்சனை பண்றீங்க” என்று.  (அன்னைக்கு நடந்த உரையாடலை எழுதனும்னா, இன்னும் பெரிசா போகும்:-) 

ஆக, தமிழன் தமிழனுடைய பிரச்சனையில் ஒன்று பட பேசாத பொழுது, எந்தப் போராட்டமா இருந்தாலும் நாம நமக்குள்ளேயே முதலில் போராட வேண்டியிருக்கிறது என்பதுதான் உண்மை.

கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்; கூடங்குளம் போராட்டத்தில், சினிமா முகம் இல்லாத ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டு, அந்த மக்களின் போராட்டமும், ஒற்றுமையும் மெய் சிலிர்க்க வைக்கிறது....

(அனைத்துப் படங்களும் இணையத்திலிருந்து: நன்றி.)

அனைவருக்கும் நன்றி...

Friday, September 14, 2012

உலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய் -- துபாய் மால் - (The DubaiMall)



அனைவருக்கும் வணக்கம்,
முந்தைய பதிவில் உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா பற்றிப் பார்த்தோம். 
வாருங்கள், இந்தப் பதிவில் உலகிலேயே மொத்த பரப்பளவில் பெரிய ஷாப்பிங் மால் ஆன துபாய் மால் பற்றிப் பார்க்கலாம்... கடைகள் அமைந்திருக்கும் கடைத்தொகுதி பகுதியை வைத்து கணக்கிட்டால் உலகிலேயே ஆறாவது பெரிய மால் ஆகும்.

துபாய் மால்:




















உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் மால் என்ற பெருமையை உடைய இந்த துபாய் மால். 4 ஆம் தேதி நவம்பர் - 2008 அன்று திறக்கப்பட்டது. 12 மில்லியன் சதுர அடிகள்  பரப்பளவு கொண்ட இந்த துபாய் மாலில் தற்போது சுமார் 1200 கடைகள் இருக்கின்றன. முன்பு பார்த்த உலகத்தின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவுடன் இணைந்து கட்டப்பட்டதுதான் இந்த துபாய் மால். பெரிய பெரிய கடைகள், கடைகளின் வித விதமான உள் கட்டுமானம், கொள்ளை கொள்ளும் வண்ணங்கள், மின்னும் விளக்குகள் என சொல்லிக் கொண்டே போகலாம்... 


வாருங்கள் , எனக்குத் தெரிந்ததை, நான் பார்த்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....



துபாய் மால் தொடங்கிய புதிதில் இதைச் சுற்றிப் பார்க்கவே கூட்டம் கூட்டமாக மக்கள் சென்றனர். அமீரக வாழ் மக்கள் ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் இங்கு போய் சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம்.... வளாகம் முழுவதையும் சுற்றி வர வேண்டுமென்றால் கண்டிப்பாக இரண்டு நாட்கள் தேவைப்படும். சுற்றுலாப்பயணிகள் பலரைக் கவர்ந்த இடமான துபாய் மால், பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. அதிகளவிலான பார்வையாளர்கள், ஐஸ் ரிங், சினிமா, அக்வாரியம் இப்படி பல சிறப்புகள் இருக்கின்றன...

வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்...

பார்வையாளர்கள்:

அதிகமான பார்வையாளர்கள் வந்து போன இடம் என்ற சாதனையை நடத்திக் காட்டியிருக்கிறது இந்த துபாய் மால். 2011 ஆண்டின் புள்ளி விவரக் கணக்குப் படி உலகத்திலே 54 மில்லியன் பார்வையாளர்கள் shopping மற்றும் leisure க்காக வந்து  போன இடமாக துபாய் மால் திகழ்கிறது. இந்தக் கணக்கு உலகின் மற்ற சில புகழ்பெற்ற இடங்களைப் பார்க்க வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக இருக்கின்றது.


Aquarium & Underwater Zoo

துபாய் மாலில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு சிறப்பான இடம், இந்த Aquarium & Underwater Zoo. 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட உலகிலேயே மிகப்பெரிய மீன் தொட்டி. 51 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும், 11 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பெரிய மீன் தொட்டியில் 33000 வகையான கடல் வாழ் உயிரினங்களை நாம் கண்டு ரசிக்கலாம்... 



துபாய் மாலின் மூன்று அடுக்கில் இருப்பவர்களும் கண்டு ரசிக்கும் படி, கட்டப்பட்டுள்ள வெளிப்புற அக்ரிலிக் பேனல் கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற்றுள்ளது.



இந்த மீன் தொட்டிக்கு நடுவே பெரிய tunnel ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். 48 மீட்டர் தூரம் உள்ளே நடந்து போய் 270 டிகிரி பார்வையில், மீன்களையும் கடல் வாழ் உயிரனங்களையும் கண்டு ரசிக்கலாம். 



இதற்கும் மேலாக கண்ணாடியால் செய்யப்பட்ட படகில் மீன் தொட்டியின் மேலே பயணம் செய்து கொண்டே கண்டு ரசிக்கலாம், சிறப்பான உடை அணிந்து மீன் தொட்டிக்கு, பயிற்சியாளர் துணையுடன் இறங்கி பார்க்கலாம் என பல சிறப்புகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை.
Underwater Zoo:

மீன் தொட்டிக்கு மேலே, துபாய் மாலின் இரண்டாவது அடுக்கில் Underwater Zoo அமைத்திருக்கிறார்கள். இதில் பல அரிதான் கடல் வாழ் உயிரினங்களை கண்ணாடி தொட்டிகளில் வைத்திருக்கிறார்கள். இங்கு சென்றால் மீன் தொட்டியை மேலே இருந்து கண்டு ரசிக்க முடியும்... கண்ணாடிப்படகுகளில் செல்பவர்களையும் பார்க்க முடியும். 

Aquarium & Underwater Zoo இரண்டையும் பார்வையிட இப்பொழுது 50 திராம்ஸ்கள் கட்டணமாகப் பெறுகிறார்கள்.


துபாய் மாலில் நான் எடுத்த சில படங்கள் இங்கு காணலாம்.

இன்னும் துபாய் மாலில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன.... பெரிய நடனமாடும் நீரூற்று பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்....



அனைவருக்கும் நன்றி...


Sunday, September 9, 2012

இயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...



அனைவருக்கும் வணக்கம்,

இப்ப நான் சொல்லப் போறது, இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேரு சொல்லிக் கொண்டிருப்பதுதான்... இருந்தாலும் இன்றைய சூழலின் தேவையைக் கருத்தில் கொண்டு நானும் என் பங்குக்குச் சொல்ல வேண்டும் என்ற ஒரு விருப்பத்தில் இதை எழுதுகிறேன்.

இயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...

நாமெல்லாம் இப்ப ரொம்ப வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்... குகை வாழ்க்கை மனிதன் வாழ்ந்தானு படிச்சிருக்கோம்...ஆனா பார்த்ததில்லை...இருந்தாலும் நமது இளம் பருவத்தில், இப்படியான ஒரு கான்க்ரீட் காட்டுக்குள் வாழ்க்கையைத் தொடங்கவில்லை... அழகான, பசுமையான கிராமத்தில்தான் நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையைத் தொடங்கினோம்... ஆனால் நம் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை பெரும் பெரும் கட்டிடங்களுக்கு நடுவில்தான் தொடங்குறார்கள்.

நாம் பார்க்க எத்தனையோ எத்தனையோ மாற்றங்கள் நம் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டு விட்டன. இன்னும் சொல்லப் போனால் ஏற்படுத்தி விட்டோம். மிக வேகமான வளர்ச்சி, மக்கள் தொகை, நம்முடைய தேவை என பல காரணிகள் நம்மைத் தூண்டிவிட்டு, ஒரு வித சுயநலத்தோடு நாம் பசுமையை மறந்து, கான்க்ரீட் காட்டுக்குள் வாழப் பழகிவிட்டோம். பசுமை இப்போது புதிதாய் கட்டப்பட்ட வீட்டுச் சுவறில் வாஸ்து பரிந்துரைத்த வண்ணமாகத்தான் இருக்கின்றது.

போட்டியும், ஏக்கமும், ஆற்றாமையும் நம்மை வேகமாக ஓடத் தூண்டுகிறது. உலகம் , உலக வெப்பமயமாதல் பற்றிய கவலை எல்லாருக்கும் இருந்தாலும், வெளிக்காட்ட முடியாத சூழலில் நம் வாழ்க்கை நம்மை அழைத்துச் செல்கிறது.வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும், ஓடிக்கொண்டே இருக்கின்றோம், நம் ஓட்டத்திற்கு விஞ்ஞானம் வேகமாய் வழி காட்டுகிறது, அதன் விலையோ நம் இயற்கை.   

ஆமால்ல, ஒரு காலத்துல எங்க வீட்டுல, தோட்டத்துல பசுமையா இருந்துச்சு... அப்ப எங்க வீட்டு முன்னாடி ரெண்டு பெரிய வேப்ப மரம் நின்னுச்சு.... இந்த இடமெல்லாம் ஒரே பசுமையா இருந்துச்சு என்கிற ஏக்கத்துடனே வாழ்க்கையை அதன் போக்கில் ஒத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளுக்கு நேரில் காட்ட முடியாமல், சொல்லக் கூடிய கதைகளாய் மாறிப்போச்சு நாம் வாழ்ந்த இயற்கை ஒத்த வாழ்வு.


என்ன செய்யலாம்... வீடுகளை இடித்து விட்டு மரங்களை நட்டு, சிறு குடிசை போட்டு வாழ்ந்து விடலாமா என்றால், என்னைத் தூக்கிப் போட்டு எத்தி விடுவீர்கள்.... வேறென்ன செய்யலாம்.... நம்முடைய தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது... தேவை மிஞ்சிய தேடலில் நம்மை விழுங்கும் நிழல்களாய் நம்முடைய எதிர்பார்ப்புகள் இந்த வாழ்க்கையின் மேல் பெருகிக் கொண்டே இருக்கின்றது.  என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என சிந்தித்திக் கொண்டிருக்கும் வேளையில், நம்மில் சிலர், நம் நாட்டைச் சேர்ந்தவர்கள், என்ன செய்திருக்கிறார்கள் என்பதையும் சற்றுப் பார்ப்போமா!?

இவர்களைப் பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள், இருந்தாலும் பகிர்ந்து கொள்கிறேன்.

திம்மக்கா...

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு வயது இப்பொழுது 80 ஆகிறது, இவரது கணவர் பெயர் சிக்கண்ணா. இவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லை. இதன் பொருட்டு உற்றார் உறவினர்களின் அவதூறுப் பேச்சுகளால் மனம் நொந்து போயிருந்த திம்மக்கா, தனது 28 வயதில் தனது கூதூர் கிராமத்தின் சாலையின் இரு மருங்கிலும் ஆல மரத்தை நட்டு இருக்கிறார். ஆனால் அப்பொழுது அந்த ஊரில் தண்ணீர் அவ்வளவாக கிடைக்கவில்லையாம். அதற்காக நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி மரங்களைப் பிள்ளைகள் போல பேணி வளர்த்திருக்கிறார். பின்பு ஊரிலேயே சில குட்டைகளை உருவாக்கி, மழைத் தண்ணீரை சேமித்து மரங்களுக்கு ஊற்றி வளர்த்திருக்கிறார் கடந்த ஐம்பது ஆண்டுகளாக.


அவரைப் பெருமைப்படுத்தும்விதமாக, சுற்றுச்சூழலின் நண்பன் என்ற விருதை அமெரிக்கா அவருக்கு வழங்கியிருக்கிறதாம், அது போக மேலும் பல விருதுகளை வாங்கியிருக்கிறாராம். கர்நாடக அரசு அவருக்கு உதவித் தொகையாக மாதம் ரூ500 வழங்கி, பெங்களூருவில் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் வழங்கியிருக்கிறதாம். தன்னுடைய கணவர் சிக்கண்ணா இறந்து பிறகும், கூதூரில் இருக்கும் என் பிள்ளைகளாகிய மரங்களை விட்டு வர இயலாது என்று கூறி பெங்களூரு வீட்டை அரசிடமே திருப்பி கொடுத்து விட்டு, கூதூரிலேயே அரசின் ஓய்வூதியத்தோடு வாழ்ந்து வருகிறாராம்.

திம்மக்காவின் பிள்ளைகளாகிய மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாய், அரசுக்குச் சொந்தம். எப்பேர்பட்ட தன்னலமற்ற சேவையை இந்த நாட்டிற்கு வழங்கியிருக்கிறார் என்று நாமும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தச் சுற்றுச் சூழலுக்கு ஒரு மரம் கூட நாம் இதுவரை நாம் வளர்க்காத வேளையில் ஒரு தாய் எத்தனை மரங்களை வளர்த்து பராமரித்திருக்கிறார், அவரால் கூதூர் கிராமம் இன்று குளுமையாக இருக்கின்றது. அந்தத் தாயுள்ளம் வாழ்க.

மேலும் தகவல்களுக்கு இவரைப் பற்றி இணையத்தில் தேடலாம்...


ஜாதவ் பயேங்:


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாதவ் பயேங் என்பவர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறாராம். 1979 ஆண்டு பிரம்புத்திரா ஆற்றில் வந்த  வெள்ளம் வடிந்த பிறகு, அங்கு பல ஊர்வன பறப்பன இறந்து கிடந்திருக்கின்றன. மரங்கள் இல்லாத்தால் வெப்பத்தால் இந்த உயிரினங்கள் அழிந்தன என்று அறிந்த அவர் வனத்துறையை அணுகி விசாரித்ததில் மணல் படுகையில் மரங்கள் வளராது, மூங்கில் மரங்களை வேண்டுமானால வளர்க்க முயற்சி செய்யலாம் என்று கூறியிருக்கின்றனர்.



அப்போது அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் 200 ஹெக்டேர் மணற்படுகையில் சமூக காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரம் வளர்க்கும் பணியில் இவரும் இணைந்திருக்கிறார். பணி முடிந்து அனைவரும் திரும்பியதும், இவர் மட்டும் அனுமதி கேட்டு அங்கேயே தங்கியிருந்திருக்கிறார். பின்பு மற்ற மரங்களை வளர்க்க முயற்சித்திருக்கிறார், மணல் ஏதுவாக இல்லாததால்,  தன் கிராமத்தில் சிவப்பு எறும்புகளை கொண்டு வந்து அங்கே விட்டிருக்கிறார்.  சிவப்பு எறும்புகள் மண்ணின் தன்மையை செழிப்பாக மாற்றுமாம். பின்பு அங்கு பல மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். இப்பொழுது 300 ஹெக்டேர் பரப்பளவில் பெரும் காடாக மாறியிருக்கிறது அந்த இடம். பல பறவைகளும் விலங்குகளும் வாழுமிடமாக மாறியிருக்கிறது.

வாழ்க ஜாதவ் பயேங்.

மேலும் தகவல்களுக்கு இவரைப் பற்றி இணையத்தில் தேடலாம்...


வெளியூர்க்காரங்களா சொல்லிக்கிட்டு இருக்கேனா? நம்ம ஊரு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எவ்வளவோ கண்டுபிடிச்சு சொல்லியிருக்கார்



அவரைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். அவர் சொன்னதில் ஒரு கருத்தை மட்டும் இங்க சொல்லிக்கிறேன். அதாவது,
ஒவ்வொருத்தரும் பிள்ளை மாதிரி ஒரு மரமாவது வளருங்கள்.” இன்னும் இவர் சொல்லும் இயற்கை விவசாயம், உணவு முறை என பல கருத்துக்கள் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன. நேரம் கிடைத்தால் தேடிப் பாருங்கள்

மேலே கூறிய மூவரைப் பற்றியும் செய்தித்தாள்களில் படித்தவற்றை தங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.


நாம் என்ன செய்யப் போகிறோம்:

சரி, இவர்கள் செய்ததைப் பார்த்தோம், நாம் என்ன செய்யப் போகிறோம். இவர்களைப் போல மரங்களோ, காடுகளோ நம்மால் உருவாக்க முடியுமா?
பெரிய கேள்வி தொக்கி நிற்கிறது! இயற்கையைப் பேணி காக்க நம்மால் இயன்றதை நேரடியாகவே மறைமுகமாகவோ செய்யலாம்.  

இந்த மாதிரி நம் வசிக்கும் கட்டிடம் முழுவதும் மரம் வளர்க்க முடியாவிட்டாலும்



நம் வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு இடத்தில், இடமிருந்தால் ஒரு மரத்தை வளர்க்கலாம்... மரம் வளர்க்கும் அளவுக்கு இடமில்லையா? ஒரு செடியையாவது வளர்க்கலாம்... தொட்டிகளில் செடி வளர்க்கலாம்... இது ஒரு பொழுது போக்காகவும் இருக்கும், ஒரு நல்ல மன அமைதியையும் கொடுக்கும். அலுவலகம் கிளம்பும் முன், வேலை முடிந்து வந்த பின்பு அல்லது ஓய்வு நேரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, செடியையோ மரத்தையோ சுற்றிப் பார்க்கும் போது ஒரு வித மகிழ்ச்சி கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

இது எதுவும் செய்ய இயலவில்லையா? சரி இன்னொன்று செய்யலாம் வாருங்கள். அவ்வப்போது திடீரென சில சமூக ஆர்வலர்கள் எதாவது ஒரு திட்டத்தின் கீழ் ஆங்காங்கே மரங்களை நட்டு, அதை ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டு, பின்பு அதைச் சுற்றி கம்பி வலை போட்டு விட்டு, அன்றோடு மறந்து போயிருப்பார்கள். ”மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவானுஅந்த மரமும் ஏங்கித் தவித்து கடைசியில் கருகிப் போகும். சுற்றிப் போடப்பட்டிருந்த கம்பி வலை எங்கோ ஒரு பழைய இரும்புக் கடையில் கிடக்கும். அது போல பராமரிப்பாரற்றுப் போன மரங்களையோ செடியையோ கண்டால் நம்மால் இயன்றளவுக்கு நாள்தோறும் தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம்.

அடப்போங்க, இதெல்லாம் எங்க போய் தேடுறதுனு நினைச்சா, இன்னொன்னும் செய்யலாம்... மறைமுகமாக மரம் வெட்டுவதைத் தடுக்கலாம். அலுவலகத்தில் ப்ரிண்டர் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எதை எடுத்தாலும் பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்குவதை தவிர்க்கலாம். இப்பொழுது எல்லா கோப்புகளையும் கைபேசியில் அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து நிற்கிறது. கணினி மயமான உலகத்தில் எலக்ட்ரானிக் கோப்புகளை பாதுகாக்க, பல ஜிபி (Gigabyte) கொள்ளவு கொண்ட USB Flash Drive கள் கிடைக்கின்றன. காகிதங்களில் பிரதி எடுக்காமல் வேண்டுமானவற்றை இவற்றில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். .

அதற்கும் மேலாக மேகத்திலும் சேமித்து வைக்க தொழில்நுட்பம் துணைபுரிகிறது, என்னங்க குழம்பிட்டீங்களா, Cloud Storage தொழில்நுட்பத்தைச் சொன்னேன். இன்றைய தகவல் தொழில்நுட்பம் அளிக்கும் இந்தச் சேவையை பயன்படுத்தி மேலே மேகத்தில் ஏற்றி வைத்து விட்டு, வேணுங்கிறப்ப இறக்கிப் பார்த்துக் கொள்ளலாம் :-). காகிதங்களை வீணாக்க கூடாது என்பதை அறிவுறுத்துவதற்காகவே இப்பொழுது அலுவலக மடல்களின் சிக்னேச்சரில் P Think GREEN - Natural resource isbalanced on our planet, do not consume more than required - be considerate & rational inuse !! இது போன்று சேர்த்துக் கொள்கிறோம். தயவுசெய்து காகிதங்களை வீணாக்காமல், தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோம்.

மரம் வளர்ப்பை மற்றும் பேசுகிறேனே, தண்ணீரைப் பற்றி பேசவில்லை என்று நினைக்கிறீர்களா... மரம் வளருங்கள்... தண்ணீர் தானா வரும்....

இயற்கையைப் பேணுவொம்...

மரம் வளர்ப்போம்....

அலுவலகங்களில் தேவையில்லாமல் பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்....

அடுத்த பதிவில் நீர் வளம் மற்றும் பாதுகாப்பைப் பற்றிப் பார்க்கலாம்..



அனைவருக்கும் நன்றி....

(நன்றி: அனைத்துப் படங்களும் இணையத்தில் இருந்து)